Primary tabs
-
4.0 பாட முன்னுரை
சிறுகதைகள் மனிதனின் சமகால வாழ்வைப் பிரதிபலிக்கின்றன. சமூக நோக்கங்களை உள்ளடக்கியுள்ளன. சமூகக் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுகின்றன. சமூகச் சிக்கல்களை வெளிப்படுத்துகின்றன. சமூகத்தை நெறிப்படுத்த உதவுகின்றன. சிறுகதைகளின் இத்தகைய வெளிப்பாடுகளே அவை சமூகத்தின் மீது கொண்டிருக்கும் அக்கறையைக் காட்டுவதாய் உள்ளன. அவ்வளவில் சிறுகதைகள் சமூகத்தை வெளிப்படுத்தும் பாங்கு இப்பாடப் பகுதியில் முக்கியத்துவம் பெறுகிறது.
சிறுகதைகள் சமூகத்தை வெளிப்படுத்துவதன் மூலம் சமூகங்களின் சிக்கல்கள் அறியப்படுகின்றன. சமூகச் சிக்கல்கள் தனிமனிதனை, குடும்பத்தை, சமூகத்தை, நாட்டை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை உணரலாம். இதன் மூலம் குறிப்பிட்ட சமூகங்களில் மேலோங்கியிருக்கும் சமூகச் சிக்கல்கள் மக்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகின்றன. இவை சமூகக் குறைபாடுகளைக் களைவதற்கும் ஏதுவாகின்றன. சுருங்கக் கூறின் சிறுகதைகள் சமூகச் சிக்கல்களை வெளிப்படுத்தி, சமூக மறுமலர்ச்சிக்கு உதவுவனவாய் உள்ளன.
இனி, சிறுகதைகள் காட்டும் சமூகச் சிக்கல்களைக் காண்போம்.