தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- சங்க காலத்தில் சொல்லுருபுகள்

  • 3.3 சங்க காலத்தில் சொல்லுருபுகள்

    சங்க காலத்தில் தோன்றிய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இலக்கியங்களில் வேற்றுமைப்பொருளை உணர்த்த வேற்றுமை உருபுகளே அல்லாமல், சில தனிச்சொற்கள் சொல்லுருபுகளாக வழங்கின. எனினும் அவ்விலக்கியங்களில் வேற்றுமை     உருபுகளின்     ஆட்சியை     நோக்கும்போது சொல்லுருபுகளின் ஆட்சி மிகவும் குறைவாகவே உள்ளது. கொண்டு, உடன், வயின் போன்ற ஒரு சில சொல்லுருபுகள் மட்டுமே வேற்றுமைப்பொருளில் ஆட்சி புரிகின்றன.

  • கொண்டு
  • இச்சொல்லுருபு மூன்றாம் வேற்றுமைக்கு உரிய கருவிப்பொருளை உணர்த்த வழங்குகிறது. இது சங்க இலக்கியத்தில் ஓரிடத்தில் மட்டுமே காணப்படுகிறது.

    சான்று:

      

    ஒருகணை கொண்டு மூஎயில் உடற்றி (புறநானூறு, 55:2)

    (கணை = அம்பு; கணைகொண்டு = கணையால், அம்பால்)

    இத்தொடரில் கொண்டு என்னும் சொல்லுருபு, ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை உருபுக்கு உரிய கருவிப்பொருளைத் தனி ஒரு சொல்லாக நின்று உணர்த்துகிறது.

  • உடன்
  • இச்சொல்லுருபு சங்க இலக்கியத்தில் சில இடங்களில் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உடனிகழ்ச்சிப் பொருளில் வருகிறது.

    சான்று:

      

    பலர்உடன் கழித்த ஒள்வாள் மலையனது
                    
    (நற்றிணை, 170:7)

    (பலர் உடன் = பலரோடு; கழித்த = சென்ற)

    இத்தொடரில் உடன் என்ற சொல்லுருபு, ஒடு அல்லது ஓடு என்னும் மூன்றாம் வேற்றுமை உருபுக்கு உரிய உடனிகழ்ச்சிப் பொருளைத் தனியே நின்று உணர்த்துகிறது.

  • வயின்
  • சங்க கால இலக்கியத்தில் வயின் என்னும் சொல்லுருபு நான்காம் வேற்றுமைக்கு உரிய பொருளில் வழங்குகிறது.

    சான்று:

      

    பொருள்வயின் பிரிவோர் உரவோர் ஆயின்
                 (குறுந்தொகை, 20:2)

    (பொருள்வயின் = பொருளுக்காக)

    இத்தொடரில் வயின் என்னும் சொல்லுருபு, கு என்னும் நான்காம் வேற்றுமைக்கு உரிய பொருளை உணர்த்தக் காணலாம்.

    சொல்லுருபுகள் சங்க இலக்கியங்களில் ஓரளவு காணப்படுவதை மேலே பார்த்தோம். சங்க இலக்கியங்களுக்குக் காலத்தால் சற்று முற்பட்டது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலாகும். இந்நூலில் தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் அமைந்த வேற்றுமை இயலில், ஒவ்வொரு வேற்றுமைக்கும் உரிய உருபுகளை மட்டும் கூறுகிறாரே தவிர, அவ்வேற்றுமைகளுக்கு உரிய சொல்லுருபு பற்றி எதுவும் கூறவில்லை. ஆயினும் அவர் ஏழாம் வேற்றுமைக்கு உரிய இடப்பொருளை உணர்த்தும் சொற்களாகக் குறிப்பிடுவன கொண்டு, உடன் என்பன போன்ற சொல்லுருபுகளே ஆகும் என்பது தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்கு உரை     எழுதிய சேனாவரையர் கருத்தாகும்.

    தொல்காப்பியர் ஒவ்வொரு வேற்றுமைக்கும் ஓரிரண்டு உருபுகளையே குறிப்பிடுகின்றார். அவை வருமாறு :

    இரண்டாம் வேற்றுமை
    -
    மூன்றாம் வேற்றுமை
    -
    ஒடு, ஆன்
    நான்காம் வேற்றுமை
    -
    கு
    ஐந்தாம் வேற்றுமை
    -
    இன்
    ஆறாம் வேற்றுமை
    -
    அது
    ஏழாம் வேற்றுமை
    -
    கண்

    ஆனால் ஏழாம் வேற்றுமைக்கு மட்டும் அவ்வேற்றுமையின் பொருளாகிய இடப்பொருளை உணர்த்தக் கண் என்பதோடு, ‘கால், புறம், அகம், உள், உழை, கீழ், மேல், பின், சார், அயல், புடை, தேவகை, முன், இடை, கடை, தலை, வலம், இடம்’ என்னும் பதினெட்டுச் சொற்களைச் சேர்த்துக் குறிப்பிடுகிறார். இச்சொற்களை அவர்,

    கண்கால் புறம்அகம் உள்உழை கீழ்மேல்
    பின்சார் அயல்புடை தேவகை எனாஅ
    முன்இடை கடைதலை வலம்இடம் எனாஅ
    அன்ன பிறவும் அதன்பால என்மனார்                  (தொல்.சொல். 82)

    என்ற வேற்றுமையியல் நூற்பாவில் தொகுத்துக் கூறுகிறார்.

    இந்நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிடும் கண், கால் முதலிய பத்தொன்பதையும்     இளம்பூரணர்     (இவர் தொல்காப்பியம் முழுவதற்கும் உரை வரைந்தவர்) ஏழாம் வேற்றுமை உருபுகள் என்று கூறுகிறார். ஆனால் சேனாவரையர் கண் என்பது மட்டுமே ஏழாம் வேற்றுமைக்கு உரிய இடப்பொருளை உணர்த்தும் வேற்றுமை உருபு என்றும், ஏனைய     கால், புறம் முதலிய பதினெட்டும் அவ்விடப்பொருளை உணர்த்த வந்த சொற்கள் என்றும் குறிப்பிடுகிறார். சேனாவரையர் குறிப்பிடும் இச்சொற்களை இக்கால மொழியியலார் சொல்லுருபுகள் என்று கொள்கின்றனர்.

    சங்க     இலக்கியங்களில்     இச்சொல்லுருபுகளில்     சில பெயர்ச்சொல்லுக்குப் பின்னர் வந்து நின்று ஏழாம் வேற்றுமை இடப்பொருளை உணர்த்துவதைக் காணலாம்.

  • கால்
  • ஊர்க்கால் நிவந்த பொதும்பர்
                 (கலித்தொகை. 56:1)

    (ஊர்க்கால் = ஊர் இடத்தே)

  • உழை
  • குன்று உழை நண்ணிய முன்றில் போகாது
                     (நற்றிணை. 379:2)

    (குன்று உழை = சிறிய மலையின் இடத்து)

  • கீழ
  • மன்றல் வேங்கைக்கீழ் இருந்து
                 (கலித்தொகை. 41
    :43)

    (வேங்கைக்கீழ் = வேங்கை மரத்தின் கீழே)

  • கடை
  • எம்இளநலம் இல்கடை ஒழியச் சேறும்
                     (நற்றிணை. 29
    :7)

    (இல் = வீடு; இல்கடை = வீட்டின்கண்ணே;
         ஒழியச் சேறும் = தங்கிக் கெடும்படியாகச் செல்வோம்.)

  • தலை
  • பெருங்கை யானை இரும்பிடர்த் தலைஇருந்து
                     (புறநானூறு. 3
    :11)

    (இரும்பிடர் = பெரிய கழுத்து; பிடர்த் தலை இருந்து =                  கழுத்திடத்தே இருந்து).

         தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    சொல்லுருபு என்றால் என்ன?
    2.

    தற்காலத் தமிழில் சொல்லுருபு குறிப்புப்பொருள் உணர்த்தி வருவதற்கு ஒரு சான்று தருக.

    3.
    வேற்றுமைப்பொருள் உணர்த்தும் முறை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    4.
    வேற்றுமைப்பொருளை வேற்றுமை உருபால் உணர்த்தும் முறைக்கு ஒரு சான்று தருக.
    5.
    வேற்றுமைப்பொருளை முன்னுருபால் உணர்த்தும் முறை தமிழில் உண்டா?
    6.
    சங்ககால இலக்கியங்களில் வழங்கும் சொல்லுருபுகள் மூன்றனைக் குறிப்பிடுக.
புதுப்பிக்கபட்ட நாள் : 07-08-2017 11:41:38(இந்திய நேரம்)