Primary tabs
-
3.0 பாட முன்னுரை
சங்க இலக்கியத்துள் வைதிக சமயம் பற்றிய பதிவுகள் ஏராளமாக உள்ளன. சங்க காலத்திற்குப் பின் தோன்றிய நீதி நூல்கள் சில திருமால் வழிபாடு பற்றிய குறிப்புகளைக் கொண்டுள்ளன. களப்பிரர்கள் தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழர் நாகரிகம் ஆகியவற்றைப் போற்றவில்லை. கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் சமண பௌத்த மதங்களுக்கு எதிர்ப்பாகத் தமிழகத்தில் சைவ வைணவ மதங்கள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றன. சைவத்தைப் போற்றிய நாயன்மார்களும், வைணவத்தைப் போற்றிய ஆழ்வார்களும் திருத்தலங்களுக்குச் சென்று இறைவன் மீது பக்திப் பாடல்களைப் பாடி வழிபட்டனர். பக்தி இயக்கம் நாட்டை ஆண்ட மன்னர்களையும் சாதாரணக் குடிமக்களையும் பக்தி வெள்ளத்தின் இசை இனிமையில் ஈடுபடுத்தியது.
பக்தியால் தமிழும் தமிழால் பக்தியும் வளர்ந்தன; வளம் பெற்றன. தமிழ், பக்தி மொழியாகியது. பக்திக்கு ஓர் ஊடகம் ஆகியதால் தமிழ் மொழியில் பல புதிய இலக்கிய வகைகள் (Genre) தோன்றின.
மானுடனைப் பாடிப் பரிசில் பெற்ற கவிஞர்கள் மானுடக் காதலைப் பதிவு செய்த புலவர்கள் தெய்வத்தை - தெய்வக் காதலைப் பாடி, பாடுபொருள், பாடும் முறை ஆகியவற்றில் மாற்றம் செய்தனர். அம்மாற்றங்கள் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டன. இவற்றை முதலில், முதல் மூவரும் திருமழிசை ஆழ்வாரும் அருளிய பாசுரங்கள் வழிக் காண்போம்.