தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Courses- தமிழ்ச் சங்கம்

  • 5.1 தமிழ்ச் சங்கம்

    பழந்தமிழ் நாட்டில் தமிழ் மொழியினைப் பேணி வளர்ப்பதற்காகச் சங்கம் என்ற ஒரு அமைப்பு இருந்து வந்ததாகத் தெரிய வருகிறது. இச்சங்கத்தைப் பாண்டிய மன்னர்கள் அமைத்திருந்தனர். தமிழ்ப் புலவர்கள் சங்கத்தில் வீற்றிருந்து தமிழை ஆராய்ந்ததுடன் பல நூல்களை இயற்றினர். அதோடு மட்டுமல்லாமல் பிற புலவர்கள் இயற்றிய நூல்களை மதிப்பீடு செய்தும் வந்தனர். இதில் அமர்ந்திருந்த புலவர்கள் பல இலக்கியங்களைத் தமிழில் படைத்துத் தமிழ் மொழியின் மேன்மையை உலகிற்கு உணர்த்தினர். இதனையே ஔவையார் கூறும்போது,

    பாண்டிய நன்னாடுடைத்து நல்ல தமிழ்

    என்றார்.

    இச் சங்கமானது தமிழகத்தின் தென்பால் அமைந்திருந்தது. இதனால் இன்றைய தமிழகத்தின் தென்பால் அமைந்துள்ள மதுரை மாநகரம் தமிழ் வளர்த்து மணம் பரப்பி நின்றது என்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக உணர முடிகிறது.

    தொல் ஆணைநல் ஆசிரியர்
    புணர் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின்
    நிலம் தரு திருவின் நெடியோன் போல

    (மதுரைக் காஞ்சி : 761-763)

    தமிழ் நிலை பெற்ற, தாங்கு அருமரபின்
    மகிழ்நனை, மறுகின் மதுரையும்.......

    (சிறுபாணாற்றுப்படை: 66-67)

    (தமிழ் வீற்றிருந்த தெருவினை உடைய மதுரை. மறுகு-தெரு.)

    தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே

    (புறநானூறு, 58 :13)

    (கெழு = பொருந்திய; கூடல் = புலவர்கள் கூடும் மதுரை; தண்கோல் = குளிர்ச்சி பொருந்திய செங்கோல்.)

    தமிழ்ச் சங்கமானது மூன்று இருந்ததாகக் கருதுகின்றனர். அவை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகும். இங்கு நாம் கடைச்சங்கத்தின் மூலமாக எழுந்த இலக்கியங்களில் காணப்படும் மன்னர்களைப் பற்றிக் காணலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:22:30(இந்திய நேரம்)