தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20223l2-3.2 நாதமுனிகளின் தொகுப்பு முறை

  • 3.2 நாதமுனிகளின் தொகுப்புமுறை
    நாதமுனிகள் நாலாயிரம் பாசுரங்களையும் இயல், இசைக்குத்
    தக்கவாறு பிரித்தார். இப்பகுப்பினைச் செப்பும் தமிழை
    இயலிசையிற் சேர்த்து
    என்று வடிவழகிய நம்பிதாசரின்


    நாதமுனி

    குருபரம்பரையும்     குறிப்பிடுகின்றது.
    அவ்வாறு பிரித்த ஒவ்வொரு பகுதியிலும்
    கிட்டத்தட்ட ஆயிரம் பாடல்கள்
    இருக்குமாறு    அடைவு படுத்தினார்.
    பாசுரங்களை அவர் இசைப்பா, இயற்பா
    எனப் பிரித்து, இசைப்பாக்களை மூன்று
    பகுதிகளாகவும், இயற்பாக்களை ஒரு
    பகுதியாகவும் வகுத்தருளினார். சுமார்
    ஆயிரம்     பாடல்கள்     இயற்பாவாகவும் மற்றையவை
    இசைப்பாவாகவும்     வகுக்கப்பட்டிருக்கின்றன. முதலாயிரம்,
    இரண்டாவது ஆயிரமாகிய பெரியதிருமொழி, நான்காவது
    ஆயிரமாகிய திருவாய்மொழி ஆகிய மூன்றும் இசைப்பாக்கள்.
    இவையாவும் பண்ணுடன் பாடுதற்கு உகந்தவை என்னும்
    கருத்திலேயே இசைப்பா என்று தனியாகப் பிரித்துத்
    தொகுக்கப்பட்டன. மூன்றாவது ஆயிரமாகிய இயற்பா, இயலாகச்
    சேவிக்கத்தக்கது என்னும் பொருளில் அவ்வாறு பெயர்பெற்றது.
    இப்பாகுபாடும் இயல், இசை, நாடகம் என்னும் பழைய தமிழ்
    இலக்கிய மரபை நினைவூட்டுவதாய் உள்ளது. நாதமுனிகள்
    இசைப்பாக்களைத் தேவகானத்திலே ஏறிட்டுச் சேவித்ததாகவும்
    இயற்பாவை இயலாகச் சேவித்து வந்ததாகவும் கோயிலொழுகு என்னும் நூல் கூறுகின்றது.

    இசைப்பா, இயற்பா பகுப்பில் அடங்கும் பிரபந்தங்களும்
    பாசுரங்களின் எண்ணிக்கையும் வருமாறு :

    (முதலாயிரம் 10 பிரபந்தங்கள்)

    பாடியோர்

    நூற்பெயர்

    பாசுரங்களின்
    எண்ணிக்கை

    1)
    பெரியாழ்வார்
    திருப்பல்லாண்டு

    12

    பெரியாழ்வார்
    திருமொழி

    461

    2)
    ஆண்டாள்
    திருப்பாவை

    30

    நாச்சியார்
    திருமொழி

    143

    3)
    குலசேகராழ்வார்
    பெருமாள்
    திருமொழி

    105

    4)
    திருமழிசையாழ்வார்
    திருச்சந்த
    விருத்தம்

    120

    5)
    தொண்டரடிப்
    பொடியாழ்வார்
    திருமாலை

    45

    திருப்பள்ளியெழுச்சி

    10

    6)
    திருப்பாணாழ்வார்
    அமலனாதிபிரான்

    10

    7)
    மதுரகவியாழ்வார்
    கண்ணிநுண்
    சிறுதாம்பு

    11

    ஆக, பிரபந்தங்கள் 10க்கு

    947

    இரண்டாம் ஆயிரம் - பெரியதிருமொழி
    (3 பிரபந்தங்கள்)
    1)

    திருமங்கையாழ்வார்

    பெரியதிருமொழி

    1084

    திருக்குறுந்தாண்டகம்

    20

    திருநெடுந்தாண்டகம்

    30

    ஆக, பிரபந்தங்கள் 3 க்கு

    1134

    மூன்றாம் ஆயிரம் - இயற்பா (10) பிரபந்தங்கள்
    1)
    பொய்கையாழ்வார்
    முதல்திருவந்தாதி

    100

    2)
    பூதத்தாழ்வார்
    இரண்டாம்
    திருவந்தாதி

    100

    3)
    பேயாழ்வார்
    மூன்றாம்
    திருவந்தாதி

    100

    4)
    திருமழிசையாழ்வார்
    நான்முகன்
    திருவந்தாதி

    96

    5)
    நம்மாழ்வார்
    திருவிருத்தம்

    100

    திருவாசிரியம்

    7

    பெரிய
    திருவந்தாதி

    87

    6)
    திருமங்கையாழ்வார்
    திருவெழு
    கூற்றிருக்கை

    1

    சிறிய திருமடல்

    1

    பெரிய திருமடல்

    1

    ஆக, பிரபந்தங்கள் 10க்கு

    593

    நான்காம் ஆயிரம் (ஒரே பிரபந்தம்)
    1)
    நம்மாழ்வார்
    திருவாய்மொழி

    1102

    ஆக, பிரபந்தம் 1க்கு

    1102

    24 பிரபந்தங்களுக்கும் மொத்தப் பாசுரங்கள்:

    3776


    இவற்றுள் ஆயிரம் பாசுரங்களுக்கு மேல் பாடியவர்கள்
    இருவர் ஆவர், அவர்கள் நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும்
    ஆவர்.

    நாலாயிர அடைவில்     ஆழ்வார்களின் பிரபந்தங்கள்
    அவர்களது காலவரிசைப்படி அமைக்கப் பெறவில்லை.
    பெரியாழ்வாரின்      திருப்பல்லாண்டுடன்     தொடங்கி
    நம்மாழ்வாரின் திருவாய்மொழியோடு நூல் நிறைவுறுகின்றது.

  • பிரபந்தங்களின் எண்ணி்க்கை
  • நாதமுனிகளின் தொகுப்பில் அடங்கிய பிரபந்தங்கள்
    எண்ணிக்கை இருபத்துநான்கு ஆகும். நாதமுனிகளுக்குப் பிறகு
    இராமாநுசர் காலத்தில் திருவரங்கத்து அமுதனார் பாடிய
    இராமாநுச நூற்றந்தாதியை அதன் தகுதிநோக்கி இயற்பாவை
    அடுத்து ஓதுவதற்கு உரியதாக மட்டுமே அமைத்தனர். ஆதலால்
    பிரபந்தங்கள் இருபத்துநான்கு என்பதில் எந்த மாற்றமும்
    ஏற்படவில்லை. கோயிலொழுகு என்னும் நூல் நாதமுனிகள்
    பற்றிப் பேசுகையில் ஆழ்வார் பன்னிருவர் என்றும்,
    அவர்களால் இயற்றப்பெற்ற பிரபந்தங்கள் இருபத்துநான்கு
    என்றும் குறிக்கக் காண்கிறோம். இக்குறிப்பு, நாதமுனிகள் தம்
    காலத்திலேயே     ஆழ்வார்களின்     பிரபந்தங்களை
    இருபத்துநான்காக வகுத்திருக்கலாம் என்று கருத இடமளிக்கிறது.
    நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் உள்ள மொத்தப்
    பாசுரங்களின் எண்ணிக்கை 3776 ஆகும். இவ்வாறே
    பதிப்பாசிரியர் பலரும் கொண்டுள்ளனர். இக்கணக்கில்
    நாலாயிரம் பாசுரம் பூர்த்தியாகவில்லை. ஆதலால் தனித்தனிப்
    பாடல்களாகக் கருதத்தக்க திருமங்கையாழ்வாரின் சிறிய
    திருமடல், பெரிய திருமடல் இரண்டையும் 226 பாசுரங்களாகக்
    கணக்கிட்டு (இரண்டு அடிகளை ஒரு பாசுரமாகக்கொண்டு சிறிய
    திருமடல் 78லும்; பெரியதிருமடல் 148லும்; ஆகப்பாசுரம் 226)
    நாலாயிரமாகக் (3774 + 226 = 4000) கொள்ளும் முறை
    பின்பற்றப்பட்டது. இவ்வாறு கொண்டவர் நம்பிள்ளை;
    தென்கலை நெறியினர். திருமடல்களை 118 பாசுரங்களாகக்
    கணக்கிட்டு, (சிறிய திருமடல் 40; பெரிய திருமடல் 78),
    நூற்றெட்டுப் பாசுரங்கள் கொண்ட இராமாநுச நூற்றந்தாதியையும்
    சேர்த்து நாலாயிரம் எனக்கொண்டவர் வேதாந்ததேசிகர்.
    இவர் வடகலை நெறியை நிறுவியவர். இவரது கணக்கின்படியும்
    நாலாயிரம் என்னும் எண்ணிக்கை (3774 + 40 + 78 + 108 =
    4000) நிறைவுபெறுகிறது.

    இவ்வாறு திருமடல்களைப் பல பாசுரங்களாகப் பிரித்துக்
    கணக்கிடும் இருவேறு     கொள்கைகளும் பொதுவாகப்
    பதிப்பாசிரியர்களால் பின்பற்றப்பட்டுள்ளன.

    ஆழ்வார் பாசுரங்கள் சரியாக நாலாயிரம் என்று
    காட்டுவதற்காகத் திருமடல்களைப்     பல பாசுரங்களாகக்
    கணக்கிடத் தேவையில்லை திருமடல்களைப் பல பாட்டுகளாகப்
    பிரித்தல் இலக்கண முறைக்கு எவ்வகையிலும் இணங்காது
    என்பது அறிஞர் சிலரின் கருத்தாகும்.

    திருமடல்கள் இரண்டும் வெண்பாவுக்குரிய சீரும் தளையும்
    பெற்று,     கலிவெண்பாவில்     அமைந்துள்ளன.     எனவே
    இலக்கணப்படி ஒவ்வொரு மடலையும் ஒவ்வொரு பாட்டாகக்
    கொள்வதே ஏற்புடையது. ‘அவ்வாறு கொண்டால் பாசுரங்களின்
    மொத்த எண்ணி்க்கை நாலாயிரம் ஆகாதே?’ என்று சிலர்
    வினவக்கூடும். நாலாயிர அடைவில் முதலாயிரத்தில் உள்ள
    பாசுரங்கள் 947 மட்டுமே. இருந்தும் அது முதலாயிரம் என்றே
    கூறப்படுகிறது.

    திருவாய்மொழிப் பாசுரங்கள் மொத்தம் 1102. எனினும்
    ஆழ்வார் தாமே, குருகூர்ச் சடகோபன் நேர்ந்த ஓர் ஆயிரம்
    (3-5-11; 3-6-11, 3-8-11; 3-9-11) எனப் பலவிடத்தும் பாடிச்
    செல்கின்றார். பெரிய திருமொழியில் பாசுரங்கள் 1084.
    அவைகளைக் குறித்தும் ஓர் அடியார் மங்கையர் கோன்
    ஈந்தமறையாயிரம்
    என்றே பேசுகிறார். இங்கெல்லாம் ஆயிரம்
    என்றே பேசப்படினும்     முதலாயிரத்தில் ஆயிரத்துக்குக்
    குறைவாகவும்,     பெரியதிருமொழி,     திருவாய்மொழிகளில்
    ஆயிரத்துக்கு அதிகமாகவும் பாடல்கள் அமைந்துள்ளன.
    இச்சான்றுகளால் ஆயிரத்துக்கு நூறு, ஐம்பது குறைந்தாலும்
    மிகுந்தாலும் ஆயிரம் என்று கூறும் வழக்கு இருந்ததாகத்
    தெரிகிறது. எனவே நாலாயிரக் கணக்குக்கு நூறு இருநூறு
    குறைந்தாலும் நாலாயிரம் என்றே வழங்கலாம் என்று இதற்கு
    அமைதி கூறுவார்     அறிஞர் பிரதிவாதி பயங்கரம்
    அண்ணங்கராச்சாரியர். இவ்வமைதி ஏற்கத்தக்கதே ஆகும்.


    1.
    ஆழ்வார் என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?
    2.
    முதலாழ்வார்கள் என்போர் யாவர்?
    3.
    நாதமுனிகள் பகுத்த மூன்று இசைப்பாக்கள் எவை?
    4.
    வைணவ நெறியில் இறைவன் எழுந்தருளியுள்ள
    தலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:31:31(இந்திய நேரம்)