Primary tabs
-
3.4 வினைச்சொல்
எந்த ஒரு மொழியிலும் ஒரு தொடருக்கு இன்றியமையாத உறுப்பாகத் திகழ்வது வினைச் சொல்லே. தமிழில் வந்தான். வந்தாள், வந்தார் போன்ற பால்காட்டும் வினைமுற்றுச் சொற்கள் தனியே நின்று தொடர்களாகவும் அமைகின்றன. அத்தோடன்றி இத்தகு சொற்கள், பல இலக்கணக் கூறுகளை உணர்த்தும் ஆற்றல் வாய்ந்தவையாகவும் உள்ளன. சான்றாக, வந்தான் என்பது வருதல் என்ற தொழிலையும், தொழில் செய்தவனையும், தொழில் நிகழ்ந்த காலத்தையும் ஒருசேர உணர்த்தும் சொல்லாகத் திகழ்கின்றது. இவ்வாறு ஒரே வினைச்சொல் பல்வேறு இலக்கணக் கூறுகளை விளக்கி நிற்பதால் சொல் பாகுபாட்டில் அது முக்கியமான இடத்தைப் பெறுகிறது.
வினைச்சொல் வேற்றுமை உருபுகளை ஏற்காது; காலம் காட்டும் என்கிறார் தொல்காப்பியர். (தொல். சொல். 200)
வினைச்சொற்களில் காலத்தை வெளிப்படையாகக் காட்டும் சொற்களே அல்லாமல், காலத்தைக் குறிப்பாகக் காட்டும் சொற்களும் வழங்கின.
வினைச்சொல்லானது வினை, குறிப்பு என இரு வகைப்படும். இவ்விரு சொற்களும் காலம் காட்டும் என்கிறார் தொல்காப்பியர். (தொல். சொல். 203)
வினை, குறிப்பு என்று தொல்காப்பியர் குறிப்பிட்ட இருவகை வினைச்சொற்களைப் பிற்கால இலக்கண ஆசிரியர்கள் முறையே தெரிநிலை வினை, குறிப்பு வினை என்று தெளிவாகக் குறிப்பிடலாயினர். காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது தெரிநிலை வினை.
(எ.டு)உண்டான்- இறந்தகாலம்உண்ணாநின்றான்- நிகழ்காலம்உண்பான்- எதிர்காலம்பொருளை உணர்த்தும் பெயர், பண்பை உணர்த்தும் பெயர் முதலியவற்றின் அடியாகத் தோன்றிக் காலத்தைக் குறிப்பாகக் காட்டுவது குறிப்பு வினை எனப்படும்.
(எ.டு)பொன்+அன்=பொன்னன்நல்+அன்=நல்லன்நல்லன் என்ற குறிப்பு வினை நேற்று நல்லன், இன்று நல்லன், நாளை நல்லன் என்று மூன்று காலத்தையும் குறிப்பாகக் காட்டுவதைக் காணலாம்.
பொருளையோ பண்பையோ உணர்த்தாத அல்லன், இலன், இலர் போன்ற குறிப்பு வினைமுற்றுகளும் உண்டு.
3.4.3 திணை அடிப்படையில் வினைப் பாகுபாடு
தொல்காப்பியர் தெரிநிலை வினை, குறிப்பு வினை என்று இருவகையாக அமையும் வினைச்சொற்களைத் திணை அடிப்படையில் உயர்திணை வினைகள், அஃறிணை வினைகள், விரவு வினைகள் (இரு திணைப் பொது வினைகள்) என மூவகையாகப் பிரிக்கிறார். இந்த மூவகைப்பட்ட வினைகளையும் வினைமுற்று, எச்சம் என்ற இருவகை அமைப்பில் விளக்கிக் காட்டுகிறார்.
வினைமுற்றுகள், தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும். தொல்காப்பியர் காலத்தில் தெரிநிலை வினைமுற்றுகள் இருவகை அமைப்பில் தோன்றின.
1. வினையடி + காலம் காட்டும் இடைநிலை + ஈறு (விகுதி)
(எ.டு) செய் + த் + ஆன் = செய்தான்
2. வினையடி + ஈறு
(எ.டு) உண் + உம் = உண்ணும் (அவன் உண்ணும்.)
பெயர் அல்லது பண்பு அடிச்சொல் + ஈறு என்ற அமைப்பில் குறி்ப்பு வினைமுற்றுகள் தோன்றின.
(எ.டு)பொன்+ அன்= பொன்னன் ;நல்+ அன்= நல்லன்.வினைமுற்றுகளில் ஈறு கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பர் தொல்காப்பியர் (தொல். சொல். 10). வினைமுற்றுகள் ஈறு (விகுதி) கொண்டே திணை, பால், இடம், எண் ஆகியவற்றை உணர்த்துகின்றன. எனவே தொல்காப்பியர் ஒவ்வொரு வினைமுற்றையும் பற்றிக் கூறும் பொழுது அதற்குரிய ஈறுகளை எல்லாம் குறிப்பிடுகிறார்.
- உயர்திணை வினைமுற்றுகள்
- அஃறிணை வினைமுற்றுகள்
- இருதிணைப் பொது வினைமுற்றுகள்
- முன்னிலை வினைமுற்று
- வியங்கோள் வினைமுற்று
- செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
- வினையெச்சம்
- வினையெச்சம் அடுக்கி வரல்
- பெயரெச்சம்
- குறிப்பு வினையெச்சம், குறிப்புப் பெயரெச்சம்
தன்மை ஒருமை, தன்மைப் பன்மை, படர்க்கை ஆண்பால், படர்க்கைப் பெண்பால், படர்க்கைப் பலர்பால் வினைமுற்றுகள் ஆகிய ஐந்தும் உயர்திணைக்கு உரியன. இவற்றிற்கு உரிய ஈறுகள் வருமாறு :
இந்த 23 ஈறுகள் தெரிநிலை வினைமுற்றுக்கே கூறப்பட்டவை. இவற்றில் ஏற்புடையன குறிப்பு வினைமுற்றிலும் வரும்.
யார் எனும் வினாப்பொருள் உணர்த்தும் குறிப்பு வினைமுற்று உயர்திணையில் மூன்று பாலுக்கும் உரியது. எ-டு அவன் யார், அவள் யார், அவர் யார்?
படர்க்கை ஒருமை, (ஒன்றன்பால்) படர்க்கைப் பன்மை (பலவின்பால்) ஆகிய இரண்டு வினைமுற்றுகளும் அஃறிணைக்கு உரியன. படர்க்கை ஒருமை வினைமுற்று து, று, டு என்னும் மூன்று ஈறுகளையும், படர்க்கைப் பன்மை வினைமுற்று அ, ஆ, வ என்னும் மூன்று ஈறுகளையும் இறுதியில் கொண்டு வரும். இந்த ஈறுகளில் சில குறிப்பு வினைமுற்றுகளிலும் வரும்.
எவன் எனும் வினாக் குறிப்பு வினைமுற்று அஃறிணையில் இரண்டு பாலுக்கும் உரியது.
(எ.டு) அஃது எவன்? அவை எவன்?
முன்னிலை வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று, செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று ஆகியன உயர்திணை, அஃறிணை என்னும் இரு திணைகளுக்கும் பொதுவானவை. மேலும் இல்லை, வேறு எனும் குறிப்பு வினைமுற்றுகளும் இருதிணைப் பொதுவானவையேயாகும்.
இது முன்னிலை ஒருமை வினைமுற்று, முன்னிலைப் பன்மை வினைமுற்று என இருவகையாக வரும். இவை பால் காட்ட மாட்டா ; ஒருமை பன்மை ஆகிய எண் வேறுபாடு மட்டுமே காட்டும்.
முன்னிலை ஒருமை வினைமுற்று இ, ஐ, ஆய் என்னும் மூன்று ஈறுகளையும், பன்மை வினைமுற்று இர், ஈர், மின் என்னும் மூன்று ஈறுகளையும் பெற்று வரும். குறிப்பு வினைமுற்று இவற்றுள் ஏற்பன கொண்டு வரும்.
மேலும் நட, வா, போ, உண், செய் போன்ற தெரிநிலை வினையடிகள் எல்லாம் முன்னிலைக்கு உரியன. இவை ஏவல் பொருளில் வழங்கும்; ஒருமையை மட்டும் உணர்த்தும் ; எதிர்காலம் காட்டும்.
வியங்கோள் வினைமுற்று படர்க்கையில் மட்டுமே வரும். தன்மையிலும் முன்னிலையிலும் வாராது என்கிறார் தொல்காப்பியர். க, அல் என்னும் ஈறுகள் வியங்கோள் வினைமுற்று விகுதிகளாக அவர் காலத்தில் வழங்கின.
(எ.டு) அவன் செல்க, அவள் செல்க, அது செல்க, கூறல் (கூறுக).
சிறுபான்மையாக ‘நீ வாழ்க’ என முன்னிலையிலும், ‘யான் உறைக’ எனத் தன்மையிலும் வியங்கோள் வினைமுற்று வருவதை உரையாசிரியர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
செய்யும் எனும் வாய்பாட்டு வினைமுற்று நிகழ்காலம் மட்டும் காட்டும். இது பலர்பால் படர்க்கை, முன்னிலை, தன்மை ஆகியவற்றில் வாராது. ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் படர்க்கைப் பெயர்களோடு மட்டுமே பொருந்தி வரும்.
(எ.டு) அவன் உண்ணும், அவள் உண்ணும், அது உண்ணும், அவை உண்ணும்.
தொல்காப்பியர் மேற்கூறிய இருதிணைப் பொது வினைமுற்றுகளைக் கூறிய பின்னர் எச்சங்களைப் பற்றிக் கூறுகிறார். வினைமுற்றில் ஈறு குறைந்து நின்றால் அது எச்சமாகும். எச்சங்களும் இருதிணைப் பொதுவினைகளேயாகும்.
இவ்வாறு வரும் எச்ச வினைகள் ஒரு வினையைக் கொண்டு கொண்டு முடியும் போது வினையெச்சம் என்றும், ஒரு பெயரைக் கொண்டு முடியும் போது பெயரெச்சம் என்றும் அழைக்கப்படுகின்றன. தொல்காப்பியர் இவ்விரண்டு எச்சங்களையும் முறையே வினை எஞ்சு கிளவி என்றும் பெயர் எஞ்சு கிளவி என்றும் குறிப்பிடுகிறார்.
தொல்காப்பியர் வினையெச்சம் என்றால் என்ன என்பதை வரையறை செய்யவில்லை. ஆனால் அதன் அமைப்பைப் பல வாய்பாடுகள் கொண்டு விளக்கிக் காட்டுகிறார். செய் என்ற வினையடியிலிருந்து வினையெச்ச வாய்பாடுகளை உருவாக்கிக் காட்டுகிறார். அவர் குறிப்பிடும் வினையெச்ச வாய்பாடுகள் மொத்தம் ஒன்பது. இவற்றை,
செய்து,
செய்யூ, செய்பு, செய்தென,
செய்யியர், செய்யிய, செயின், செய, செயற்கு என
அவ்வகை ஒன்பதும் வினை எஞ்சு கிளவி
(தொல்.சொல். 230)
என்ற நூற்பாவில் கூறுகிறார். அவர் காலத் தமிழில் வழங்கிய வினையெச்சங்களை எல்லாம் இந்த ஒன்பது வாய்பாடுகளில் அடக்கிக் காட்டுகிறார். இவற்றைச் சான்றுகளுடன் காண்போம்.
வினையெச்சங்கள் பலவாக ஒரு தொடரில் அடுக்கியும் வரும். அவ்வாறு வரினும் ஒரு வினை கொண்டே முடிய வேண்டும் என்கிறார் தொல்காப்பியர். (தொல்.சொல். 235)
(எ.டு) உண்டு தின்று ஆடிப் பாடி மகிழ்ந்து வந்தான்.
தொல்காப்பியர் செய்யும், செய்த என்னும் இரண்டு வாய்பாடுகளை மட்டுமே பெயரெச்சத்திற்குக் கூறுகிறார். இந்த இரு வாய்பாடுகளைக் கொண்டு வரும் பெயரெச்ச வினைகள் நிலம் (இடம்), பொருள் (செயப்படுபொருள்), காலம், கருவி, வினைமுதல் (தொழில் செய்பவன்), வினை (தொழிலை உணர்த்தும் பெயர்) ஆகிய ஆறனை உணர்த்தும் பெயர்களைக் கொண்டு முடியும் என்கிறார் தொல்காப்பியர். இவற்றிற்கான சான்றுகள் வருமாறு :
தொல்காப்பியர் எல்லா வினைச்சொற்களும் தெரிநிலையிலும் குறிப்பிலும் வரும் என்கிறார். எனவே வினையெச்சங்களும் பெயரெச்சங்களும் குறிப்பு வினையிலும் வரும் என்பது அவர் கருத்து.
இதுகாறும் தொல்காப்பியர் காலத்தில் வினைச்சொல் எவ்வாறு அமைந்திருந்தது என்பதைப் பார்த்தோம். இனி, அவர் காலத்தில் இடைச்சொற்களும் உரிச்சொற்களும் எவ்வாறு வழங்கின என்பதைப் பற்றிக் காண்போம்.