Primary tabs
-
3.4 இடைக்காலத்தில் சொல்லுருபுகள்
இடைக்காலத்தில் சொல்லுருபுகளின் வழக்கு, சங்க காலத்தை விட அதிகமானது. புதிய சொல்லுருபுகளின் வழக்கும் வரத் தொடங்கியது. இடைக்காலத்தில் வேற்றுமைப்பொருளை உணர்த்தும் உருபுகளோடு, எவை எவை சொல்லுருபுகளாக வழங்கி வந்தன என்பதைப் பின்வரும் பட்டியல் காட்டும்.
வேற்றுமைவேற்றுமை உருபுசொல்லுருபுமூன்றாம் வேற்றுமை (கருவிப்பொருள்)ஆன், ஆல்
கொண்டுமூன்றாம் வேற்றுமை
(உடனிகழ்ச்சிப்பொருள்)ஒடு, ஓடுஉடன்நான்காம் வேற்றுமைகுபொருட்டு*, நிமித்தம்*ஐந்தாம் வேற்றுமை
(நீங்கல்பொருள்)இன், இல்இருந்து*, நின்று*ஆறாம் வேற்றுமைஅதுஉடைய*(* - உடுக்குறியிடப்பட்டவை இடைக்காலத்தில் வந்து வழங்கிய புதிய சொல்லுருபுகள்.)
ஏழாம் வேற்றுமையைப் பொறுத்தவரை, தொல்காப்பியர் இடப்பொருள் உணர்த்தும் சொற்களாகக் குறிப்பிட்டவற்றுள் பல சொற்கள் சங்க காலத்தைப் போலவே இடைக்காலத்திலும் சொல்லுருபுகளாக வழங்கின. மேலும் வாய், திசை, வயின், பாடு, வழி, உழி, உளி போன்ற சொல்லுருபுகள் இடப்பொருளை உணர்த்தப் புதிதாக வந்து வழங்கின.
இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் சொல்லுருபுகளின் ஆட்சியைப் பின்வரும் சான்றுகள் காட்டும்.
கொண்டு
ஓடும் திமில் கொண்டு உயிர்கொல்வர் நின்ஐயர்
(சிலப்பதிகாரம், 7 : 19-1)(திமில் = படகு ; திமில்கொண்டு - படகால்)
உடன்
உயிருடன் சென்ற ஒருமகள் (சிலப்பதிகாரம், 25 : 107)
பொருட்டு
புறவு ஒன்றின் பொருட்டாகத் துலைபுக்க பெருந்தகை
(கம்பராமாயணம்)(புறவு = புறா ; புறவு ஒன்றின் பொருட்டாக - புறா ஒன்றினுக்காக)
நின்று
வான்நின்று இழிந்து வரம்பு இகந்த
மாபூதத்தின் வைப்பு எங்கும்
(கம்பராமாயணம், 1399:1)(வான் நின்று = வானிலிருந்து)
உடைய
இரண்டன் உடைய உண்மையைக் காட்டுதல்
(மணிமேகலை, 29:387)இடைக்காலத்தில் தோன்றிய இலக்கிய நூல்களில் சொல்லுருபுகள் எந்த அளவு பயின்று வந்துள்ளன என்பதை இதுகாறும் பார்த்தோம். இனி இடைக்காலத்தில் எழுந்த இலக்கண நூல்கள் சொல்லுருபுகள் பற்றிக் குறிப்பிடும் கருத்துகளைப் பார்ப்போம்.
வீரசோழியம்
இந்நூலை இயற்றியவர் புத்தமித்திரனார். காலம் கி.பி.11ஆம் நூற்றாண்டு. இவர் தமிழ்மொழிக்கு வடமொழி இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு இலக்கணம் அமைத்து எழுதிய நூல் வீரசோழியம். இந்நூல் சொல்லுருபு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. எனினும் இந்நூல் ஏழாம் வேற்றுமைக்கு மட்டும் கே, உழை, வயின், பக்கல், உழி, இல், கண் ஆகிய ஏழு உருபுகளைக் குறிப்பிடுவது கருதத்தக்கது. இவற்றுள் கண் என்பது நீங்கலான ஏனை ஆறு உருபுகளும் சொல்லுருபுகள் ஆகும்.
நன்னூல்
இந்நூலை இயற்றியவர் பவணந்தி முனிவர். காலம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு. இவர் தொல்காப்பியத்தை அடியொற்றி இயற்றிய நூலே நன்னூல். எனவே தொல்காப்பியத்தைப் போலவே நன்னூலும் சொல்லுருபு பற்றி எதுவும் கூறவில்லை. எனினும் ஏழாம் வேற்றுமைக்குக் கண் என்னும் உருபோடு தொல்காப்பியர் கூறியுள்ள உருபுகளோடு வாய், திசை, வயின், முதல், பாடு, அளை, வழி, உளி, இல் என்னும் ஒன்பதனையும் சேர்த்துக்
கூறுகிறார்.கண்கால் கடைஇடை தலைவாய் திசைவயின்
முன்சார் வலம்இடம் மேல்கீழ் புடைமுதல்
பின்பாடு அளைதேம் உழைவழி உழிஉளி
உள்அகம் புறம்இல் இடப்பொருள் உருபே
(நன்னூல், 302)நன்னூலார் இந்நூற்பாவில் முதற்கண் குறிப்பிடும் கண் என்பதே ஏழாம் வேற்றுமை உருபு ஆகும். ஏனைய 27 உருபுகளும் ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபுகள் ஆகும்.
பிரயோக விவேகம்
இந்நூலை இயற்றியவர் சுப்பிரமணிய தீட்சிதர். காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. இந்நூல் வீரசோழியத்தின் வழியிலே, வடமொழி மரபைப் பின்பற்றி எழுதப்பட்டுள்ள நூலாகும். இந்நூல் ஒவ்வொரு வேற்றுமைக்கும் உரிய வேற்றுமை உருபுகளைக் கூறும்போது, அவ்வேற்றுமைகளுக்கு உரிய சொல்லுருபுகளையும் சேர்த்தே கூறுகிறது.
கூறிய ஐ இரண்டு ; ஆன் - ஒடு மூன்று ;
குவ்வோடு பொருட்டு
ஏறிய நான்கு ; மற்று ஏழொடு கூடி
இயைந்த நின்றோடு
ஆறிய இன் ஐந்து ; அது-கு-உடைய -
அ - ஆறு ; இல்-கண் ஏழ்
தேறிய சத்தம் இவற்றுள்ளும்
அத்தம் சில உளவே
(பிரயோக விவேகம், 6)இந்நூற்பாவில் பிரயோக விவேகம் குறிப்பிடும் சொல்லுருபுகள் வருமாறு :
பொருட்டு - நான்காம் வேற்றுமை
நின்று - ஐந்தாம் வேற்றுமை
உடைய - ஆறாம் வேற்றுமைசான்று :
கூலியின் பொருட்டு வேலை செய்தான்
மலையின் நின்று வீழ் அருவி
சாத்தனுடைய புதல்வன்
-
இலக்கணக்கொத்து
இந்நூலை இயற்றியவர் சுவாமிநாத தேசிகர். காலம் கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. இவர் புத்தமித்திரனாரைப் போல, வடமொழியின் இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழுக்கு இலக்கணம் எழுதிய நூலே இலக்கணக்கொத்து. தமிழ்மொழி வரலாற்றில் சொல்லுருபு என்ற சொல்லாட்சியை முதன்முதலில் கையாள்பவர் இவரே.
சுவாமிநாத தேசிகர் வேற்றுமைப்பொருளை உணர்த்தும் உருபினை உருபு, வேறு உருபு, சொல்லுருபு என மூவகையாகப் பாகுபடுத்திக் கூறுகிறார்.
உருபு, வேறு உருபு, சொல் உருபு என்ன
வேற்றுமை உருபு மூன்றுஎன விளம்புவர்
(இலக்கணக்கொத்து. 16)1. உருபு
ஒரு வேற்றுமைக்கு உரிய பொருளை அவ்வேற்றுமைக்கு உரிய உருபு உணர்த்துவது.
சான்று :
வாளால் வெட்டினான்.
இங்கு ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமை உருபு, அவ்வேற்றுமைக்குரிய
கருவிப்பொருளை உணர்த்துகிறது.2. வேறு உருபு
ஒரு வேற்றுமைக்கு உரிய பொருளை, வேறொரு வேற்றுமைக்கு உரிய உருபு உணர்த்துவது.
வாளின் வெட்டினான்
இங்கு மூன்றாம் வேற்றுமைக்கு உரிய கருவிப்பொருளை இன் என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு உணர்த்துகிறது.
3. சொல்லுருபு
ஒரு வேற்றுமைக்கு உரிய பொருளை அவ்வேற்றுமைக்கு உரிய உருபால் உணர்த்தாமல், சொல்லுருபால் உணர்த்துவது.
சான்று :
வாள் கொண்டு வெட்டினான்
இங்கு மூன்றாம் வேற்றுமைக்கு உரிய கருவிப் பொருளைக் கொண்டு என்னும் சொல்லுருபு உணர்த்துவதைக் காணலாம்.