Primary tabs
-
2.0 பாட முன்னுரை
சிறுகதை குறுகிய காலத்தில் படித்து முடிக்கும் இலக்கியமாகும். இது காலங்காலமாய் மனிதன் அனுபவித்து வரும் நன்மை, தீமைகளை எடுத்தியம்புகிறது. சிறுகதை இலக்கியம் தோன்றி ஒரு நூற்றாண்டு முடியப் போகிறது. இந்நிலையில் சிறுகதைகள் பற்றி நாம் அறியும் செய்திகள் ஏராளம். பொழுதுபோக்கிற்கு இடமளித்த சிறுகதைகள் இன்று பல்கிப் பெருகியுள்ளன. அதேபோல் படைப்பாளர்களின் எண்ணிக்கையும் பெருகியுள்ளது. மேலும் சிறுகதைகள் காலந்தோறும் பெற்றுள்ள வளர்ச்சி அதனை நவீன இலக்கியங்களாகவும் உயர்த்தியுள்ளது. இத்தகைய சிறுகதை இலக்கியத்தின் போக்கினை அறிதலே இப்பாடத்தின் நோக்கமாகிறது. தமிழ்ச் சிறுகதையின் போக்கிற்குப் படைப்பாளர்களின் சமூகம் சார்ந்த சிந்தனைகளே காரணமாகின்றன. படைப்பாளர்கள் காலத்தின் தேவைக்கு ஏற்பக் கருத்துகளைக் கையாளுகின்றனர். இவை படைப்பாளர்களின் கருத்து, ரசனை, மொழி, கதை சொல்லும் பாங்கு ஆகியவற்றிற்கு ஏற்ப அமைகின்றன. இத்தகைய மாற்றங்களே சிறுகதையின் போக்கினைத் தீர்மானிக்கின்றன. எனவே சிறுகதையின் போக்குகளை அறியப் பல்வேறு காலகட்டங்களில் தோன்றிய சிறுகதைப் படைப்புகளை ஆராய்வது அவசியமாகிறது. இதன் மூலம் சிறுகதை இலக்கியத்தின் இலக்கிய மற்றும் சமூகப் பயன்களையும் அறிய முடிகிறது. இப்பாடத்தில் சிறுகதையின் போக்குகள் பற்றிய செய்திகளைப் பார்ப்போம்.