Primary tabs
- 5.7 தொகுப்புரை
கவிஞராகப் புகழ்பெற்ற கண்ணதாசனின் உரைநடைச் சிறப்பினைக் காண்பது இப்பாடத்தின் நோக்கம் ஆகும். இவர் 24.6.1927இல் திரு.சாத்தப்பனாருக்கும் திருமதி. விசாலாட்சி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்டபெயர் முத்தையா என்பதாகும். மிகக் குறைவான பள்ளிக் கல்வியை மட்டுமே பெற்றார். இளமையிலேயே எழுத்தார்வம் கொண்டார். பாடல் எழுதும் ஆற்றல் பெற்றார்.
இலக்கிய உலகில் கவிஞராக அறிமுகமான கண்ணதாசன் உரைநடைத் துறையிலும் தம் பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். அவை, புதினங்கள், குறும் புதினங்கள், சிறுகதைத் தொகுதிகள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கட்டுரை நூல்கள், தத்துவ நூல்கள், தன் வரலாறு, திரைக்கதை வசனங்கள் என்ற தலைப்புகளில் அடங்குவன. கண்ணதாசனின் உரைநடைப் படைப்புகளில் தமிழ் இன, மொழி உணர்வு, திராவிட இயக்க உணர்வு, தமிழர் வரலாறு, இந்தியத் தேசிய உணர்வு, தத்துவம், பட்டறிவுப் பிழிவுகள், இந்து சமயம், அரசியல், இலக்கியத் திறனாய்வுகள், தன் வரலாறு என்று பாடுபொருள்கள் பலவாகக் காணப்படுகின்றன. இவரது உரைநடையில் எதுகையும் மோனையும், உவமை நயம், அடுக்கு மொழிகள், கருத்து விளக்கம் முதலியவையும் தனித்தன்மைகளாக விளங்குகின்றன. கண்ணதாசன் புதின எழுத்தாளர், சிறுகதை ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இதழாசிரியர், திரையிசைப் பாடலாசிரியர், திரைப்படக் கதைவசன ஆசிரியர், நாடக ஆசிரியர் என்று பல்திறப் பாங்கில் சிறப்புற்றுத் திகழ்ந்தவர். கண்ணதாசன் உரைநடைத் தமிழுக்கு வழங்கிய கொடையாகச் சிறுதொடர்கள், வருணனை, மொழிப்பற்று, நாட்டுப்பற்று, உருவக நடை முதலியவற்றைக் குறிப்பிடுவது பொருந்தும். கண்ணதாசனின் உரைநடையில் தமிழின் இனிமையும் எளிமையும் இணைந்து நிற்கும்.
1.கண்ணதாசன் உரைநடையின் தனித்தன்மைகள் இரண்டினை எடுத்துக் காட்டுகளுடன் எழுதுக.2.கண்ணதாசனின் பல்திறப் பாங்கில் இரண்டினைக் குறிப்பிடுக.3.கண்ணதாசன் உரைநடைக்கு வழங்கிய கொடைகள் யாவை?4.கண்ணதாசனின் உரைநடைக் கொடைகளில் ஏதேனும் ஒன்றினை விளக்குக.5.கண்ணதாசனின் தமிழ்நாட்டுப் பற்றுக்கு ஒரு சான்று தருக.