Primary tabs
12 அறவணர்த் தொழுத காதை
[ மணிமேகலை பாத்திரம் கொண்டு
தன்னூர் அறவணர்த் தொழுத பாட்டு ]
ஆங்குஅவர் தம்முடன் அறவண அடிகள்
யாங்குஉளர் என்றே இளங்கொடி வினாஅய்
நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின்
உரைமூ தாளன் உறைவிடம் குறுகி
மைம்மலர்க் குழலி மாதவன் திருந்தடி
புதுமலர்ச் சோலை பொருந்திய வண்ணமும்,
உதய குமரன்ஆங்கு உற்றுஉரை செய்ததும்,
மணிமே கலாதெய்வம் மணிபல் லவத்திடை
அணியிழை தன்னை அகற்றிய வண்ணமும்,
ஆங்குஅத் தீவகத்து அறவோன் ஆசனம்
நீங்கிய பிறப்பு நேரிழைக்கு அளித்ததும்,
அளித்த பிறப்பின் ஆகிய கணவனைக்
களிக்கயல் நெடுங்கண் கடவுளின் பெற்றதும்,
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
வெவ்வினை உருப்ப விளிந்துகேடு எய்தி
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும்
கோதைஅம் சாயல் நின்னொடும் கூடினர்
ஆங்குஅவர் தம்திறம் அறவணன் தன்பால்
உரைத்த பூங்கொடி ஒருமூன்று மந்திரம்
தனக்குஉரை செய்துதான் ஏகிய வண்ணமும்,
தெய்வம் போயபின் தீவ திலகையும்
ஐயெனத் தோன்றி அருளொடும் அடைந்ததும்,
அடைந்த தெய்வம் ஆபுத் திரன்கை
வணங்குஉறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும்,
ஆபுத் திரன்திறம் அறவணன் தன்பால்
கேள்என்று உரைத்துக் கிளர்ஒளி மாதெய்வம்
போகென மடந்தை போந்த வண்ணமும்
மணிமே கலைஉரை மாதவன் கேட்டுத்
தணியா இன்பம் தலைத்தலை மேல்வரப்
பொன்தொடி மாதர் நல்திறம் சிறக்க
உற்றுஉணர் வாய்நீ இவர்திறம் உரைக்கேன்:
நின்நெடுந் தெய்வம் நினக்குஎடுத்து உரைத்த
அந்நாள் அன்றியும் அருவினை கழூஉம்
ஆதி முதல்வன் அடிஇணை ஆகிய
பாதபங் கயமலை பரவிச் செல்வேன்
கச்சயம் ஆளும் கழல்கால் வேந்தன்
மாபெருந் தானை மன்ன நின்னொடும்
தேவியர் தமக்கும் தீதுஇன் றோஎன
அழிதகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி
புதுக்கோள் யானைமுன் போற்றாது சென்று
மதுக்களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம்
ஆங்குஅது கேட்டுஓர் அரமியம் ஏறித்
தாங்காது வீழ்ந்து தாரைசா வுற்றதூஉம்
கழிபெருந் துன்பம் காவலன் உரைப்ப
பழவினைப் பயன்நீ பரியல்என்று எழுந்தேன்
ஆடுங் கூத்தியர் அணியே போல
வேற்றோர் அணியொடு வந்தீ ரோஎன
மணிமே கலைமுன் மடக்கொடி யார்திறம்
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த
நறுமலர்க் கோதாய் நல்கினை கேளாய்:
தரும தலைவன் தலைமையின் உரைத்த
பெருமைசால் நல்அறம் பெருகா தாகி
இறுதிஇல் நல்கதி செல்லும் பெருவழி
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்துகண் அடைத்தாங்குச்
செயிர்வழங்கு தீக்கதி திறந்து கல்என்று
உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம் பட்டது
தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்
உண்டுஎன உணர்தல் அல்லது யாவதும்
சலாகை நுழைந்த மணித்துளை அகவையின்
உலாநீர்ப் பெருங்கடல் ஓடா தாயினும்
ஆங்குஅத் துளைவழி உகுநீர் போல
ஈங்கு நல்அறம் எய்தலும் உண்டுஎனச்
சொல்லலும் உண்டுயான் சொல்லுதல் தேற்றார்
சக்கர வாளத்துத் தேவர் எல்லாம்
தொக்குஒருங்கு ஈண்டித் துடிதலோ கத்து
மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப
இருள்பரந்து கிடந்த மலர்தலை உலகத்து
விரிகதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன
ஈர்எண் ணூற்றோடு ஈர்எட்டு ஆண்டில்
பேர்அறி வாளன் தோன்றும்அதன் பிற்பாடு
பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
இரும்பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறுசெவி அளப்புஅரு நல்அறம்
கதிரோன் தோன்றுங் காலை ஆங்குஅவன்
அவிர்ஒளி காட்டும் மணியே போன்று
மைத்துஇருள் கூர்ந்த மனமாசு தீரப்
புத்த ஞாயிறு தோன்றுங் காலைத்
திங்களும் ஞாயிறும் தீங்குஉறா விளங்கத்
தங்கா நாண்மீன் தகைமையின் நடக்கும்
வானம் பொய்யாது மாநிலம் வளம்படும்
ஊன்உடை உயிர்கள் உறுதுயர் காணா
வளிவலம் கொட்கும் மாதிரம் வளம்படும்
நளிஇரு முந்நீர் நலம்பல தரூஉம்
கறவைகன்று ஆர்த்திக் கலநிறை பொழியும்
பறவை பயன்துய்த்து உறைபதி நீங்கா
விலங்கும் மக்களும் வெரூஉப்பகை நீங்கும்
கலங்குஅஞர் நரகரும் பேயும் கைவிடும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
அந்நாள் பிறந்தவன் அருள்அறம் கேட்டோர்
இன்னாப் பிறவி இகந்தோர் ஆதலின்
போதி மூலம் பொருந்திய சிறப்பின்
நாதன் பாத நவைகெட ஏத்துதல்
பிறவி தோறும் மறவேன்; மடக்கொடி
மாதர் நின்னால் வருவன இவ்வூர்
ஏது நிகழ்ச்சி யாவும் பலஉள
ஆங்குஅவை நிகழ்ந்த பின்னர் அல்லது
ஆதி முதல்வன் அருந்துயர் கெடுக்கும்
பாதபங் கயமலை பரசினர் ஆதலின்
ஈங்குஇவர் இருவரும் இளங்கொடி நின்னோடு
ஓங்குஉயர் போதி உரவோன் திருந்தடி
தொழுதுவலம் கொண்டு தொடர்வினை நீங்கிப்
ஆர்உயிர் மருந்தாம் அமுத சுரபிஎனும்
மாபெரும் பாத்திரம் மடக்கொடி பெற்றனை
மக்கள் தேவர் எனவிரு சார்க்கும்
ஒத்த முடிவின் ஓர்அறம் உரைக்கேன்
பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும்
தவப்பெரு நல்லறம் சாற்றினர்,-ஆதலின்
மடுத்ததீக் கொளிய மன்உயிர்ப் பசிகெட
அறவணர்த் தொழுத காதை முற்றிற்று.