தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஒற்று இடையில் மிகும் குற்றியலுகரங்களின் முன் நாற்கணம்

  • 5.4 ஒற்று இடையில் மிகும் குற்றியலுகரங்கள் முன் நாற்கணம்

    டு, று என முடியும் நெடில்தொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்களில் உள்ள ட, ற என்னும் வல்லின மெய்கள் வேற்றுமைப் புணர்ச்சியில் நாற்கணமும் (உயிர், வலி, மெலி, இடை) வந்து புணரும்பொழுது பெரும்பாலும் இரட்டிக்கும்.

    நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள்
    ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே                 (நன்னூல், 183)

    (ஒற்று - மெய்; ட ற ஒற்று இரட்டும் - ட் என்பது ட்ட் எனவும், ற் என்பது ற்ற் எனவும் இரட்டிக்கும்; வேற்றுமை மிகவே - வேற்றுமைப் புணர்ச்சியில் பெரும்பாலும்)

    சான்று:

    நாடு + அரசன் = நாட்டரசன்
    சோறு + பானை = சோற்றுப்பானை
    காடு + மனிதன் = காட்டு மனிதன்
    மாடு + வால் = மாட்டு வால்

    இச்சான்றுகளில் டு, று என முடியும் நெடில்தொடர் முன் வேற்றுமையில் நாற்கணமும் வர, இறுதியில் உள்ள ட, ற என்னும் மெய்கள் இரட்டித்தன.

    பகடு + ஏர் = பகட்டேர்
    வயிறு + பசி = வயிற்றுப்பசி
    முரடு + மனிதன் = முரட்டு மனிதன்
    வயிறு + வலி = வயிற்று வலி

    (பகடு - எருது, காளை; பகட்டேர் - காளை மாட்டைப் பூட்டிய ஏர்)

    இச்சான்றுகளில் டு, று என முடியும் உயிர்த்தொடர் முன் வேற்றுமையில் நாற்கணமும் வர, இறுதியில் உள்ள ட, ற என்னும் மெய்கள் இரட்டித்தன.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    வன்தொடர் அல்லன என்று கூறப்படும் குற்றியலுகரங்கள் எத்தனை?
    2.
    அல்வழியில் எந்தக் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும்?
    3.
    கொக்கு + சிறகு, குரங்கு + குட்டி - இவற்றைச் சேர்த்து எழுதுக.
    4.
    செய்து + கொடுத்தான், எடுத்து + கொடுத்தான் - இவற்றைச் சேர்த்து எழுதுக.
    5.
    வேற்றுமையில் ஒற்று இடையில் மிகுந்தும், மிகாமலும் வரும் குற்றியலுகரங்கள் யாவை?
    6.
    வயிற்றுப்பசி, ஆட்டுக்கால் - இவற்றைப் பிரித்து எழுதுக.
    7.
    ஒற்று இடையில் மிகும் குற்றியலுகரங்களின் முன் வேற்றுமையில் வல்லினம் மிகுமா?
    8.
    வேற்றுமைப் புணர்ச்சியில் நாற்கணம் வரும்போது இரட்டிக்கும் வல்லின மெய்கள் யாவை?
    9.
    நாடு + அரசன் - சேர்த்து எழுதுக.
புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 11:36:04(இந்திய நேரம்)