Primary tabs
-
1.4 தொகுப்புரை
நடனத்திலிருந்தும், சடங்குகளிலிருந்தும் தோன்றியது நாடகம். எகிப்தில் இவ்வகையில் முதல் நாடகம் தோன்றியிருக்கலாம். கிரேக்க நாட்டின் நாடகக் கலையின் தாக்கம் பல நாடுகளிலும் காணப்பட்டது.
இந்திய நாடகங்களில், வடமொழியான சமஸ்கிருதத்தின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். காளிதாசர் போன்ற மேதைகள் சிறந்த நாடகங்களைப் படைத்தனர். தமிழ் நாடகங்கள் பற்றி அறியத் தொல்காப்பியத்திலிருந்து தொடங்கிச் சிற்றிலக்கியங்கள் வரை குறிப்புகள் கண்டோம். நடனமே பெரும்பாலும் நாடகம் என்று அழைக்கப்படுகிறது. சோழர் காலத்தில்தான் ‘கூத்து’ என்று ஓரளவு நடிக்கப்பட்ட நாடகங்கள் நடந்ததாகக் கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம்.
நடனத்தோடு இணைந்து வளர்ந்த நாடகம் தொடர்பான பல செய்திகளை நாம் இலக்கியங்கள் மூலமே அறிய முடிகின்றது. எழுதப்பட்ட ‘நாடகப் பிரதி’ அதாவது நாடக நூல் எதுவும் சிற்றிலக்கிய காலம்வரை, குறிப்பாகப் பதினாறாம் நூற்றாண்டு வரை நமக்குக் கிடைக்கவில்லை. அதனால் தமிழ் நாடக இலக்கியம் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் தெளிவாக எழுத முடியாத நிலை உள்ளது. மறைந்து போன தமிழ் நாடக நூல்கள் கிடைக்குமானால் இன்னும் பல தொன்மை நாடகச் செய்திகளை நாம் அறியலாம்.