தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 2.3-சாதிகள் ஒழிக

  • 2.3 சாதிகள் ஒழிக
     

    E

    'சாதி’ என்ற சொல்லே தமிழுக்கு உரியதில்லை, பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சாதிப் பிரிவுகள் பழந்தமிழகத்தில் இல்லை.
     

    சாதி மதம் தமிழ் இல்லை - அந்தச்     
    சாதி மதத்தைத் தமிழ்கொள்வ தில்லை.

    பன்மணித்திரள் (பக்: 67)
     

    என்பது பாரதிதாசன் கூற்று. தமிழ்நாட்டில் சாதி வேரூன்றி வளர்ந்து விட்டது. பெயருக்குப் பின்னால் சாதியைக் குறித்து வழங்குவதை மதிப்பாகச் சமூகம் கருதியது. தெருக்களின் பெயர்களில் கூடச் சாதிப்பெயர்கள் ஆட்சி கொண்டிருந்தன. மேல்சாதி கீழ்ச்சாதி என்ற பாகுபாடு பலருடைய உள்ளத்திலும் உணர்விலும் இருந்தது.
     


     

    தீண்டாமை என்ற கொடிய வழக்கம் தமிழகத்தின் முன்னேற்றத்தை வெறும் கனவாக்கிக் கொண்டிருந்தது. சாதி நம் பண்பாட்டுக்கு முரண் என்று கூறிய பாரதிதாசன் சாதி இருக்கின்றது என்று கூறுவோன் இன்னும் உயிர் வாழ்கின்றானே என்று துடிக்கின்றார்.
     

    இருட்டறையில் உள்ளதடா உலகம்! சாதி     
    இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே!

    (பாண்டியன் பரிசு, 56: 17-18)
     

    என்று அவர் பாடுகின்றார். சாதிகளை ஒழிப்பதற்குக் கவிஞர் கொடுத்த குரல் தமிழ் நாடெங்கும் பரவியது. அவர் அச்சமின்றிச் சாதிகளைச் சாடினார்; வாழ்நாள் முழுதும் சாதி ஒழிப்புப் போர் நிகழ்த்தினார்.
     

    2.3.1 வருணக் கொடுமைகள் கெடுக
     

    மனித குலத்தை நான்கு வருணங்களாகப் பிரித்து அவற்றிற்கு உயர்வு தாழ்வு கற்பித்த கொடுமை நாட்டில் பரவிவிட்டது. கடவுளின் முகத்தில் தோன்றியவர் ஒரு வருணத்தார்; தோளில் தோன்றியவர் இரண்டாவது வருணத்தார்; இடையிற் பிறந்தவர் மூன்றாவது வருணத்தார்; தொடையிற் பிறந்தவர் நான்காம் வருணத்தவர் என்று அயல்மொழியாளர் கற்பித்த நெறி தமிழ்நாட்டிற்குள் புகுந்து விட்டது. பலர் இதை உண்மையாக இருக்கக்கூடுமென நம்பிவிட்டனர்.
     


     

    ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாற முடியும். ஆனால் ஒரு வருணத்தவர் மற்றொரு வருணத்தவராக மாற முடியாது. இராமானுஜர், சுப்பிரமணிய பாரதியார் ஆகியோர் தாழ்ந்த வருணத்தவரை உயர்ந்த வருணத்தவராக மாற்ற முயன்றனர். பாரதிதாசனும் வருணக் கொடுமையை எதிர்க்கப் புயலாகப் புறப்பட்டார். வருணங்கள் உண்டாக்கப்படுவதற்கு முன்பு உலகம் ஒழுங்காய் இருந்தது; பல முன்னேற்றங்களைத் தொழிலாளர் உழைப்பால் உலகம் கண்டது. வருணங்கள் உண்டாக்கப்பட்ட பின்பு மனிதரிடையே வேற்றுமைகள் வளர்ந்தன.
     

    இக்கால நால்வருணம் அன்றி ருந்தால்     
         இருட்டுக்கு முன்னேற்றம் ஆவ தன்றிப்
        
    புக்கபயன் உண்டாமோ?

    (புரட்சிக்கவி: 426-428, முதல் தொகுதி)
     

    என்று கேட்கிறார். ஒவ்வொரு வருணத்தவருக்கும் ஒரு நீதி உரைக்கப்பட்டது. சட்டை அணிந்து கொள்வதும், செருப்பணிந்து கொள்வதும் கூட குறிப்பிட்ட வருணத்தவர்க்கு ஒவ்வாத செயல்களாக உரைக்கப்பட்டன. கீழ்வருணத்தவரைச் ‘சூத்திரர்’ என்று இகழ்ந்தனர். இந்திய ஒருமைப்பாட்டை வருணப் பாகுபாடு குலைத்துவிடுமென்று பாரதிதாசன் எச்சரித்தார். அவருடைய நெருப்புக் கவிதைகளால் வருணப்பாகுபாடு சுட்டுப் பொசுக்கப்பட்டது.
     

    2.3.2 தீண்டாமை வீழ்க
     

    தொட்டால் தீட்டு, பட்டால் பாவம் என்ற கருத்தை வருணப் பாகுபாட்டைப் பரப்பியவர்கள் விதைத்தார்கள். உழைக்கும் தொழிலாளர்களை இப்பாகுபாடு ‘பஞ்சமர்’ என்று கண்டது. பஞ்சமர் என்றால் நான்கு வருணத்திற்கும் அப்பாற்பட்ட ஐந்தாவது தாழ்ந்த பிரிவினர் என்பது பொருள். தொழிலாளி உருவாக்கிய நெல்லுக்கும். காய்கறிகளுக்கும், பாலுக்கும், தயிருக்கும், கனிகளுக்கும் தீட்டு இல்லை. ஆனால் அவன் உயர்ந்த வருணத்தார் வாழும் தெருக்களிலே நடக்கும் உரிமை அற்றிருந்தான். அவனைத் தொட்ட தீட்டை நீரில் மூழ்கித் துடைத்தனர் மேல்வருணத்தவர்.
     

    சதுர்வர்ணம் சொன்னபோது          
        தடிதூக்கும் தமிழ்மக்கள்
        
    அதில் ஐந்தாம் நிறமாயினர் - சகியே          
         அதில் ஐந்தாம் நிறமாயினர்.

    (சமத்துவப்பாட்டு: 381-384, மூன்றாம் தொகுதி)
     

    என்று அதனை ஒழிக்க முயன்றவர்களைப் ‘பஞ்சமர்’ என்று ஒதுக்கிவைத்தது மேல்குலம். வரலாற்றில் தீண்டாமை நீண்ட காலமாக இடம் பெற்றுப் பல கொடுமைகளை இழைத்து விட்டது. நந்தனாரையும் திருப்பாணாழ்வாரையும் அது கோயிலுக்குள் புகவிடாமல் தடுத்தது. எலிகளும், பெருச்சாளிகளும் ஓடி உலவும் கோயிலுக்குள் உயிரும் உணர்வும் உள்ள மனிதர்கள் புகுதல் தடுக்கப் பெற்றது.
     

    தீண்டாமை என்னுமொரு பேய் - இந்தத்     
    தேசத்தினில் மாத்திரமே திரியக் கண்டோம்

    (ஞாயமற்ற மறியல்: 17-18, மூன்றாம் தொகுதி)
     

    என்று கவிஞர் கூறினார். கவிஞரின் எரிமலைக் கவிதைகள் தீண்டாமை நீங்கப் பெரும் புரட்சி செய்தன. தீண்டாமை சட்டப்படிக் குற்றமாக்கப்பட்டது. இன்று நாகரிக மனிதர்கள் தீண்டாமையை ஏற்கவில்லை.
     

    2.3.3 சாதியற்ற சமூகம் மலர்க
     

    சாதி என்பது ஓர் இருட்டு. அந்த இருட்டு அகன்றாலே உலகம் விடியும். இந்தக் கருத்தைப் பாரதிதாசன் குழந்தைகளின் தாலாட்டுப் பாட்டிலேயே சேர்த்துரைத்தார்.
     

    வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்     
    தூண்டா விளக்காய் துலங்கும் பெருமாட்டி

    (பெண்குழந்தை தாலாட்டு: 17-18, முதல் தொகுதி)
     

    என்று பெண்குழந்தையைத் தாலாட்டுகின்றார். சாதி எங்கே பெரிய தடையை விதித்தது தெரியுமா? ஆணும் பெண்ணும் காதலிப்பார்கள்; உயிர் ஒன்றிய நிலையில் அவர்களிடையே அன்பு பெருகும்; காதல் செழிக்கும்; அப்போது அந்தக் காதல் என்ற பச்சை மரத்தை வெட்டச் சாதிக் கோடரி நீளும்.
     

    காதல் இருவர்களும் - தம்     
    கருத்தொருமித்தபின்     
    வாதுகள் வம்புகள் ஏன்? - இதில்     
    மற்றவர்க் கென்ன உண்டு?     
    சூதுநிறை உளமே - ஏ     
    துட்ட இருட்டறையே!     நீ
    திகொள்’ என்றுலகை - அவள்     
    நிந்தனை செய்திடுவாள்.

    (காதற் பெருமை: 65-72. முதல் தொகுதி)
     

    என்று ஒரு காதலி புலம்புவதைக் கவிஞர் ஓவியம் செய்கின்றார். சாதிப் பாகுபாட்டால் எத்தனைக் காதலர்கள் நஞ்சருந்தினர்? ஆற்றிற் பாய்ந்தனர்? கடலில் மூழ்கினர்? தீயிற் குளித்தனர்? இன்னும் இப்படிப்பட்ட செய்திகளுக்குச் செய்தித் தாள்களில் இடமில்லாமல் போகவில்லை. கவிஞர் சாதி ஒழியக் கலப்புமணம் நல்ல தீர்வு என்று கருதினார். அவர் எழுதிய ‘பாண்டியன் பரிசு’ என்னும் காவியத்தில் இளவரசி அன்னம் என்பவள் தன் திருமணத்தைக் குறித்துக் கூறுகையில் ‘இவ்வுலகில் எல்லோரும் நிகரே’ என்கிறாள். திருமணத்திற்குச் சாதி பார்க்கக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்துகிறாள். சாதியற்ற சமூகம் கவிஞரின் கனவு. அக்கனவு மெல்ல மெல்ல உருவாகி வருகின்றது.
     

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
     

    1. ஓடப்பர் என்பவர் யார்?
    1. உலகம் யாரால் உருவானது என்று பாரதிதாசன் கூறுகிறார்?
    1. புனிதத்தன்மை எப்போது வருமென்று கவிஞர் கூறுகிறார்?
    1. மதம் சமுதாயத்தில் என்ன செய்யுமென்று பாரதிதாசன் கருதுகின்றார்?
    1. சமயத் தலைவர்களில் யார் யாரைப் பாரதிதாசன் ஏற்றுக் கொள்கிறார்?
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:47:59(இந்திய நேரம்)