Primary tabs
-
5.2 சங்க கால மன்னர்கள்
சங்க காலத்தில் தமிழகம் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என முப்பெரும் பிரிவுகளாகப் பிரிந்து காணப்பட்டது. மேற்குக் கடற்கரைப்பகுதி சேர நாடு என்றும், கிழக்குக் கடற்கரையின் வடபகுதி சோழ நாடு என்றும், அதன் தென் பகுதி பாண்டிய நாடு என்றும் வழங்கப்பட்டன. அவற்றை முறையே சேர, சோழ, பாண்டிய அரச வம்சத்தினர் ஆண்டு வந்தனர்.
கொற்கையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்த பாண்டிய அரசனின் மூன்று மகன்கள் மூவிடங்களுக்கும் சென்று சேர, சோழ, பாண்டிய அரசுகளை நிறுவினர் என்ற செய்தியும் நிலவுகின்றது.
சங்க இலக்கியத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மன்னர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. ஆனால் அவர்களுடைய அரசியல் வரலாற்றைத் தொடர்ச்சியாக எழுதுவதற்கான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கவில்லை.
சங்க கால மன்னர்களை இங்கு நாம் பெரும் மன்னர்கள், குறுநில மன்னர்கள் என்று பிரித்துக் காணலாம். பெரும் மன்னர்கள் என்போர் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்கள் ஆவர். குறுநில மன்னர்கள் என்போர் வேளிர், கோசர் போன்ற சிற்றரசர்கள் ஆவர்.