Primary tabs
2.1 வாகைப் படலமும் துறைகளும்
வெட்சி முதல் தும்பை வரையான திணைகள் போர்த்திணைகள் என்பது நீங்கள் அறிந்த செய்தி. போர் நிகழ்வுகளை அடுத்து வெற்றியைக் கொண்டாடுவது மரபு. வெற்றியைப் பற்றிக் கூறுவது வாகைப்படலம். போர் நிகழ்த்துகையில் வெட்சி முதல் தும்பை வரையிலான பூமாலைகளை அணிந்து போர் செய்வதைப் போல, வெற்றி பெற்றவர்கள் வாகை மாலை சூடிக் கொண்டாடுவார்கள். எனவே, இது வாகை எனப்படுகிறது. இப்பொழுதும் வெற்றி வாகை சூடினான் என்று சொல்கிற வழக்கு இருப்பது உங்களுக்குத் தெரியும். வாகைப்படலம், அரனது வெற்றி பற்றி (போர் வெற்றி) மட்டுமன்றிப் பார்ப்பனர் முதலான பிறரது வெற்றி குறித்தும் பேசுகிறது.
வாகைத் துறைகள் 32. அவை,
1.வாகை அரவம்2.அரச வாகை3.முரச வாகை4.மறக்களவழி5.களவேள்வி6.முன் தேர்க்குரவை7.பின் தேர்க்குரவை8.பார்ப்பன வாகை9.வாணிக வாகை10.வேளாண் வாகை11.பொருந வாகை12.அறிவன் வாகை,13.தாபத வாகை14.கூதிர்ப் பாசறை15.வாடைப் பாசறை16.அரச முல்லை17.பார்ப்பன முல்லை18.அவைய முல்லை19.கணிவன் முல்லை20.மூதின் முல்லை21.ஏறாண் முல்லை22.வல்லாண் முல்லை23.காவல் முல்லை24.பேராண் முல்லை25.மற முல்லை26.குடை முல்லை27.கண்படை நிலை28.அவிப்பலி29.சால்பு முல்லை30.கிணை நிலை31.பொருளொடு புகறல்32.அருளொடு நீங்கல்ஆகியன. தொல்காப்பியர் சுட்டாத வாகை அரவம், முரச வாகை, களவேள்வி, அரச முல்லை, பார்ப்பன முல்லை, கணிவன் முல்லை, மூதின் முல்லை, ஏறாண் முல்லை, காவல் முல்லை, பேராண் முல்லை, மற முல்லை, குடை முல்லை, கண்படை நிலை, கிணை நிலை என்னுமிவை புறப்பொருள் வெண்பா மாலையில் மிகுதியாகக் கூறப்பட்டுள்ளமை வாகைத் திணை வளர்ச்சியைக் காட்டுகிறது எனலாம்.