தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P202231.htm-முதல் ஆழ்வார்கள்

  • 3.1 முதல் ஆழ்வார்கள்

     

    பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் முதல் ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். காலத்தால் முந்தியவர்கள் என்பதால் "முதல் மூவர்" என்று அழைக்கப்பட்டனர்.

    • பொய்கை ஆழ்வார்

    இவர் காஞ்சிபுரத்தில் (கச்சி) திருவெஃகாவில் ஐப்பசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் தோன்றினார். இவர் அருளியன 100 பாசுரங்கள் கொண்ட முதல் திருவந்தாதி ஆகும். (திருவெஃகா என்பது சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில் ஆகும்.)


    • பூதத்தாழ்வார்

    இவர் திருக்கடல் மல்லையில் (மாமல்லபுரம்) ஐப்பசி மாதத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் அருளிய 100 பாசுரங்கள் கொண்ட நூல் இரண்டாம் திருவந்தாதி என்று அழைக்கப் படுகின்றது.


    • பேயாழ்வார்

    இவர் திருமயிலையில் (மயிலாப்பூர்) ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரத்தில் தோன்றினார். இவர் அருளிச் செய்த 100 பாசுரங்கள் கொண்ட மூன்றாம் திருவந்தாதி ஆகும்.

    ஆழ்வார்களில், காலத்தால் முன்னே தோன்றிய பொய்கையார், பூதத்தார், பேயார் ஆகிய மூன்று ஆழ்வார்களும் முதல் ஆழ்வார்கள் என்னும் பெருமைக்குரியவர்கள். இவர்களின் பாசுரங்கள், பாமரர் முதல் பாராண்ட மன்னர் வரை பண்டைத் தமிழகம் முழுவதும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின; கோயில்கள் பெருகின; பக்தி, இயக்கமாக மாறத் தொடங்கி எங்கும் பரவ வித்திட்டன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:27:07(இந்திய நேரம்)