Primary tabs
-
1.0 பாட முன்னுரை
அன்பார்ந்த மாணவர்களே! இயல், இசை, நாடகம் எனத் தமிழை முத்தமிழாகக் காண்பது மரபு. மனத்தின் கருத்தை எடுத்துரைப்பது இயற்றமிழ், வாய் ஒலியின் வழி இசைப்பது இசைத்தமிழ். உடலின் அசைவில் உண்டாவது நாடகத் தமிழ் என முத்தமிழுக்கு விளக்கம் கூறுவார்கள். தமிழில் சங்க காலத்திற்கு முன்பே நாடகங்கள் இருந்திருக்கக் கூடும். ஆனால் அவை பற்றிய குறிப்புகளை இலக்கியங்கள் வழிதான் உணர முடியும். தமிழ் இலக்கியத்தில் நாடக இலக்கியம் பெறும் பங்கைக் குறைத்து மதிப்பிட முடியாது. நாடக இலக்கியத்தின் அறிமுகம் அறிதல், தொன்மைக் கால நாடகங்கள் பற்றி அறிதல், தற்கால நாடகப் போக்குகள் பற்றிக் காணல். இவ்வாறு மூன்று நிலைகளாக நாடகம் பற்றி நீங்கள் பயிலப் போகின்றீர்கள். இப்பாடம் நாடகத்தின் தோற்றம், நாடகம் எனப் பெயர் பெற்ற காரணம், நாடகம் இலக்கியமாக விளங்கும் தன்மை ஆகியவற்றைப் பற்றி அமைகின்றது. இதன் மூலம் நாடக இலக்கியத்தின் சிறப்புக்களை அறிந்து கொள்வீர்கள்.