Primary tabs
-
3.0 பாட முன்னுரை
ஒரு மொழியில் காணப்படும் சொற்களின் உள் அமைப்பை ஆராய்வதே உருபனியல் என்று புளூம்பீல்டு என்ற ஆங்கில மொழியியல் அறிஞர் குறிப்பிடுகிறார்.(Bloomfield, Language, P. 194). ஆங்கிலத்தில் ‘Morphology’ என்று கூறப்படுவதையே, இக்காலத் தமிழ் மொழிநூல் அறிஞர்கள் உருபனியல் என்று மொழி பெயர்த்துக் கூறுகின்றனர். இதனைச் சொல்லியல் எனவும் குறிப்பிடுகின்றனர்.
தமிழ் மொழியில் உள்ள சொற்களை இக்கால மொழிநூலார் உருபனியல் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆராய்ந்து காண்கிறார்கள். ஏறத்தாழ இதே அடிப்படையிலேயே தொல்காப்பியரும் அவருடைய காலத் தமிழ் மொழியில் வழங்கிய சொற்களை ஆராய்ந்துள்ளார். அவர் சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என நால்வகைப் படுத்தி விளக்கியுள்ளார். இங்குத் தொல்காப்பியர் காலத் தமிழின் உருபனியல் அல்லது சொல்லியலைக் காண்பதே இப்பாடத்தின் நோக்கம்.