54. வயந்தகன் அகன்றது

இதன்கண்: உதயணன் முதலியோர் பாலைநிலத்திலே   முள்இலவ மரத்தின் கீழே கரந்துறையும் பொழுது   வயந்தகன், யான் சென்று புட்பக நகரத்தே இடபகனைக்   கண்டு அவன்பால் ஊர்திகளும் நால் வகைப்படையும்  பெற்று வருவேன் என்று கூறி உதயணன் பால் விடை  பெற்றுப் போதலும் பிறவும் கூறப்படும்.
 
              கரந்தனர் ஒடுங்கிய கடும்பகல் கழிந்தபின்
            பரந்த வானம் பசலை எய்த
            அழல்உமிழ் கதிரோன் அத்தம் சேர
            நிழல்உமிழ் செல்வன் நிலாவிரித்து இமைப்ப
        5   வான்தோ இஞ்சி வளநகர் வரைப்பின்
            தேன்தோய் கோதைத் திருநிலை மகளிர்
            வெள்ளி விளக்கத்து உள்ளிழுது உறீஇப்
            பள்ளி மாடத்துப் பரூஉச்சுடர் கொளீஇக்
            காடி கலந்த கோடிக் கலிங்கம்
       10    கழும ஊட்டும் காழ்அகில் நறும்புகை
            முழுநிலா மாடத்து முடிமுதல் தடவக்
 
              கேள்வித்துறை போகி வேள்வி முற்றிய
           அந்த ணாளர் தந்தொழில் தொடங்கப்
            பால்வெண் குருகின் பன்மயிர்ச் சேவல்
       15    பூம்பொறிப் பெடையைப் புலவி உணர்த்திப்
            பொறிப்பூம் பள்ளி புகாஅது அயல
            மதிதோய் மாடத்து மழலைஅம் புறவொடு
            வெள்ளிவெண் மாடத்துப் பள்ளி கொள்ளும்
            பசும்பொன் நகர்அமர் விசும்புபூத் ததுபோல்
       20   செழுஞ்சுடர் விளங்குஞ் சிறுபுன் மாலை
 
              வைஎயிற்றுத் துவர்வாய் வாசவ தத்தைதன்
            தார்ப்பூண் மார்பில் தந்தை கடிமனைச்
            சீர்ப்பூண் களைந்த சில்என் கோலமொடு
            நிலாவெண் முற்றத்து உலாவி ஆடிச்
       25   செம்முது செவிலியர் கைம்முதல் தழீஇய
            சாலி வாலவிழ் பாலொடு கலந்த
            தமனிய வள்ளத்து அமிழ்தம் அயிலாள்       
 
              யானையும் புலியும் கூனல் கரடியும்
            அரிமான் ஏறும் நரிமான் சூழ்ச்சியும்
       30   ......வுங் காட்டமொடு எனையவை பிறவும்
            தந்துஉரைக் கிளவியில் தந்துறை முடித்த
            தன்இணை ஆயம் பன்நொடி பகரச்
            செவியில் கேட்கும் செல்வம் செய்யாது
 
              நண்ணிய தோழியொடு கண்ணில் காணக்
       35   கலவ மஞ்ஞை கவர்குரல் பயிற்றி
            இலவம் கொம்புதோறு இறைகொண்டு ஈண்டப்
            பொறிவரி இரும்புலிப் போத்துநனி வெரீஇ
            மறியுடன் தழீஇய மடமான் அம்பிணை
            துள்ளுநடை இரலையொடு வெள்ளிடைக் குழுமப்
       40   பிடிக்கணம் தழீஇய பெருங்கை யானை
            இடிக்குரல் இயம்பி எவ்வழி மருங்கினும்
            நீர்வழிக்கு அணவரும் நெடுங்கைய ஆகிக்
            காரிரு முகிலில் கானம் பரம்பச்
            செழுநீர்ப் பொய்கையுள் கொழுமலர் கூம்பப்
       45   புள்ளினம் குடம்பை சேரப் புல்என
            அம்புறு புண்ணின் அந்திவந்து இறுப்ப
 
              ஓங்கிய பெரும்புகழ் உருமண் உவாறை
            தேங்கமழ் திருநகர்த் திசையும் எல்லையும்
            ஆற்றது இடரும் அவ்வழி உள்ள
       50   பொல்லாக் குறும்பும் போகுதற்கு அருமையின்
            காலை நீங்கிய மாலை யாமத்துப்
            பனிப்பூங் கோதையொடு தனித்தனம் இயங்கின்
            அற்றம் தரூஉம்அஃது அமைச்சுழுக்கு உடைத்துன
            உற்ற தோழன் னுதயணன்கு உரைக்கும்
 
         55   கொடிமணி நெடுமதில் கொற்றவன் மடமகள்
            பிடிமிசை இருந்து பெருங்கவின் வாடி
            வருத்தம் எய்திய வண்ணமும் வழிநடந்து
            அரத்தம் ஆர்ந்த அம்செம் சீறடி
            கோவத்து அன்ன கொப்புளங் கூர்ந்து
       60   நோவ ஒல்கி நொசிந்த மருங்குலள்
            அமிழ்துஉறழ் ழடிசில் அயிலா அசைவொடு
            நவைகொண்டு அழிந்து நடுக்கம் எய்தித்
            தாங்கல் ஆற்றாது தளர்தலும் ஆங்கே
 
              உலைவுஇல் பெரும்புகழ் யூகி ஒட்டார்
       65   நிலவரை நிமிர்வுறு நீதி நிறீஇக்
            கூற்றுஉறழ் மொய்ம்பின் ஏற்றுப்பெயர் அண்ணல்
            பரந்த படையொடு இருந்துஇனிது உறையும்
            புகல்அரும் புரிசைப் பொருவில் புட்பகம்
            இருளிடை எய்திப் பொருபடை தொகுத்துக்
       70   காலை வருவேன் காவல் ஓம்பிப்
            போகல் செல்லாது புரவல இருஎன
            உள்ளத் துள்பொருள் உணர்ந்தோன் போல
            வள்ளிதழ் நறுந்தார் வயந்தகன் உரைத்த
            மாற்றம் கேட்டே மன்னவன் மனம்உவந்து
 
         75   இற்றும் கேளென மற்றவற் குரைக்கும்
            கொடிஅணி நெடுமதில் கொடிக்கோ சம்பிப்
            படிஅணி நெடுங்கடைப் பகல்அங் காடிஉள்
            ஊறுகளி யானை ஒருங்குடன் ஏற்றி
            வீறுபடு கோலமொடு வியன்நகர் விழவுஅணி
       80   கொண்ட காலைத் தண்டப் பாற்படுத்து
            என்அணி பெருங்கலம் தன்அணிந்து ஏற்றிக்
            குற்றமில் பெரும்புகழ்க் கோப்பெருந் தேவி
            கொற்றக் கோயிலுள் மற்றுப்பிறர் இன்றித்தன்
            பெருமலர்ச் சீறடி இருநிலத்து இயங்கத்
       85   தண்ட வேந்தன் தமராம் நமக்கெனக்
            கொண்ட கொள்கையும் குறிப்பினது நிலைமையும்
 
              யானை வாரியும் சேனை வீடும்
            அடுத்தனைஆராய்ந்து அறிய என்வயின்
            நெடித்தல் செல்லாய் விடுத்தல் நீயென
       90   விடுத்தனன் விடுத்து வேந்தன் இருந்த
            அந்தக் கோட்டியுள் மந்திர மாகப்
            பெரும்பொருள் இதுவெனப் பொருந்தக் கூறி
            அரும்பெறல் யூகியும் உருமண் ணுவாவும்
            வயந்தகன் வரினும் நயந்தனன் தெரியாது
       95   இருக்க தானென நெறிப்படக் கூறிக்
 
              குறிப்பெழுத்து ஓலை பொறிப்புனைந்து ஒற்றிய
            அம்மடி அன்றியும் ஆகும் மெய்ம்மொழி
            வருவோர்க்கு அறியக் கூறி மற்றுஎன்
            செருவில் வேந்தன் செய்கை என்ற
      100    பின்னர் அல்லது துன்னினர் இவரெனத்
            துணியப் பெறாய்எனத் துணிந்தியான் கூறிய
            பணிவகை உண்டது பண்டைக் காலத்து
            தின்றிந் நிலைமைக் கன்றது நினைப்பின்
            அற்றம் தருமென உற்ற தோழற்கு
      105    கடையா ளர்உண்மொழி அறியக் கூறிப
 
              படையாள் கடுந்தொழில் பற்றா மன்னன்
            பாவையைத் தழீஇப் பண்ணுப்பிடி ஏற்றி
            எய்தா அரும்பொருள் எய்திய பின்றைப்
            பொய்வகை புணர்த்த புணர்ப்பும் போந்தபின்
      110    செய்வகை அறிதற் பொருட்டும் சேனையுள்
            உய்வகை மற்றவன் ஒழிந்த உறுதியும்
            உறுதி ஓரான் பிறிதுநினைந்து ஒற்றிக்
            குஞ்சரம் கடாஅய்க் கொணர்மின் சென்றெனும்
            வெஞ்சின வீரன் வெகுட்சியும் வெகுட்சியின்
 
        115    விடுத்த பல்படை பெயர்த்தல் பொருட்டா
            நம்படை ஒழிந்த வண்ணமும் வெம்படைக்
            காவலன் நாடு கங்குல் நீங்கிச்
            சார வந்த தன்மையும் சார்ந்தபின்
            அரும்பொறி அழிந்த வெந்திரம் போல
      120    இரும்பிடி வீழ்ந்ததன் இன்னுயிர் இறுதியும்
            இற்ற இரும்பிடிப் பக்கம் நீங்கி
            இடுக்கண் எய்தி இலங்கிழை மாதர்
            நடக்கல் ஆற்றாள் நடுக்கம் எய்திக்
            கடக்கஅருங் கானத்துக் கரந்த சேக்கையும்
 
 

      125    சேக்கையுள் நின்றுநீ சென்ற செலவும்
            வாய்ப்பக் கூறி வாள்படை தொகுத்து
            வையம் பூட்டி வழிவரல் விரைந்தென்
            எவ்வம் தீர இருள்கழி காலைக்
            கோல்குறி எல்லையுள் குறிவழி வம்மென
      130    வாள்டிறல் வத்தவன் வயந்தகன் போக்கிப்

 
              பனிவரை மார்பன் தனியன் ஆகி
            வேழ வேட்டத்து வீழ நூறி
            அருஞ்சிறை எய்தி யாப்பொடு புக்க
            பெருஞ்சிறைப் பள்ளிப் பேர்இருள் போலும்
      135    துன்பப் பெருங்கடற்கு இன்பம் ஆகி
            மாந்தளிர் மேனி ஏந்துபுணை யாக
            நீந்துதல் வலித்த நெஞ்சினன் ஆகிக்
            கணையொடு திரிதரும் காமன் போலத்
            துணைநல மாதரைத் தோழியொடு துயிற்றித்
 
        140    துஞ்சல் செல்லான் வெஞ்சின விடலை
            வாள்வலம் கொண்டு காவல் ஓம்ப
            வரிநிறக் கோம்பி வால்இமிழ்ப்பு வெரீஇ
            எரிமலர் இலவத்து இருஞ்சினை இருந்த
            அலந்த மஞ்ஞை யாமங் கூவப்
      145    புலர்ந்தது மாதோ புரவலன்கு இரவுஎன்.