தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உய்த்தல்இல் பொருண்மை

  • 6.5 உய்த்தல்இல் பொருண்மை

    ஒரு செய்யுள் தான் கூற வந்த கருத்தை எடுத்துரைக்க வேறு ஒரு சொல் வேண்டப்படாமல், தன்னகத்தேயே உரிய சொற்களைப் பெற்றுத் திகழும் தன்மை, உய்த்தல்இல் பொருண்மை எனப்படும்.

    கருதிய பொருளைத் தெரிவுற விரித்தற்கு
    உரியசொல் உடையது உய்த்தல்இல் பொருண்மை (22)

    என்பது தண்டியலங்காரம்.

    சான்று : 1

    நால்வர் நான்மணிமாலையில் சிவப்பிரகாச சுவாமிகள் சுந்தரரை நோக்கி வினவுவதாக அமையும் பாடல் ஒன்று :

    போதம் உண்ட பிள்ளை என்பு
        பொருகண் மாது செய்ததோ
    காதல் கொண்டு சொல்லின் மன்னர்
        கல்மி தப்ப உய்த்ததோ
    வாய்தி றந்து முதலை கக்க
        மகனை நீஅ ழைத்ததோ
    யாது நம்பி அரிது நன்று
        எனக்கு இயம்ப வேண்டுமே (12)

    (போதம் = ஞானப்பால்
    பொருகண்
    = காதை மோதும் கண்
    சொல்லின் மன்னர்
    = நாவுக்கரசர்
    நன்று
    = நல்லது, பெரியது)

    ‘ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தர், மயிலாப்பூரில் பாம்பு தீண்டி இறந்து சாம்பராகிக் கிடந்த பூம்பாவையை அழகிய பருவப் பெண்ணாக்கினார். திருநாவுக்கரசர் சமணர் கல்லில் கட்டிக் கடலில் தம்மை இட்ட போது அக்கல்லோடு மிதந்து வந்தார். சுந்தரமூர்த்தியாகிய தாங்கள், முன்பு ஒரு காலத்து, குளத்திலிருந்த ஓர் முதலையானது அந்தணச் சிறுவனை விழுங்கிய நிலையில் நீரையும் முதலையையும் வரவழைத்து அதன் வாயிலிருந்து அச்சிறுவனையும் மீட்டளித்தீர்கள். உங்கள் மூவர் செயல்களுள் எவர் செயல் சிறந்தது? எனக்குக் கூறுக’ என்பது பாடற்பொருள்.

    வேறு சொற்களை வரவழைக்க வேண்டிய நிலையின்றி, செய்ததோ? உய்த்ததோ? அழைத்ததோ? யாது அரிது? எனக் கேட்பதாக அமைந்து ‘உய்த்தல்இல் பொருண்மை’க்குச் சான்றாகிறது இப்பாடல்.

    உய்த்தல்இல் பொருண்மை வைதருப்பம், கௌடம் ஆகிய இரு நெறியார்க்கும் உடன்பாடாகும்.

    தண்டியலங்காரத்துக்கு உரைவரைந்த புலியூர்க்கேசிகன் அவர்கள், ‘உய்த்துணர்தல்’ மட்டுமே கௌட நெறியார்க்கு உடன்பாடு; உய்த்தல்இல் பொருண்மை உடன்பாடன்று என்பார். (வர்த்தமானன் பதிப்பகம், 1989, ப.29)

    இதே பாடலுக்கு ‘உய்த்தல் பொருண்மை’ நிலையிலும் பொருள் காணலாம்.

    திருஞான சம்பந்தர், சாம்பராகிய பொருளைக் கொண்டுதான் பெண்ணை உயிர்ப்பித்தார் திருநாவுக்கரசர் கல்லாகிய பொருளைக் கொண்டுதான் கரையேறினார். ஆனால் சுந்தர மூர்த்தியாரோ இல்லாத நீரையும் முதலையையும் வரவழைத்து, அம்முதலையின் வாயிலிருந்து பிள்ளையையும் வரவழைத்தார். எனவே சுந்தரர் செயலே சிறந்தது என்பதாம். இவற்றுள் யாது அரிது என ‘இவற்றுள்’ என்னும் சொல்லை வரவழைப்பதும், பொருள் அடிப்படையில் உரிய விளக்கம் காண்பதும் என ‘உய்த்தல்பொருண்மை’ இதில் அமைந்துள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 13:04:27(இந்திய நேரம்)