Primary tabs
- 3.2 பொய்கை ஆழ்வார்
பொய்கை ஆழ்வாரின் முதல் திருவந்தாதியின் முதல் பாசுரம்:
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று(3183)எனத் தொடங்குகின்றது. உலகத்தை விளக்கு ஆகவும் (அகல்), அந்த விளக்கிற்கு நெய்யாகக் கடலையும் ஒளியாகக் கதிரவனையும் வைத்து மாலையாகப் பாசுரங்களைத் திருவடிகளுக்கு அணிவிக்கின்றார் பொய்கையார். எதற்காக என்றால் துன்பக்கடலில் இருந்து நீங்குவதற்காக என்கின்றார்.
இப்பாசுரத்தைப் போன்று பூதத்து ஆழ்வாரும்,
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்(3284)எனப் பாடி, இரண்டாம் திருவந்தாதியைத் தொடங்குகின்றார். தம் தமிழை ஞானத்தமிழ் என்றும், அது திருமாலுக்கு உரியது என்றும் அருளியுள்ளார்.
இப்பாசுரத்தில் அன்பு என்னும் விளக்கு ஆர்வம் என்னும் நெய் ஊற்றப்பட்டு, மனம் என்னும் திரி இட்டு ஞானம் என்னும் சுடர்விளக்காக ஏற்றப் படுவதாகப் பாடுகின்றார் ஆழ்வார்.
இறைவனை எங்கும் தேட வேண்டாம். உன்னிடம் உள்ளான்; உள்ளத் தூய்மையால் மனம் உருகி அவனை நினைத்து வழிபடுங்கள் என்பதை இறைத் தொண்டர்கள் பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி எளிய தமிழில் எடுத்தோதினர்.
மேற்காட்டிய இரு பாசுரங்களும் பக்தியில் முதிர்ந்த கனிகள்; மனித நேயத்தை உலகிற்கு உணர்த்திய ஞானக் களஞ்சியங்கள்; எல்லா நாட்டினருக்கும், எல்லா மக்களுக்கும் உரியதான பண்பைப் பற்றிப் பேசும் ஒளி விளக்குகள்.
இருவர் ஏற்றும் விளக்குகள் எப்படி ஒத்த தன்மையன என்று காண்போமா?
பொய்கையார்பூதத்தார்விளக்குஉலகம் (வையம்)அன்புநெய்கடல்ஆர்வம்திரி---சிந்தை(மனம்)ஒளிகதிரோன்ஞானம் (சுடர்)பொய்கை ஆழ்வார் இடர் (துன்பம்) ஆகிய ஆழி (கடல்) நீங்கச் சொல்மாலை (சொல்லால் தொடுக்கப்பட்ட மாலை) சூட்டுகின்றார் திருமாலுக்கு. பூதத்தாழ்வார் இறைவனைப் பற்றியே நினைக்கும் ஐம்புலன்களையும் அளிக்க மனத்தைத் திரியாக இட்டு ஞானத்தினால் சுடர்விளக்கு ஏற்றி ஞானத் தமிழால் மாலை சூட்டுவதாக முதல் பாசுரத்தில் தம் ஞானச்சிறப்பைப் புலப்படுத்தி உள்ளார்.
இப்படி இரு ஆழ்வார்களின் நோக்கம் அவர்களின் முதல் பாசுரங்களில் முன்மொழியப்படுவது உள்ளம் கொண்டு மகிழ்வதற்குரிய சிந்தனை.
என்று கடல்கடைந்தது? எவ்வுலகம் நீரேற்றது?
ஒன்றும் அதனை உணரேன்நான் - அன்றது
அடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி இதுநீ
படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்(3185)என இறைவனிடம் வினா எழுப்பும் முகமாக அமைத்து வினைச்சொல் வழி இறைவன் செயல்களை வெளிப்படுத்துகிறார் பொய்கையாழ்வார். திருப்பாற் கடலைக் கடைந்தது, வாமனனாக உலகை அளந்தது, இராமனாக இலங்கைக்கு அணைகட்டி அடைத்தது, உலகைப் படைத்தது, மண்ணை உண்டது, உமிழ்ந்தது ஆகிய செய்திகளை ஒரே பாசுரத்தில் சொல்லி விடும் திறன் வியப்பிற்குரியது.
செவிவாய்கண் மூக்குடலென் றைம்புலனும் செந்தீ
புவிகால்நீர் விண்பூதம் ஐந்தும் - அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றார்க் கியல்பு(3195)என்று ஐம்புலன்களாகவும், ஐம்பூதங்களாகவும், ஞானம் (அறிவு), வேள்வி, அறம் ஆகவும் நிற்பது இறைவன் இயல்பு என்பர்.
மேலும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களும் அவனையே நினைத்து உருகவேண்டும் என்பதை,
வாய் அவனை அல்லது வாழ்த்தாது கைஉலகம்
தாயவனை அல்லது தாம்தொழா - பேய்முலைநஞ்சு
ஊணாக உண்டவன் உருவொடு பேரல்லால்
காணாகண் கேளா செவி(3194)
(தாயவன் = தாவியவன், பேய் = பெண் வடிவில் வந்த ஓர் அசுரன்)
என்ற பாசுரம் வழி அறிகின்றோம்.
ஐம்புலன்களும் இறைவனுக்காக என்னும் பாசுரங்கள் சிலப்பதிகாரத்தை நமக்கு நினைவூட்டுகின்றன அல்லவா? ‘உரன் (அறிவு) என்னும் தோட்டியால் ஓரைந்தும் காக்க வேண்டும்’ என்பதில் கருத்தாய் இருந்தார்கள் ஆழ்வார்கள். எனவேதான் பொய்கை ஆழ்வாரே மூன்று பாசுரங்களில் இக்கருத்தைக் கூறுகின்றார். (3246, 3255, 3278)
அன்புஆழி யானை யணுகென்னும் நாஅவன்றன்
பண்புஆழித் தோள்பரவி யேத்தென்னும் - முன்பூழி
காணானைக் காண்என்னும் கண்;செவி கேள்என்னும்
பூணாரம் பூண்டான் புகழ்(3255)அதாவது ஐம்புலன்களும் துளசி மாலைஅணிந்த திருமாலைத் தொழுது (கை), வாழ்த்தி (வாய்), கண்டு (கண்), கேட்டு (செவி) இருக்கக் கட்டளை இடுவதாகச் சொல்லி, தம் நிலையைப் பொய்கை ஆழ்வார் விளக்குகின்றார்.
பேயாழ்வாரும்,
காண்காண் எனவிரும்பும் கண்கள் கதிரிலகு
பூண்தார் அகலத்தான் பொன்மேனி - பாண்கண்
தொழில்பாடி வண்டறையும் தொங்கலான் செம்பொற்
கழல்பாடி யாம்தொழுதும் கை(3418)என்று கண்கள் கார் மேனியானைக் கண்டு, வண்டுகள் (ரீங்காரம்) ஒலிக்கும் மாலையை அணிந்தவனின் திருவடிகளை வணங்கிப் பாடிக் கைதொழுவதாகவும் பாடுகின்றார்.
சங்க அகப்பாடல் புலவர் சிலரும், தெய்வப்புலவர் திருவள்ளுவரும் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலனும் பெண்ணிடம் உள்ளது என்று கூறினர். அந்த மானுடக்காதல் பக்தி இயக்கக் காலத்தில் இறைக்காதலாக - இறைவனின் மீது காதல்கொண்டு பாடும் ஆன்மீகக் காதலாக மலர்ந்ததற்கு மேற்காட்டிய பாசுரங்கள் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
பொய்கை ஆழ்வாரின் பாசுரம் ஒன்று அக்காலத்தில், மக்கள் இறைவனை வழிபட்ட முறைகளைக் குறிப்பிடுகிறது.
அவரவர் தாம்தாம் அறிந்தவா றேத்தி
இவரிவர் எம்பெருமான் என்று - சுவர்மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தி யுருவே முதல்(3197)மக்கள் தாம் அறிந்தவாறு இறைவனைச் சுவரில் சித்திரமாக வரைந்தும், சிலையாக வைத்தும் மனம் உருகி வழிபடலாம் என்று ஆழ்வார் குறிப்பிடுகின்றார் (3197). இப்பாசுர வழி 5-ஆம் நூற்றாண்டளவில் மக்களால் கொள்ளப்பட்ட வழிபாட்டு முறைகளையும் அறிகின்றோம்.
திருமாலின் திருவடி மன அழுக்கை நீக்கும்; வினையை அகற்றும்; செல்வம் சேர்க்கும். எனவே இத்திருவடியை எப்படி அடையலாம் என்பதை,
வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ - கூரிய
மெய்ஞ்ஞானத் தால்உணர்வார் காண்பரே மேலொருநாள்
கைந்நாகம் காத்தான் கழல்(3230)(மதக்களிறு ஐந்து = ஐம்புலன், நிறீஇ = நிறுத்தி, கைந்நாகம் = யானை)
எனவரும் பாசுரத்தால் அறியலாம்.
காத்தற் கடவுளாகிய திருமாலுடன் இணைந்து நிற்பது ஆதிசேடன் என்னும் பாம்பு. இப்பாம்பின் தன்மையை,
சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு(3236)திருமால் நடந்து சென்றால் குடை, அமர்ந்து இருந்தால் அரியணை, நிற்கும்போது காலணி (பாதுகை), இப்படிச் செயல்பாடுகளில் துணையாகின்றது ஆதிசேடன் என்னும் பாம்பு. மற்றும் கடலில் மிதப்பதற்குத் தெப்பமாகவும், விளக்காகவும் (ஒளி) ஆடையாகவும், படுக்கையாகவும் விளங்குவது ஆதிசேடன் என்று அதற்கு ஒரு பாசுரமும் பாடியுள்ளார் பொய்கை ஆழ்வார்.
கூர்மையான நகங்களால் இரணியன் மார்பைப் பிளந்தவன். கருடன் (புள்) மேல் ஊர்பவன்; திருவடிகளால் உலக அளந்தவன்; வெண்ணெய் உண்டவன்; ஆலின் இலை மீது துயின்றவன்; கோவர்த்தனமலையைக் குடையாகப் பிடித்தவன்; கனிசாயக் கன்று எறிந்த தோளான் (3270), குவலையாபீடம் என்னும் யானையை அழித்தவன், கஞ்சனை அழித்தவன் (3222), இராவணனை வென்றவன் (3218) எனப் பலவாறாகத் திருமாலின் சிறப்புகள் பாசுரங்களில் இழையோடிக் கிடக்கின்றன.
• வராக அவதாரம்
இடந்தது பூமி; எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச!-கிடந்ததுவும்
நீரோத மாகடலே; நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது(3222)(இடந்தது = தோண்டியது, கடந்தது = அழித்தது, கஞ்சன் = கம்சன், கிடந்தது = படுத்தது)
என்ற பாசுரம் வினைச்சொல் முன்னும் பெயர்ச்சொல் பின்னும் வந்து மிடுக்கான உணர்வைப் பாடலைப் படிக்கும்பொழுதே ஏற்படுத்துகின்றது; அதே நேரத்தில் ஆழ்வாருக்கு ஆழியான் மீதுள்ள ஈடுபாட்டையும் உணர்த்தி நிற்கின்றது.
• நரசிம்ம அவதாரம்
வடியுகிரால் ஈர்ந்தான் இரணியனது ஆகம்
(3200:3-4)
இரணியனை நகத்தால் கிழித்தவன்.
பொறியுகிரால் பூவடியை யீடழித்த பொன்னாழிக் கையா!
(3276:3-4)
அவன் ஆணவத்தை அழித்து அருளியவன் அவன்.
• இராம அவதாரம்
திருவேங்கடமலை யாருக்குரியது என்றால் ‘முன்பு மாரீசன் இறக்கும்படி அம்பு எய்தவனுக்குரியது’. திருத்தலங்களைச் சுட்டும்போது மாரீசன் மான் வடிவில் வந்த செய்தியைச் சொல்லி, அச்செயலுக்குரியவனுடைய மலை எனப் பாடுகின்றார் (3265). இப்படி இதிகாசக் கதைக் கூறுகள் ஆங்காங்கு அமைந்து பொலிவும் வனப்பும் தோற்றுவித்து இலக்கியப் படைப்பை வளப்படுத்துகின்றன.
• கிருஷ்ண அவதாரம்
அறநூல்கள் பலவும் மணிமேகலை போன்ற நூல்களும் இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை போன்றவற்றைக் காட்டி அறம் செய்யத் தூண்டின; அதுபோல, பக்தி இயக்கம் கண்ட ஞானிகளும் நிலையாமையை உணர்ந்தனர். அதை எடுத்துக்காட்டி மக்களுக்கு இறைவன் மீது அன்பைச் செலுத்தத் தூண்டினர். திருமாலை, சொல் மாலையால், வேள்வியால், தந்திரத்தால், மந்திரத்தால் வழிபாடு செய்யுங்கள்; வீடுபேறு கிடைக்கும் என்பது ஆழ்வார்களின் வழிகாட்டல் ஆகும்.
பொய்கையாழ்வார் திருமாலை மறந்தறியாதவர்; கடல் வண்ணனைக் கண்ணாரக் கண்டவர். எனவே,
ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ ஏழைகாள்? - அன்று
கருஅரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்கம் மேயான் திசை(3189)எனத் தம் அனுபவத்தை எடுத்துச் சொல்லுகின்றார். எனவே இத்தன்மை உடைய இறைவனைத் தொழுபவர்கள் ‘வினையால் துன்பப்பட மாட்டார்கள்; நரகத்திற்குச் செல்ல மாட்டார்கள்’ (3248) என்றும் கூறி வழிபடச் சொல்லுகின்றார்.