தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இசை

  • 1.1 இசை

        இசை என்ற சொல் காரணப் பெயர்ச்சொல்லாகும். இச்சொல் ‘இயை’ என்ற வேர்ச்சொல்லி்லிருந்து பிறந்ததாகும். இயை = பொருந்துதல், சொல், பொருள், பா,பண் எனப் பலப் பொருள்களில் வரும். பாவோடு பொருந்தி நிற்றலால் இசை என்று பெயர் பெற்றது.

        இசை என்ற சொல் இசைவு, ஊதியம், சொல்லுதல், அறிவித்தல், பாடுதல், ஓசை, சொல், புகழ், இசைப்பாட்டு, நரம்பில் பிறக்கும் ஓசை, சீர் என்ற பொருள்களிலும் வரும். பாடற்பொருளோடும், சொல்லோடும், தொடரோடும் இசைந்து, உணர்ச்சிகளுக்கு வலிவும் பொலிவும் தருவதால் இசை என்று பெயரிட்டனர், பாடலில் வரும் யாப்பமைதியோடு இன்னோசை தரும் இசைச்சுரங்கள் இயையும்பொழுது, மக்களையும், வனத்தில் வாழ் உயிரினங்களையும் இசை மகிழ வைக்கிறது. உள்ளங்களை ஈர்க்கிறது. இறை அருளோடு மக்களை இசையவைக்கிறது.

        வடநூலார் இசை என்ற சொல்லைச் சங்கீதம் என்கின்றனர். இது சம்கீதம் என்ற சொற்களின் கூட்டாகும்.“சம்” என்ற சொல் நல்ல என்ற பொருளைத் தரும்.“கீதம்” என்ற சொல் பாட்டு என்ற பொருளைத் தரும். சங்கீதம் என்பது நல்லபாட்டு என்ற பொருளில் வரும். இசை என்ற தமிழ்ச்சொல் இதனினும் ஆழ்ந்த, அகன்ற பொருளுடையதாக விளங்குகிறது.

    1.1.1 இசை - வழக்காறு

        இசை என்ற சொல் பல்பொருள் ஒரு சொல்லாக வழங்கப்படுகிறது. இவற்றில் சில வழக்காறுகளைக் காண்போம்.

    அ.
    இசை = பொருந்து,
    அவருடன் பொருந்தி வாழ்வதே இன்பம் . என்றதொடரில் இசை என்ற சொல் பொருந்துதல் என்ற பொருளில் கையாளப் பட்டுள்ளது.
    ஆ.
    இசை = ஒலி
    “பறை யெழுந்து இசைப்ப” (கலித் 104 : 29) இவ்விடத்தில் பறை ஒலித்தது என்ற பொருளில் வந்துள்ளது.
    .
    இசை = இசைநரம்பு
    இசை நரம்புகளாகிய குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற ஏழிசை நரம்புகளை இசை என்ற சொல்குறிக்கும். “குரல் முதலாக ஏழிசை”(சிலப் 5 : 5)
    ஈ.
    இசை = பண்
    இசை என்ற சொல் பண் என்ற பொருளிலும் கையாளப்படு்ம்.
    உ.
    இசை = இசைத்தமிழ்
    இசை    என்ற    சொல் இசைத்தமிழைக்     குறிக்கும். ‘இயல் இசை நாடகம்’ என்ற தொடரில் இசை என்ற சொல் இசைத்தமிழைக் குறிக்கிறது.
    ஊ.
    இசை = ஓசை
    இசை என்ற சொல் ஓசை என்ற பொருளில் யாப்பியல் நூல்களில்    கூறப்பெறுகிறது. ஏந்திசை, தூங்கிசை, ஒழுகிசை என்னும் தொடர்களில் வரும் இசை எனும் சொல் ஓசை என்ற பொருளில் ஆளப்படுகிறது.
    • இசைத்தமிழ்

        முத்தமிழில் ஒன்றாகிய இசைத்தமிழை, இசையின் இலக்கணம் என்று கருதுவர்.இசை இலக்கணம் என்ற பொருள் தரும் சொல்லாக இசைத்தமிழ் கையாளப்படுகிறது. நரம்பிசை இலக்கணம்,பண் இலக்கணம், தாள இலக்கணம், இசைப்பா இலக்கணம், இசைக்கருவிகள்    இலக்கணம், ஆடலிசை இலக்கணம் போன்றன இசைத்தமிழில் அடங்கும்.

    • இசைக்கற்றூண்கள்

        ஏழிசையில்     ஏழு சுரங்கள் உள்ளன. அவையே ச, ரி, க, ம, ப, த, நி ஆகும். இசைச்சுர    அலகுகளை ஒலிக்கும் கற்றூண்கள் உள்ளன. மதுரை மீனாட்சியம்மை கோயில், அழகர் கோயில், சுசீந்திரம் கோயில்களில் இவ்வகைக் கற்றூண்கள் உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், மீனாட்சி திருமணம் நடைபெறும் ஆயிரங்கால் மண்டபத்தில் இரண்டு பெருந்தூண்கள் உள்ளன. சுசீந்திரம் கோயில் தூண்கள் நல்ல நாதத்துடன் அமைந்துள்ளன.
     

    1.1.2 இசைக் குறியீடுகள்

        இசையுடன் கூடிய சில வழக்காறுகள் உள. இசைக்குரிய எழுத்து, இசைத்தமிழ், இசைக்கற்றூண்கள், இசைப்பாடல்கள் என உள. இவற்றை
    ங்குக் காண்போம்.

        அ. இசைக்குரிய எழுத்துகள் ஏழு - ச,ரி,க,ம,ப,த,நி - இதனை ஏழிசை என்பர். பறவை, விலங்கினங்களின் மூலமும் விளக்குவர்.இதன்வடமொழிப் பெயர்,தமிழ்ப்பெயர், நரம்புக்குறியீடுகள் ஆகியவற்றைக் கீழே காணலாம்.

    வ. எண்
    ஏழிசையின் தென்மொழிப் பெயர்
    ஏழிசையின் வடமொழிப் பெயர்
    பறவை விலங்குகளின்

    1.
    குரல்
    சட்சம்
    மயிலின் ஒலி
    2.
    துத்தம்
    ரிஷபம்
    மாட்டின் ஒலி
    3.
    கைக்கிளை
    காந்தாரம்
    ஆட்டின் ஒலி
    4.
    உழை
    மத்திமம்
    கிரவுஞ்சப் பறவையின் ஒலி
    5.
    இளி
    பஞ்சமம்
    பஞ்சமம்
    6.
    விளரி
    தைவதம்
    குதிரையின் ஒலி
    7.
    தாரம்
    நிஷாதம்
    யானையின் ஒலி

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 23:47:59(இந்திய நேரம்)