Primary tabs
5.4 ஒற்று இடையில் மிகும் குற்றியலுகரங்கள் முன் நாற்கணம்
டு, று என முடியும் நெடில்தொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்களில் உள்ள ட, ற என்னும் வல்லின மெய்கள் வேற்றுமைப் புணர்ச்சியில் நாற்கணமும் (உயிர், வலி, மெலி, இடை) வந்து புணரும்பொழுது பெரும்பாலும் இரட்டிக்கும்.
நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள்
ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே (நன்னூல், 183)(ஒற்று - மெய்; ட ற ஒற்று இரட்டும் - ட் என்பது ட்ட் எனவும், ற் என்பது ற்ற் எனவும் இரட்டிக்கும்; வேற்றுமை மிகவே - வேற்றுமைப் புணர்ச்சியில் பெரும்பாலும்)
சான்று:
நாடு + அரசன் = நாட்டரசன்
சோறு + பானை = சோற்றுப்பானை
காடு + மனிதன் = காட்டு மனிதன்
மாடு + வால் = மாட்டு வால்இச்சான்றுகளில் டு, று என முடியும் நெடில்தொடர் முன் வேற்றுமையில் நாற்கணமும் வர, இறுதியில் உள்ள ட, ற என்னும் மெய்கள் இரட்டித்தன.
பகடு + ஏர் = பகட்டேர்
வயிறு + பசி = வயிற்றுப்பசி
முரடு + மனிதன் = முரட்டு மனிதன்
வயிறு + வலி = வயிற்று வலி(பகடு - எருது, காளை; பகட்டேர் - காளை மாட்டைப் பூட்டிய ஏர்)
இச்சான்றுகளில் டு, று என முடியும் உயிர்த்தொடர் முன் வேற்றுமையில் நாற்கணமும் வர, இறுதியில் உள்ள ட, ற என்னும் மெய்கள் இரட்டித்தன.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I