தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சொற்பொருள் வேறுபடும் முறை

  • 3.1 சொற்பொருள் வேறுபடும் முறை

    ஒரு சொல்லினுடைய பிறப்பாய்வுக்கு, அச்சொல் உணர்த்தும் பொருளும் அப்பொருள் விரிந்து மாற்றமடையும் நிலையும் விரிவாக ஆராயப்பட வேண்டியவை. ஒலித்திரிபுகளையும், உருத்திரிபுகளையும் ஆய்வதால் மட்டும் சொல் மாற்றத்தை முழுமையும் உணர்ந்துகொள்ள இயலாது. அடிச்சொல்லினுடைய பொருளோடு இயைந்த ஒரு பொருள் எத்தகைய மாற்றங்களுக்கு ஆளாகின்றது என்பதைச் சில சான்றுகளின் மூலம் நோக்கலாம்.

    எ.கா:

    (கோடகம் = நாற் சந்தி, குதிரை, புதுமை;
    கடகம் = கங்கணம், வட்டம், ஒரு ராசி;
    சகடம் = வண்டி, சக்கரம், சாகாடு (வண்டி);
    சாகை = கிளை, வேதத்தின் ஒரு பகுதி, இலை, இறப்பு)

    கோடகம் என்னும் சொல் கடகம என ஒலிக்கப்படுகிறது. இஃது ஒலித்திரிபு ஆகும். கடகம் என்பது வட்டத்தைக் குறிப்பதால், வட்டமான சக்கரத்தைக் கொண்ட சகடம என ஒலிமாற்றம் பெறுகிறது. இது நிலைமாற்று ஆகும். செய்யுள் ஓசை முதலிய பல காரணங்களால் அது சாகாடு என நீட்டம் பெறுகிறது. சாகாடு இறுதி நிலை கெட்டு, சாகை என்று மாறுகிறது.

    கடகம் என்ற சொல்லுக்கும் சாகை என்ற சொல்லுக்கும் உள்ள பொருள் தொடர்பை ஆராயாமல் இவ்விரு சொற்களும் ஒத்த பிறப்புடையன என்று நாம் உறுதியாகக் கூறமுடியாது அல்லவா?     எனவே,     சொல்லினுடைய பிறப்பாய்விற்கு, சொற்பொருள் எங்ஙனம் துணைபுரிகிறது என்பதை நம்மால் நன்கு உணர முடியும்.

    3.1.1 உருவம் ஒன்று ; அடிச்சொல் வெவ்வேறு

    ஒரே உருவத்தையுடைய இரு சொற்கள், ஒரே அடிச்சொல்லினின்றும் பிறந்தன என்று நாம் கூறமுடியாது. அவற்றின் அடிச்சொற்கள் வெவ்வேறானவை. இந்த வேற்றுமையை நமக்கு உணர்த்தக் கூடியது அவ்விரு சொற்களுக்கான பொருள் வேற்றுமையே என்று கூறலாம்.

    எ.கா : 1

    போது
    பூ



    நேரம்

    போது என்ற சொல்லின் இவ்விரு பொருளும் ஒன்றோடொன்று பொருள் இயைபு இல்லாதன. எனவே, இவை இருவேறு அடிகளினின்றும் பிறந்து, உருவம் அல்லது வடிவம் (form) ஒத்திருத்தல் வேண்டும்.

    (அ) போது பூவைக் குறிக்கும் பொருள்

             போது < பொந்தி < பொள் < உள்

    (ஆ) போது நேரத்தைக் குறிக்கும் பொருள்

             போது < பொழுது < ஒளி < எல்

    என இருவேறு வரலாறுகளை உடைய இச்சொற்கள் இரு வேறு பொருளைத் தருவதும், இருவேறு அடியினின்றும் பிறப்பதும் எவ்வகையான வியப்புக்கும் உரியதன்று.

    எ.கா : 2

    கெழு முதல்
    கூடுதல், நிறைதல்



    பிரகாசம், நிறம்

    இவ்விரு பொருள்தரும் சொற்களும், உருவத்தில் ஒன்றாக இருப்பினும் பொருளாலும், சொற்பிறப்பாலும் வெவ்வேறு வகையின.

    (அ) கெழுமுதல் நிறைவைக் குறிக்கும் பொருள்

    கெழு (முதல்) < கெழு - மு < குழு -மு < குழை (வளை)

    (ஆ) கெழுமுதல் ஒளி அல்லது நிறத்தைக் குறிக்கும் பொருள்

    கெழுமுதல் < கெழு - மு < எழில் < எழு (எல்) [ஒளி])

    மேற்கூறப்பட்ட இச்சான்றுகளிலிருந்து, சொற்பிறப்பு ஆராய்ச்சிக்கு, சொல்வடிவ ஆய்வு மட்டுமன்றி, பொருள்மாற்ற வரலாறும் மிகத்தேவையான ஒன்றாகின்றது என்பதை உணர முடிகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 08-11-2017 12:49:35(இந்திய நேரம்)