Primary tabs
-
1.2 இந்திய நாடகங்கள்
இந்திய நாடகங்கள் பற்றிய விளக்கத்தையும், அதன் தோற்றத்தைப் பற்றியும் விளக்குகின்ற நூல் நாட்டிய சாஸ்திரமாகும். பரதர் இதன் ஆசிரியர் ஆவார். இந்நூல் நம்பிக்கைகளையும், புராணங்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். சிவபெருமான், பிரமனிடம் ‘பார்ப்பதற்கும் கேட்பதற்குமான’ ஒன்றைப் படைக்கும்படி வேண்டினான். பிரமன் ‘சொல்லை’ இருக்கு வேதத்திலிருந்தும், பாடலைச் (‘இசையை’) சாம வேதத்திலிருந்தும், உணர்ச்சி பாவங்களை அதர்வண வேதத்திலிருந்தும், நடிப்பை யசுர் வேதத்திலிருந்தும் பெற்று, நாட்டிய வேதத்தை உருவாக்கினான். பின் பரத முனிவருக்குக் கூறினான். பரத முனிவர் கந்தர்வர்களையும் யட்சர்களையும் சேர்த்து நாடகத்தை மேடை ஏற்றினார். அது முதன்முதலாக இந்திர துவஜ விழாவில் நடிக்கப்பட்டது. இந்நாடகம் அசுரர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது என்பன போன்ற செய்திகளைப் புராணங்கள் வழி அறிகிறோம். பொதுவாகக் கடவுள், தேவர்கள் ஆகியோர் மூலமே நாடகம் மக்களை வந்தடைந்ததாக நம்பிக்கைகள் அமைகின்றன.
இந்திய நாடகத் தோற்றம்
சமயச் சடங்குகளிலிருந்து நாடகங்கள் தோற்றம் பெற்றது என்பது அறிஞர் கருத்து. அது இந்திய நாடகங்களுக்கும் பொருந்தும். ஆனால் பிச்செல் என்பவர் இந்தியப் பொம்மலாட்டத்திலிருந்து தான் இந்திய நாடகங்கள் தோன்றியிருக்க வேண்டும் என்பார். உலகெங்கும் இந்தப் பொம்மலாட்டத்திலிருந்துதான் நாடகங்கள் தோன்றியிருக்க வேண்டும் என்பது இவர் கருத்து. கிரேக்கச் செல்வாக்கு இந்தியக் கலைகளில் காணப்படுவதாகவும் அறிஞர்கள் கருதுகிறார்கள்.
நாடக மரபில் பல உலகத்தரம் வாய்ந்த நாடகங்களை இந்தியா, நாடக இலக்கிய உலகுக்கு வழங்கியுள்ளது. பல நாடக ஆசிரியர்கள் தோன்றிச் சிறந்த நாடகங்களைப் படைத்துள்ளனர்.
பாசன்
வடமொழியான சமஸ்கிருத நாடக மரபில் பாசன் என்பவரே முதன்மையானவராகக் கருதப்படுகிறார். இவர் எழுதியதில் பதினான்கு நாடகங்கள் இதுவரை கிடைத்துள்ளன. பாசனுடைய காலம் கி.பி.3ஆம் நூற்றாண்டாகும். எளிமையான முறையில் எழுதப்பட்ட சொப்பன வாசவதத்தம், சாருதத்தம், பிரதிமா நாடகம் ஆகியன இவரது நாடகங்களில் மிகச் சிறந்ததாகக் கொள்ளப்படுகின்றன.
சூத்திரகர்
இவர் பாசனுக்குப் பிந்திய காலத்தவர். இவரது மிருச்சகடிகம் என்ற நாடகம் உலகப் புகழ் பெற்றது. இது இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பிரஞ்சு, ஜெர்மன், இரஷ்ய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் பலர் மொழி பெயர்த்துள்ளனர். பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் மண்ணியல் சிறுதேர் என்னும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்.
காளிதாசர்
விக்கிரமோர்வசீயம் (விக்கிரமன், ஊர்வசி கதை), மாளவிகாக்னிமித்திரம் (மாளவிகா, அக்னிமித்திரன் கதை), சாகுந்தலம் இந்த மூன்று நாடகங்களில் காளிதாசருக்குப் புகழையும், பெருமையையும் சேர்த்தது சாகுந்தலம் நாடகமேயாகும். இந்த நாடகம் உலக மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்டு அந்தந்த நாடுகளில் மேடையேற்றப்பட்டுள்ளது. தமிழில் மறைமலையடிகளார் தனித்தமிழ் நடையில் இந்நூலை மொழிபெயர்த்துள்ளார்.
ஹர்ஷர், மகேந்திரவர்மன், பவபூதி, சக்திதரர், பில்ஹணர், அஸ்வகோஷ் எனப் பலரும் சமஸ்கிருத மொழியில் தொடர்ந்து நாடகம் படைத்து வந்தனர்.