Primary tabs
-
4.1 முற்காலப் பாண்டியர் - ஓர் விளக்கம்
சங்க கால இறுதியில் களப்பிரர் என்பவர்கள் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டைக் கைப்பற்றினர். நாட்டை இழந்ததால் பாண்டிய மன்னர்களின் புகழ் மறைந்து போயிற்று. களப்பிரர்கள் பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளை ஆட்சி மொழியாகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். தமிழ்மொழி ஆட்சியாளர்களின் ஆதரவை இழந்தது. இந்நிலை கி.பி. 6ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரை நீடித்தது. கி.பி. 575இல் பாண்டியன் கடுங்கோன் என்பவன் களப்பிரர்களை வென்று தாய் நாட்டை மீட்டுக் கொண்டான்.
சங்க காலத்திற்குப் பின்பு, ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகள் கழித்துப் பாண்டிய நாட்டில் கடுங்கோன் நிறுவிய அரசு முதலாம் பாண்டியப் பேரரசு என அழைக்கப்படுகிறது. இப்பேரரசைக் கடுங்கோனை முதலாகக் கொண்டு மொத்தம் பதினான்கு பாண்டிய மன்னர்கள் கி.பி.575 முதல் 966 வரை ஏறத்தாழ 400 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களைத்தான் முற்காலப் பாண்டியர் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.