Primary tabs
-
1.0 பாட முன்னுரை
ஆசியாக் கண்டத்தில் இந்தியா என்னும் நாடு அமைந்துள்ளது. விந்தியமலைத் தொடரும், சாத்பூராமலைத் தொடரும், ஆழ்ந்த நருமதைப் பள்ளத்தாக்கும், தபதி ஆறும், தண்டகாரணியக் காடுகளும் இந்தியாவை வட இந்தியா என்றும், தென் இந்தியா என்றும் இரு பகுதிகளாகப் பிரிக்கின்றன.
வட இந்தியாவில் எரிகுழம்புகள், நிலநடுக்கங்கள் போன்றவற்றால் தாக்குதலுக்கு உள்ளான அறிகுறிகள் உள்ளன. ஆனால் தென் இந்தியாவில் அவை காணப்படாததால் அது மனிதன் வாழ வசதி பெற்றதாக இருந்தது என்று ஆய்வாளர் கூறுகிறார்கள்.
தென் இந்தியாவில்தான் தமிழகம் என்னும் பெயர் பெற்ற நிலப்பரப்பு அமைந்துள்ளது. தமிழக நிலப்பரப்பு பல்வேறு காலங்களில் மாறுபட்ட எல்லைகளைக் கொண்டிருந்தது. சங்க காலத்திற்கு முற்பட்ட காலம், சங்க காலம், சங்க காலத்திற்குப் பிற்பட்ட காலம் என மூன்று காலக் கட்டங்களாகப் பிரித்து ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தமிழகத்தின் நிலப்பரப்பு எவ்வாறு இருந்தது என்றும், தற்காலத்தில் எவ்வாறு இருந்து வருகிறது என்றும் விரிவாகப் பார்ப்போம்.