Primary tabs
-
4.5வன்புறையும் தெளிவும்
வன்புறை களவுக்குரிய கிளவித் தொகைகளுள் ஒன்று.
வன்பு - வலிமை ; உறை - உறுத்தல், வற்புறுத்திக் கூறுதல்.
தலைவி ஐயுற்றவழித் தலைவன் அவளது ஐயம் தீர உண்மையை வற்புறுத்திக் கூறுதல் வன்புறை எனப்படும்.
4.5.1வன்புறை இருவகைப்படும். அவையாவன:
- ஐயம் தீர்த்தல்
- பிரிவு அறிவுறுத்தல்
- ஐயம் தீர்த்தல்
தலைவிக்கு உண்டான ஐயத்தைத் தலைவன் தீர்த்து வைத்தல் ஐயம் தீர்த்தல் எனப்படும். இது,
-
கலைந்துபோன தன் அணிகலனைச் சரிசெய்து தலைவன் அணிவிக்க அது மாறுபட்டுள்ளதைக் கண்டு தோழி ஐயுறுவாள் என்று கருதிய தலைவியின் ஐயம் தீர்த்தல்.
-
மீளவும் வருவேன் என்று, தான் கொண்டுள்ள அளவுக்கதிகமான காதலைக் கூறித் தலைவன் ஐயம் தீர்த்தல்.
-
‘விதி நம்மைப் பிரிக்காது’ என ஊழின் வலிமையைக் கூறித் தலைவியின் ஐயம் தீர்த்தல்.
என மூன்று உட்பிரிவுகளை உடையது.
- பிரிவு அறிவுறுத்தல்
தலைவன் தன் பிரிவைத் தலைவிக்குத் தெரிவித்தல் பிரிவு அறிவுறுத்தல் எனப்படும். இது வன்புறையின் இரண்டாம் வகை. இது,
- பிரியமாட்டேன் எனல்.
- பிரிந்து மறுபடியும் திரும்பி வருவேன் எனல்.
- தான் பிரிந்து செல்லும் இடம் அருகில்தான் உள்ளது எனல்.
என மூன்று உட்பிரிவுகளை உடையது.
4.5.2இது களவிற்குரிய கிளவித்தொகைகளுள் ஒன்று. தலைவன் தனது நிலைப்பாட்டை வற்புறுத்தி உரைப்பது வன்புறை என்று கண்டோம். அந்த வன்புறை வார்த்தைகளை ஏற்று, ‘தலைவன் சொல்வது உண்மையானதுதான்; ஏற்புடையதுதான்’ என்று தெளிந்து தலைவி ஆற்றியிருப்பது தெளிவு எனப்படும்.
தலைவன் மாற்றம் தலைவி தேற்றம்
தெளிவாம் என்பர் (13)என்பது இலக்கண நூற்பா.