தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பகுதி 2.2-மதவேறுபாடு நீங்குக

  • 2.2 மதவேறுபாடு நீங்குக

     

    E

    மதவேறுபாடுகளால் உலகம் பல குழப்பங்களையும் போர்களையும் சந்தித்திருக்கிறது. மதங்களுக்கிடையே வேறுபாடுகள், மதங்களுக்கு உள்ளேயே வேறுபாடுகள் தோன்றிக் கிளைத்து அசுரவல்லமை பெற்று மனிதநேயம் என்ற மாபெரும் தத்துவத்தை அழித்துக் கொண்டிருக்கின்றன. இந்தப் போரில் யாரும் ஈடுபடல் கூடாது என்கிறார் பாரதிதாசன்.
     

    சேசு முகம்மது என்றும் - மற்றும்
    சிவனென்றும் அரியென்றும் சித்தார்த்தனென்றும்
    பேசி வளர்க்கின்ற போரில் - உன்
    பெயரையும் கூட்டுவர் நீஒப்ப வேண்டாம்.

    (வாழ்வில் உயர்வுகொள்: 11-14, முதல் தொகுதி)
     

    என்று அறிவுரை கூறுகின்றார். மனிதனின் வறுமையை அகற்ற இந்தப் போர்கள் பயன்பட மாட்டா; அறிவை வளர்க்கவும் இவை உதவமாட்டா என்பது அவர் கருத்து. சமயத்துறைகளிலே இருந்த பலர் இக்கருத்தைக் கூறி இருந்தாலும், மத உலகிலிருந்து மனிதனை விடுவிக்கும் ஓர் அறிவுப் போரைப் பாரதிதாசனே தொடங்கி வைத்தவர் எனலாம். பொருளாதார அடித்தட்டிலே இருக்கும் மனிதனை அவன் உயர்வுக்காகப் போராடாமல் தடுத்தது மதம்; வறுமைப் பள்ளத்திலே இருக்கும் பலரை வழிபாடு, அருச்சனை, விழா, வேள்வி, தலப்பயணம், கழுவாய் தேடல் போன்ற முயற்சிகளுக்காகச் செலவழிக்கத் தூண்டியது. மீள முடியாத துன்பச் சுமை தமக்குப் பழைய பிறவிகளில் செய்த கருமங்களின் விளைவாக வந்தது என்று மதம் கற்பித்தது. கடவுள்தான் இதற்கு அருள்செய்ய வேண்டுமென்று மதவாத நூல்கள் கூறின. இந்நிலையிலேதான் பாரதிதாசன் கடவுள் மறுப்புக் கொள்கையை நோக்கிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. மதம் மனிதகுலத்தின் அமைதியைக் கெடுத்துவிடும் என்ற நிலையில் உலகை நோக்கிக் கவிஞர் இரு விளக்கங்களைக் கேட்கிறார்.

     

    சாந்தியால் உலகம் தழைப்பது நன்றா?
    சமயபேதம் வளர்த்தே தளர்வது நன்றா?

    (ஆய்ந்துபார்: 1-2, முதல்தொகுதி)
     

    எது நன்று? அமைதியால் உலகம் தழைப்பது நன்று என்றுதானே உலகம் கூறும்.

     

    2.2.1 மதங்களால் மடமை

     

    மதங்கள் மனிதரின் அறிவைத் தேய்த்து விடுகின்றன என்று பாரதிதாசன் கருதினார். மதம் அறிவில் மயக்கத்தை உண்டாக்கும்; நாட்டில் தீமை என்ற எரிமலையைப் புகைய விடும்; இது நலம் இது தீயது என்று பகுத்துப் பார்க்கும் அறிவை இழக்கச் செய்யும் என்று அவர் கூறுகின்றார்.

     

    மதம்என்ற கருங்கற் பாங்கில்
    மல்லிகை பூப்ப தில்லை
    மதியினில் மயக்கம் என்ற
    நஞ்சொன்றே மலரும்! நாட்டில்
    புதியதோர் பொல்லாங்கு என்னும்
    எரிமலை புகையும்; மக்கள்
    இதுநலம் இதுதீது என்னும்
    எண்ணமும் இழந்து போவார்.

    (குறிஞ்சித்திட்டு 20: 193-200)
     

    இந்தப் பாட்டை எண்ணுங்கள். கவிஞர் என்ன கூறுகிறார் தெரிகிறதா? மதம் ஒரு கருங்கல்லாம். கருங்கல் பாறையில் மல்லிகை பூக்குமா என்று கேட்கிறார். சிந்தனைகள் பூக்காமல் மடமை என்ற முட்கள் தோன்றச் செய்துவிடும் மதங்கள் மனித குல நலனுக்கு ஏற்றவை அல்ல என்பது அவர் கருத்து.

     

    நாய்களைப் போல்தமக் குள்ளே-சண்டை
    நாளும் வளர்க்கும் மதங்கள்

    (வாழ்வு: 19-20. இரண்டாம் தொகுதி)


    என்றும் அவர் எடுத்துரைப்பதைப் பாருங்கள்! மதத்தை வளர்ப்போர் மனிதர்களின் சிந்தனையை முடக்கி விட்டதை அவர் எடுத்துக் காட்டினார். “கட்டிச் சமூகத்தின் கண் அவித்து” விட்டதாக மதங்களின் மீது அவர் குற்றம் சாட்டினார். மதங்களின் சார்பாகத் தோன்றிய புராணங்களில் சொல்லப்பட்ட அறிவுக்கொவ்வாத நிகழ்ச்சிகளை அவர் இகழ்ந்துரைத்தார்.

     

    2.2.2 மக்கள் நலம் பேணுக

     

    மன்னர் ஆட்சியும் மக்கள் சக்தியும்

    எந்த அமைப்பும் மக்களின் நலம் காப்பதாக அமைய வேண்டும் என்று பாரதிதாசன் கருதினார். சமுதாய நலம் படைப்பதற்கு மன்னராட்சி இடையூறாக இருப்பின் மக்கள் கிளர்ச்சி செய்து அதனை மாற்ற வேண்டும் என்று கவிஞர் கருதினார். பாரதிதாசன் பாடல்கள் பலவற்றில் மன்னராட்சிக்கு எதிரான கிளர்ச்சி சித்தரிக்கப் பெறுவதைக் காணலாம்.
     

    இந்நிலத்துப் பெருமக்கள் ஓர் கடல்
    இடர்செய் மன்னவர் அக்கடற் குமிழிகள்

    (கடல்மேற்குமிழிகள்: 17,19-20, மூன்றாம் தொகுதி)

     

    என்று கூறி மக்கள் எல்லாரும் ஒன்றாய்த் திரண்டுக் குடியரசை நாட்டுதல் நன்று என அறிவுறுத்துவதைக் ‘கடல்மேற் குமிழிகள்’ என்ற அவர் படைப்புக் காட்டுகின்றது.

     

     

    புரட்சிக்கவி’ என்ற சிறுகாப்பியத்தில் உதாரன் என்ற கவிஞன் கொலைக்களத்தில் நிற்கின்றான். அவன் தலையை வெட்டுவதற்குக் கொலையாளிகள் காத்திருக்கின்றனர். அப்போது உதாரன் மக்களை நோக்கிப் பேசுகின்றான். ‘என் நாடு உரிமை பெற்று வாழவேண்டும்; கொடுங்கோன்மை வீழ வேண்டும்’ என்று முழங்குகின்றான். மக்கள் சக்தி இந்த உரைகேட்டுத் திரள்கின்றது. கொலையாளிகளிடமிருந்து உதாரனை மீட்கின்றது.

     

    மதத்தலைவர்களுக்கு ஓர் அறைகூவல்

    மன்னராட்சி பெரும்பாலும் மக்கள் நலம் காப்பதில்லை. மன்னர்கள் மதவாதிகளால் வழிநடத்தப் பெறுகின்றனர். மதவாதிகள் நாட்டுமக்கள் ஒன்றுகூடாமல் இருப்பதற்காக விதி, தலையெழுத்து, ஆண்டவன் கட்டளை ஆகியவற்றை உருவாக்கி விட்டனர். பாரதிதாசன் இவற்றை எல்லாம் எதிர்ப்பதில் தீவிரம் காட்டினார்.

     

    மதத்தின் தலைவீர்! - இந்த
         மண்ணை வளைத்துள்ள அண்ணாத்தைமாரே!
    குதர்க்கம் விளைத்தே - பெரும்
         கொள்ளை அடித்த கோடீசுவரர்காள்!
    வதக்கிப் பிழிந்தே - சொத்தை
         வடிகட்டி எம்மைத் துடிக்க விட்டீரே!

    (தொழிலாளர் விண்ணப்பம்: 41-46, முதல் தொகுதி)
     

    என்று மதத்தலைவர்களுக்கு மக்கள் அறைகூவல் விடவேண்டும் என்று கூறுகின்றார்.

     

    2.2.3 சான்றோர் நெறி அறிக

     

    பாரதிதாசன் மதங்களால் விளைந்த கொடுமைகளை எதிர்த்தார். மதத்தலைவர்கள் தங்கள் மதமே உயர்ந்தது என்று கூறி மற்ற மதங்களைத் தாக்க முனைந்தமையால் உண்டான தீங்கை எடுத்துரைத்தார். மதம் சார்ந்தவர்களில் சிலர் சீர்திருத்தக்காரர்களாக இருந்தனர். அவர்களைப் பாரதிதாசன் போற்றினார். புத்தரை அவர் போற்றிப்பாடினார் :
     

    தன்னேரிலாப் புத்தர் நெறியை வீழ்த்தித்
         தம்சமயம் மேலோங்கச் செய்யும் சூழ்ச்சி
    நன்றாமோ? உலகுக்குக் கொல்லா நோன்பை
         நடுவாய்ந்து முதற்புகன்றோர் புத்தர் தாமே!

    (புத்தர் புகன்றார் இல்லை: 29-32, நான்காம் தொகுதி)
     

    என்று புத்தர் அருள் உணர்வின் அடிப்படையில் உயிர்களைக் கொல்லாதீர், புலால் உணவு தவிர்ப்பீர் என்று கூறியதைப் பாரதிதாசன் காட்டுகின்றார். பாரதிதாசன் புலால் உண்பவரே ஆயினும் அவர் உள்ளம் கொல்லாமையில் பிடிப்புக் கொண்டிருந்தது. குடும்பவிளக்கு நூலில் அவர் பல்வேறு சமையல் பக்குவங்களை எடுத்துரைக்கின்றார். அவற்றில் ஒன்றுகூடப் புலால் வகை சார்ந்தது இல்லை. பாரதிதாசன் இராமலிங்க வள்ளலாரையும், ராமானுசரையும் ஏற்றுக் கொண்டவர். குமரகுருபரரையும் அவர் பாடிய மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழையும் பாரதிதாசன் ‘எதிர்பாராத முத்தம்’ என்ற நூலில் பாராட்டுகின்றார். இச்சான்றோர்கள் கற்பித்த நெறியை எல்லோரும் அறிந்து பின்பற்ற வேண்டுமென்று பாரதிதாசன் விரும்பினார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:47:55(இந்திய நேரம்)