தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

5.2-குறவஞ்சியில் நாடகக் கூறுகள்

  • 5.2 குறவஞ்சியில் நாடகக் கூறுகள்

        குறவஞ்சி இலக்கியம் நாடகம் என்று அழைக்கப்படுகிறது. நாடகக் கூறுகளில் முக்கியமானதொன்று நிகழ்கால இலக்கியப் போக்கில்     கடந்த காலத்தையும்,     எதிர்காலத்தையும்  ஒருங்கிணைப்பதாகும். இத்தகைய அடிப்படையைக் காரணமாகக் கொண்டு குறவஞ்சி இலக்கியங்கள் தோற்றம் பெற்றுள்ளன. இறப்பு, எதிர்வு, நிகழ்வு என்ற முக்காலத்தையும் திறம்பட உரைப்பது குறத்திப் பாட்டு என்னும்     நிலையில் நாடகப்பாங்கில் அமைந்துள்ளது.

        நாடகத்திற்குரிய ஐவகைச் சந்திகள், பாத்திரங்கள், பாத்திர உரையாடல்கள், இசையமைதிகள், எண்வகைச் சுவைகள் போன்ற நிலைகளைக் குறவஞ்சி இலக்கியங்கள் பெற்றுள்ளன. இசை, ஆடல் இவற்றின் துணை கொண்டு கதையின் கருவளர்ச்சிக்கான உள்நிகழ்வுகளின் இயக்கப் போக்கு நாடகத்தின் தனிச்சிறப்பாகும்.

    5.2.1 அய்வகைச் சந்திகள்

        நாடகம் அய்வகைச் சந்திகளைக் கொண்டு அமையும். இதனைக் கதைக்கோப்பு, கட்டுக்கோப்பு, கதைப்பின்னல் என்றும் குறிப்பிடுவர்.

    1. முகம் - தோற்றம்

    2. பிரதிமுகம் - வளர்ச்சி

    3. கருப்பம் - உச்சநிலை

    4. விளைவு - வீழ்ச்சி

    5. துய்த்தல் - முடிவு

        படைப்பாளன் தான் உணர்த்த விழைந்த கருத்தை வெளிப்படுத்த, படைப்புக் கலையில் ஈடுபடுகிறான். அக்கலையின் உயிர் அவன் அமைக்கும் கதைப்பின்னலில் அமைந்துள்ளது. கதைப் பின்னல் என்பது அடுத்தடுத்து வரும் கதை நிகழ்ச்சிகளிடையே அமையும் காரணகாரியத் தொடர்பாகும்.

        இக்கதைப் பின்னலை ஐவகைச் சந்திகள் என்பர். இவ்வைந்து நாடகச் சந்திகளும் உடம்பில் உள்ள மூட்டுகளைப் போல் இணைந்து நிற்க வேண்டும். மூட்டுகள் இணைந்து உருவம் தருவது போல் சந்திகள் இணைந்து நாடக உருவாக்கத்தைத் தரும். குறவஞ்சி இலக்கியங்களில் இவ் ஐவகைச் சந்திகளைக் காண இயலும்.

    · தோற்றம்

        நாடகத் தோற்றத்தை விதை (வித்து)யுடன் இணைத்துக் கூறலாம். விதை ஒரு செடியின் கடந்தகால உள்ளடக்கமாக அமையும். இதனைக் கரு என்பர். இக்கருவின் வளர்ச்சியே நாடகம் ஆகும். இக்கரு முளைத்தலை முகம் என்றும் தோற்றம் என்றும் கூறுவர்.

        குறவஞ்சி இலக்கியம் தலைவனைக் கண்டு காமுற்ற ஒரு தலைவியின் நிலையைத் தோற்றமாகக் கொண்டு அமையும்.

    · வளர்ச்சி

        விதைத்த வித்து நாற்றாய் வளர்ந்து மிளிர்ந்து நிற்கும். முளைத்த கரு வளர்ந்து வரும் நிலை வளர்ச்சி எனப்படும்.

        உலா வந்த தலைவனைக் கண்டு காமுற்ற தலைவி, காம உணர்வால் துன்புறுகிறாள். இனிமையான இதமான சூழல்கள் அனைத்தும்     வெறுப்புக்குள்ளாகின்றன.     மன்மதனையும், தென்றலையும், நிலவையும், குயிலையும், இன்ன பிறவற்றையும் பழித்துரைக்கிறாள். நேற்று வரை இன்பம் பயந்த இவை இன்று துன்பம் பயக்கின்றன.

    · உச்சநிலை

        நாற்றாய் வளர்ந்த செடி, தன்னுள் பொருள் பொதிந்த கருப்பமுறும். இதனை உச்சநிலை என்பர். இந்த உச்சநிலையைச் சிறப்புற அமைப்பதன் மூலம் நாடகம் வெற்றிபெறும்.

        தலைவனைக் கண்டு காமுற்ற தலைவி துன்பமுறுகிறாள். தோழியின் துணையை நாடுகிறாள். தோழி தலைவனிடம் தூது செல்கிறாள். எதிரில் குறி சொல்லும் குறத்தியைக் கண்டு, தலைவிக்கும் குறி சொல்ல அழைக்கிறாள். குறத்தி நாட்டுவளம், மலைவளம், நகர்வளம், சாதிவளம் போன்ற வளம் பல கூறி, பின்பு தலைவியை நோக்கிக் குறி கூறுகிறாள்.

    · வீழ்ச்சி

        கருப்பமுற்ற பயிர் விளைந்து தானியங்களைத் தந்தது. இதனை வீழ்ச்சி என்பர். கதைக்கருவின் உச்சநிலைக்குப் பின் வீழ்ச்சி அடைவது நாடக உத்தியின் நான்காவது நிலையாகும். தலைவிக்குக் குறி கூறிய பின்பு தலைவி தந்த பரிசிலைப் பெற்றுச் செல்கிறாள் குறத்தி. குறவன் தன் நண்பனுடன் வேட்டையாடிக் கொண்டு வருகிறான். குறவனும் குறத்தியும் உரையாடுகின்றனர். இது வீழ்ச்சியாக அமையும்.

    5.2.2 பாத்திரங்கள்

        கதை     இலக்கியப்     படைப்பில்     பாத்திரங்கள் முக்கியமானதோர் இடம்பெறும். படைப்பாளனின் கருத்தையும், கதையையும் சுவை ஒளிக்குக் கொண்டு செலுத்தும் ஊடகப் பொருளாகப் பாத்திரம் இடம்பெறும். கதை இலக்கியங்களுக்குக் கதைப்பின்னல் எலும்புக் கூடு என்றால் அந்த எலும்புக் கூட்டிற்கு அழகிய உருவம் தரும் நிலையில் பாத்திரப்படைப்பு அமையும். பல்வேறு கதைமாந்தர்களின் பாத்திரங்கள் தொடர்புபடுத்தப் படுகின்றன. ஒரு நல்ல நாடகத்தின் வெற்றி கதைமாந்தர்களை ஆதாரமாகக் கொண்டு அமையும்.

        குறவஞ்சி நாட்டிய நாடகங்களில் அதிகமான கதை மாந்தர்களைப் படைக்காமல் மிகக் குறுகிய எண்ணிக்கையில் அமைப்பர். ஒருவகையில் இந்நாட்டிய நாடகங்கள் நடத்துவோர்க்கு இது மிகவும் பயன்தரும் நிலையில் அமையும். மேலும் குறவன், குறத்தி, குளுவன், கட்டியக்காரன் போன்ற நாடக மாந்தர்கள் இடம்பெறுவர்.

    5.2.3 உரையாடல்கள்

        நாடகப் பாங்கில் பாத்திர உரையாடல் சிறப்பு நிலை பெறும் பகுதியாக விளங்கும். குறவஞ்சி உரையாடல் பகுதியில் சிங்கன், சிங்கி உரையாடல் பகுதி மிகச் சிறப்புடன் அமைக்கப்படும். சிங்கன் கேள்வி கேட்க, சிங்கி உரையாடும் நிலையில் அமைக்கப்படும்.

        இத்தனை நாளாக என்னிடம் சொல்லாமல்      எங்கே நடந்தாய் நீ சிங்கி                 (எங்கே நடந்தாய் நீ)     கொத்தார் குழலார்க்கு வித்தார மாகக்      குறிசொல்லப் போனேனடா சிங்கா                 (குறிசொல்லப்)     பார்க்கில் அதிசயந் தோணுது சொல்லப்      பயமா இருக்குதடி சிங்கி                 (பயமாக)     ஆர்க்கும் பயமில்லை தோணின காரியம்      அஞ்சாமற் சொல்லடா சிங்கா                 (அஞ்சா)     காலுக்கு மேலே பெரிய விரியன்      கடித்துக் கிடப்பானேன் சிங்கி                 (கடித்து)     சேலத்து நாட்டிற் குறிசொல்லிப் பெற்ற      சிலம்பு கிடக்குதடா சிங்கா                 (சிலம்பு)

    இவ்வாறு சிறப்பான உரையாடல்கள் இதன் நாடகப் பண்பை மிளிர வைக்கின்றன.

    5.2.4 எண்வகைச் சுவைகள்

        நாடகத்திற்கு அழகூட்டும் நிலையில் எண்வகைச் சுவைகள் உள்ளன. இதனை எண் வகை மெய்ப்பாடு என்று தொல்காப்பியர் குறிப்பிடுவர். நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டும் குறவஞ்சி இலக்கியங்களில் காணலாம். எடுத்துக்காட்டாக. குற்றாலக் குறவஞ்சியில்

    · நகை

        கொட்டகைத் தூண்போற் காலி லங்க     ஒட்டகம் போலே மேலி லங்க     (87) - என்பது,

        திரிகூடன் என்னும் சிங்கனுக்கு எதிரில் கள்ளைக் குடித்து ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். அவன் தோழன் நூவனின் கால்கள் கொட்டகைக்கு நட்டிருக்கும் தூண்களைப் போன்று தோன்றின. ஒட்டகத்தைப் போல அவனுடைய மேற்பாகம் தோன்றியது என்று கூறுகிறது.

    · அவலம்

        அஞ்சு தலைக்குள் ஆறு தலைவைத்தார்              எனது மனதில்      அஞ்சு தலைக்கோர் ஆறு தலைவையார்     (41)

    தலைவி, தலைவன் பவனி வரக் கண்டு துன்புறுகிறாள். இதிலிருந்து என்னை இறைவன் காப்பாற்ற மாட்டாரா என்ற பொருளில், தம்முடைய ஐந்து தலைகளுக்குள் ஆறாவதாகிய கங்கையையும் தலை மீது கொண்டுள்ள ஈசன் என் மனதில் தோன்றியுள்ள அஞ்சுதலுக்கு ஆறுதல் தராமல் உள்ளாரே என்பது அவலமாகும். இவைகளைப் போல் உவகைச் சுவைகள் இடம்பெறும்.

    தன்மதிப்பீடு : வினாக்கள் - I

    1.

    குறவஞ்சி நூல்கள் எவ்வெப் பெயரால் அழைக்கப்படுகின்றன?

    2.

    குறவஞ்சி சங்க இலக்கியத்தில் எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறாள்?

    3.

    குறத்திப் பாட்டின் இலக்கணம் உரைக்க.

    4.

    மீனாட்சியம்மை குறத்தில் வரும் குறத்தி எவை, எவற்றைப் பார்த்துக் குறி சொல்கிறாள்?

    5.

    குளுவ நாடகத்தின் பெயர்களில் இரண்டினைக் கூறுக.

    6.

    ஐவகைச் சந்திகளைக் குறிப்பிடுக.

    7.

    பெரும்பாலான குறவஞ்சி நாட்டிய நாடகங்களில் இடம்பெறும் பாத்திரங்களைக் கூறுக.

    8.

    எண்வகைச் சுவைகள் யாவை?

    9.

    குறவஞ்சி பாட்டுடைத் தலைவியின் பெயர்களில் மூன்றினைக் குறிப்பிடுக.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:03:48(இந்திய நேரம்)