தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.3 வினையாலணையும் பெயர்

  • 3.3 வினையாலணையும் பெயர்

    ஒரு வினைமுற்று, வினையை உணர்த்தாமல் பெயர்த் தன்மை பெற்று வந்தாலும் பெயர்த்தன்மை பெற்று வேற்றுமை உருபை ஏற்று வந்தாலும் வினையாலணையும் பெயர் எனப்படும்.

    (எ.கா)

    பாடியவன் பாராட்டுப் பெற்றான்.
    பாடியவனுக்குப்
    பரிசு கிடைத்தது.

    இதில் முதல் எடுத்துக்காட்டில் உள்ள வினைமுற்று, பெயர்த்தன்மை பெற்று வந்துள்ளது. இரண்டாவது எடுத்துக்காட்டு பெயர்த்தன்மை பெற்று வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ளது.

    வினையாலணையும் பெயர் முன்று வகைப்படும். அவை,

    1) தன்மை வினையாலணையும் பெயர்
    2) முன்னிலை வினையாலணையும் பெயர்
    3) படர்க்கை வினையாலணையும் பெயர்

    என்பவை ஆகும்.
     

    3.3.1 தன்மை வினையாலணையும் பெயர்

    தன்மை வினைமுற்று, பெயர்த் தன்மை பெற்று வந்தால் தன்மை வினையாலணையும் பெயர் எனப்படும்.

    (எ.கா)

    எடுத்தேனைப் பார்த்தாயா.
    எடுத்தேமைப்
    பார்த்தாயா.

    இதில் முதலில் உள்ள எடுத்துக்காட்டு ஒருமையையும், இரண்டாவது எடுத்துக்காட்டு பன்மையையும் குறிக்கிறது.
     

    3.3.2 முன்னிலை வினையாலணையும் பெயர்

    முன்னிலை வினைமுற்று, பெயர்த் தன்மை பெற்று வந்தால் முன்னிலை வினையாலணையும் பெயர் எனப்படும்.

    (எ.கா)

    சென்றாயைக் கண்டேன்.
    சென்றீரைக் கண்டேன்

    இதிலும் முதலில் உள்ள எடுத்துக்காட்டு ஒருமையையும், இரண்டாவது எடுத்துக்காட்டு பன்மையையும் குறிக்கிறது.
     

    3.3.3 படர்க்கை வினையாலணையும் பெயர்

    படர்க்கை வினைமுற்று, பெயர்த் தன்மை பெற்று வந்தால் படர்க்கை வினையாலணையும் பெயர் எனப்படும்.

    (எ.கா)   படித்தவனுக்குப் பரிசு கிடைத்தது.

    தன்மை வினையாலணையும் பெயர், முன்னிலை வினையாலணையும் பெயர், படர்க்கை வினையாலணையும் பெயர் ஆகிய மூன்றும் உடன்பாட்டுப் பொருளில் வந்துள்ளன.
     

    ● வினையாலணையும் பெயர் எதிர்மறைப் பொருளில்
      வருவதும் உண்டு.

    (எ.கா)  பாடாதவர் பரிசு பெறமுடியாது.

    இதில் பாடாதவர் என்பது எதிர்மறைப் பொருளை உணர்த்துகிறது.
     

    3.3.4 தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும்
         உள்ள வேறுபாடுகள்

    தொழிற்பெயர்

    வினையாலணையும் பெயர்

    1. தொழிலை மட்டும் உணர்த்தும்.

    1. தொழிலையும் தொழில் செய்த பொருளையும் உணர்த்தும்.

    2. படர்க்கை இடத்தில் மட்டும் வரும்.

    2. தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களிலும் வரும்.

    3.காலம் காட்டாது.
    3. காலம் காட்டும்.


    வினையின் பெயரே படர்க்கை; வினையால்
    அணையும் பெயரே யாண்டு மாகும்.

    (நன்னூல் : 286)

    தொழிற்பெயர், படர்க்கை இடத்தில் மட்டும் வரும். வினையாலணையும் பெயர் மூவிடத்திலும் வரும் என்பது இந்த நூற்பாவின் பொருள்.


    1.

    பண்புப் பெயர் என்றால் என்ன?

    2.

    முதனிலைத் தொழிற்பெயரை விளக்குக.

    3.

    வினையாலணையும் பெயர் என்றால் என்ன?

    4.

    தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடு ஒன்றைக் குறிப்பிடுக.

    5.

    எதிர்மறை வினையாலணையும் பெயருக்கு எடுத்துக்காட்டுத் தருக.

புதுப்பிக்கபட்ட நாள் : 24-07-2017 17:39:41(இந்திய நேரம்)