தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சுயமரியாதைச் சமூகம்

  • 2.5 சுயமரியாதைச் சமூகம்
     
    E

    பாரதிதாசன் தாம் காணவிரும்பிய தமிழ்ச் சமுதாயம் சுயமரியாதை மிக்கதாக இருக்க வேண்டுமென்று விரும்பினார். தமிழ், தமிழர், தமிழ்நாடு இவற்றின் பெருமைக்குக் குறைவு வராமல் இருத்தல் வேண்டும். தொழிலாளர் உழைப்புக்கு மதிப்பளித்தல் வேண்டும். பெண்ணுலகு தலை நிமிர்ந்து வாழ வேண்டும். அடிமையாகிக் கிடக்காமல் மனிதரெல்லாரும் உரிமை பெற்றுத் திகழ வேண்டும். இவையே அவர் விரும்பிய சுய மரியாதைச் சமூகத் தன்மைகள். சுயமரியாதைச் சமூகத்தில் உயர்வென்றும் தாழ்வென்றும் இல்லை; அங்கு மக்கள் எல்லாரும் சமம். மனிதனை அடிமைப்படுத்துவதற்குரிய கருவிகளான சாதி, மதம் ஆகியவற்றுக்கு அங்கு இடமில்லை.
     


    2.5.1 உழைப்பவர் உயர்க
     

    உழைப்பவரால் உருவானது இந்த உலகம். தொழிலாளர் யாவரினும் உயர்ந்தோராகக் கருதத்தக்கவர். ஆனால் சமுதாயத்தில் அவர்கள் நிலை என்ன? அதோ வானத்தைப் பாருங்கள்! விண்மீன்கள்; இந்த விண்மீன்களைப் பூக்கள் என்றும் வைரங்கள் என்றும் சோளப் பொரிகள் என்றும் வான மகளின் சிமிட்டும் கண்கள் என்றும்தான் கவிஞர்கள் எல்லாம் பாடினார்கள்.


    பாரதிதாசன் மீன்களை எப்படிப் பார்க்கிறார் தெரியுமா? அவை வானத்தில் ஏற்பட்ட கொப்புளங்கள் என்கிறார். ஏன் கொப்பளித்தது? தொழிலாளர் பகல் பொழுது முழுதும் உழைத்து அந்தியிலே தங்கள் உரிமையைக் கேட்ட போது முதலாளிகள் சீறினார்கள்; வசை பொழிந்தார்கள்; இதனைக்கண்டு வானம் கொப்பளித்து விட்டது என்கிறார்.


    மண்மீதில் உழைப்பா ரெல்லாம்
         வறியராம்; உரிமை கேட்டால்
    புண்மீதில் அம்பு பாய்ச்சும்
         புலையர்செல் வராம்இ தைத்தான்

    கண்மீதில் பகலி லெல்லாம்
         கண்டுகண்டு அந்திக் குப்பின்
    விண்மீனாய்க் கொப்ப ளித்த
         விரிவானம் பாராய் தம்பி!


    (அழகின் சிரிப்பு)


    என்பது பாவேந்தர் பாட்டு. சித்திரச் சோலைகள் உருவாக எத்தனைத் தோழர்கள் இரத்தம் சொரிந்திருப்பார்கள்! நெல்விளையும் நிலங்களுக்கு எத்தனை மனிதர் வியர்வை இறைத்திருப்பார்கள்! தாமரை பூத்த தடாகங்களைச் சமைக்க எத்தனை மாந்தர் மண்ணுக்கடியில் புதைந்திருப்பார்கள்! நெடும்பாதைகள், ஆர்த்திடும் இயந்திரக் கூடங்கள், ஆகியன எல்லாம் தொழிலாளர் உழைப்பால் மலர்ந்தவை அன்றோ! இவர்கள் நிலை மாறப் புதிய உலகு படைக்க வேண்டுமென்று கூறுகிறார் கவிஞர். கோடரிக்காரனைக் காதல் தலைவனாகப் படைத்த பெருமை பாரதிதாசனுக்கு உண்டு. கூடைமுறம் கட்டுவோர், பூக்காரி, குறவர், ஆலைத்தொழிலாளி, உழத்தி, சுண்ணாம்பு இடிப்போர் ஆகியோரின் ஏற்றத்தைப் பாடிய கலைஞரும் அவரே.


    2.5.2 புரட்சித் திருமணம்
     

    பழந்தமிழர் திருமணத்தில் வேதமந்திரங்களோ, தீ வளர்த்தலோ, தாலி அணிவித்தலோ இல்லை. இடையில் புகுந்த இந்த வழக்கங்கள் இல்லாத தமிழ்த் திருமணத் திட்டத்தைக் கவிஞர் வகுத்தளித்துள்ளார்.


    1. பெரியார் ஒருவர் தலைமை தாங்க முன்மொழிதல்
    1. வழிமொழிதல்
    1. அவைத்தலைவர் தமிழ்த்திருமணம் குறித்துப் பேசுதல்
    1. மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்த உரை கூறல்
    1. மாலையும் கணையாழியும் மாற்றிக் கொள்ளுதல்
    1. அறமொழிகளால் வாழ்த்துக் கூறல்
    1. வந்தோர்க்கு நன்றி கூறல்

    என அத்திருமணம் அமைகின்றது. இத்திருமணம் இன்று தமிழ்நாட்டில் பரவலாக நடைபெறுகின்றது. இதோ அந்தத் திருமண வாழ்த்துக் கேளுங்கள்!


    ஒருமனதாயினர் தோழி - இந்தத்
    திருமணமக்கள் என்றும் வாழி
    பெருமனதாகி இல்லறம் காக்கவும்
    பேறெனப்படும் பதினாறையும் சேர்க்கவும்
    ஒரு மனதாயினர் தோழி



    இசையமுது-II

    2.5.3 கல்வி ஓங்குக
     

    சமுதாயம் சீர்பெறக் கல்வி வேண்டும். கல்வியில்லாத வீடு ஒளிவிளக்குகள் இருந்தாலும் இருண்ட வீடே! கல்வியில்லாத சமுதாயம் களர் நிலம். இவ்வாறு பாரதிதாசன் கருதினார். ஆண் பெண் எல்லாரும் கற்க வேண்டுமென்று வற்புறுத்தினார். என்னுடைய அருமைத் தமிழ்நாட்டில் எல்லோரும் கல்வி கற்று இமயமலையென ஓங்கினார் என்று கூறும் நாள் எந்நாளோ? எனக் கவிஞர் கேட்கிறார்.
     

    இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்
    என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்
    துன்பங்கள் நீங்கும் .......


    (தமிழ்ப் பேறு: 21-23. முதல் தொகுதி)


    என்று தமிழ்க்கல்வி யாவருக்கும் வேண்டுமென்று வற்புறுத்துகின்றார். கல்வி ஓங்கிய தமிழ்ச் சமுதாயம் அவர் கனவு. அஃது இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:48:06(இந்திய நேரம்)