தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.5 வேற்றுமை தொடர்பான பிற கருத்துகள்

  • 6.5 வேற்றுமை தொடர்பான பிற கருத்துகள்


  • வேற்றுமை உருபு ஏற்கும்போது திரியும் பெயர்கள்
  • சில பெயர்ச் சொற்கள் வேற்றுமை உருபு ஏற்கும்போது திரியும்.

    வேற்றுமை உருபு ஏற்கும்போது தான், தாம், நாம் என்பவை தன், தம், நம் எனக் குறுகும். யான் என்பது என் எனவும், யாம் என்பது எம் எனவும், நீ என்பது நின் எனவும், நீர் என்பது நும் எனவும் திரியும்.

    எடுத்துக்காட்டு

    தான் + ஐ
    = தன்னை
    தாம் + ஐ
    = தம்மை
    நாம் + ஐ
    = நம்மை
    யான் + ஐ
    = என்னை
    யாம் + ஐ
    = எம்மை
    நீ + ஐ
    = நின்னை
    நீர் + ஐ
    = நும்மை

    என வரும்.


  • உருபு ஏலாப் பெயர்கள்
  • முன்னிலைப் பெயர்களில் நீயிர், நீவிர் என்பனவும், தன்மைப் பெயர்களில் நான் என்பதும் வேற்றுமை உருபுகளைக் கொள்ளா. இவை எழுவாயாக மட்டுமே வரும்.

    எடுத்துக்காட்டு

    நான் வந்தேன்
    நீயிர் வந்தீர்

    எழுவாய் வேற்றுமை

    நீவிர் வருவீர்

  • முதல் வேற்றுமைக் கருத்தாவும் மூன்றாம் வேற்றுமைக்
          கருத்தாவும்
  • வேற்றுமைகளில் முதல் வேற்றுமையிலும், மூன்றாம் வேற்றுமையிலும், வினைமுதல் பொருள் (கருத்தா) வந்ததைக் கண்டோம். அவற்றிடையே வேறுபாடு உண்டு. எடுத்துக்காட்டாக,

    தச்சன் மரத்தை வாளால் வெட்டினான் - முதல் வேற்றுமை
    தச்சனால் மரம் வாளால் வெட்டப்பட்டது - மூன்றாம் வேற்றுமை

    முதல் தொடரில் முதல் வேற்றுமைக் கருத்தாவாக வந்த தச்சன், இரண்டாம் தொடரில் மூன்றாம் வேற்றுமைக் கருத்தாவாக வந்தபோது ஆல் உருபு ஏற்றிருக்கிறது.

    இவ்வாறு மாறும்போது முதல் வேற்றுமையில் செயப்படுபொருளாக (இரண்டாம் வேற்றுமையாக) வந்தது, மூன்றாம் வேற்றுமையில் எழுவாயாக (முதல் வேற்றுமையாக) மாறியுள்ளது.

    மேலும், முதல் வேற்றுமைக்கு வந்த செய்வினைப் பயனிலை, மூன்றாம் வேற்றுமைக்குச் செயப்பாட்டு வினைப் பயனிலையாக மாறி உள்ளது. செயப்படுபொருள் எழுவாயாக வந்ததால் செய்வினைப் பயனிலை செயப்பாட்டு வினைப் பயனிலையாக மாறியுள்ளது.

    வெட்டினான் = செய்வினை
    வெட்டப்பட்டது = செயப்பாட்டுவினை

  • மூன்றாம் வேற்றுமை - ஐந்தாம் வேற்றுமை ஏதுப்பொருள்கள்
  • மூன்றாம் வேற்றுமையிலும் ஐந்தாம் வேற்றுமையிலும் வந்த ஏதுப்பொருளில் சிறிது வேறுபாடு உண்டு. ஏது, கருவி, காரணம் என்பவை ஒரே பொருளைத் தரும் சொற்கள்.

    மூன்றாம் வேற்றுமைக் கருவி (ஏது) ‘வாளால் வெட்டப்பட்டது’ என்பது போலப் புறக் கருவியாகவே பெரும்பாலும் வரும்.

    ஐந்தாம் வேற்றுமைக் கருவி ‘அறிவின் அறிந்தான்’ என்பது போல அகக்கருவியாகவே பெரும்பாலும் வரும்.


  • ஒரே உருபு இரண்டு இடங்களில் வரும்போது மாற்றம்
  • பொருளை விளக்கமாக, விரிவாகக் கூறவேண்டிய இடத்தில் பெயர்ச்சொற்கள் வேற்றுமை உருபுகளை ஏற்றுவரும். பொதுவாகப் பெயர்ச்சொல் ஒரே ஒரு வேற்றுமை உருபைப் பெற்றுவரும். ஆனால் சில நேரங்களில் ஒரே தொடரில் ஒரே வேற்றுமை உருபு இரண்டு இடங்களில் வருவதுண்டு. அது சிறப்பு அன்று. பொருள் விளங்கும் வண்ணம் பொருத்தமான வேறு வேறு உருபுகளை இடுதல் வேண்டும்.

    எடுத்துக்காட்டு :

    மரத்தைக் கிளையை வெட்டினான்.

    ‘ஐ’ என்னும் உருபு இரண்டு இடங்களிலும் வந்து பொருள் மயக்கம் தருகின்றது. மரத்தை வெட்டினானா? அல்லது கிளையை வெட்டினானா? என்று தெரியவில்லை. ஏதாவது ஓர் இடத்தில் பொருத்தமான வேறு ஓர் உருபை இட வேண்டும்.

    எடுத்துக்காட்டு :

    மரத்தைக் கிளையின்கண் வெட்டினான்.
    மரத்தின்கண் கிளையை வெட்டினான்.

    என்றோ, ‘மரத்தினது கிளையை வெட்டினான்’ என்றோ இருத்தல் வேண்டும்.

    மரம் = முதல் பொருள்
    கிளை = சினைப்பொருள்

    முதலுக்கும் சினைக்கும் வேறு உருபுகளை இடல் வேண்டும்.

    முதலுக்கு - ‘ஐ’ உருபு என்றால் சினைக்கு - ‘கண்’ உருபு.
    முதலுக்கு - ‘கண்’ உருபு என்றால் சினைக்கு ‘ஐ’ உருபு.
    முதலுக்கு - அது உருபு என்றால் சினைக்கு ‘ஐ’ உருபு.

    முதலை ஐயுறின் சினையைக் கண் உறும்
    அதுமுதற்கு ஆயின் சினைக்கை ஆகும்

    (நன்னூல் : 315)


  • வேற்றுமை உருபு மயக்கம்
  • இதுவரையில் எட்டு வேற்றுமைகளைக் குறித்துப் படித்தோம். செய்யுள்களில் சில இடங்களில் ஒரு வேற்றுமை உருபு வரவேண்டிய இடத்தில் இன்னொரு வேற்றுமை உருபு வந்து அமைந்து விடும். இவ்வாறு வந்து அமைந்தாலும் பொருள் மாறாது. அப்பொழுது, அங்குள்ள உருபைக் கொண்டு முடிவு செய்யாமல் பயனிலையை நோக்கிப் பொருளைக் கண்டு பிடித்து இன்ன வேற்றுமை எனக் கூறல் வேண்டும். இவ்வாறு உருபுகள் மாறி வந்து அமைவதை உருபுமயக்கம் என்பர்.

    எடுத்துக்காட்டு

    பழியின் அஞ்சினான்
    - ‘இன்’ என்ற ஐந்தாம் வேற்றுமை
    உருபு மயங்கி வந்துள்ளது. இங்கு,
    பழிக்கு அஞ்சினான்
    - என ‘கு’ என்னும் நான்காம்
    வேற்றுமை உருபு வரவேண்டும்.

    எனவே நான்காம் வேற்றுமை உருபு வரவேண்டிய இடத்தில் ஐந்தாம் வேற்றுமை உருபு வந்துள்ளது. இஃது உருபுமயக்கம் ஆகும்.

    கள்வரை அஞ்சினான்.

    இத்தொடர் கள்வர்க்கு அஞ்சினான் என்று அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் ‘கு’ உருபு (நான்காம் வேற்றுமை) வரவேண்டிய இடத்தில் ‘ஐ’ (இரண்டாம் வேற்றுமை) வந்து மயங்கி நிற்கின்றது.


  • எட்டு வேற்றுமைக்கும் உரிய உருபு, பொருள், சொல் உருபுகள்
          பற்றிய பட்டியல்
  •  

    வேற்றுமை

    உருபு

    பொருள்

    சொல்லுருபு

    முதல்
    வேற்றுமை

    திரிபு இல்லாத
    பெயர்
    கருத்தாப்பொருள்
    ஆனவன்
    என்பவன்
    இரண்டாம்
    வேற்றுமை

    செயப்படுபொருள்
    --
    மூன்றாம்
    வேற்றுமை
    ஆல், ஆன்
    ஒடு, ஓடு
    கருவி, கருத்தா
    உடன் நிகழ்ச்சி
    கொண்டு,
    உடன்
    நான்காம்
    வேற்றுமை
    கு
    கொடை, பகை,
    நட்பு, தகுதி,
    அதுவாதல்,
    பொருட்டு, முறை
    பொருட்டு,
    நிமித்தம்,
    ஆக
    ஐந்தாம்
    வேற்றுமை
    இல், இன்
    நீங்கல், ஒப்பு,
    எல்லை, ஏது
    இருந்து,
    நின்று
    ஆறாம்
    வேற்றுமை
    அது, ஆது, அ
    உடைமைப்
    பொருள் (பண்பு,
    உறுப்பு, முதலியன)
    உடைய
    ஏழாம்
    வேற்றுமை
    கண் முதலியன
    இடப்பொருள்
    --
    எட்டாம்
    வேற்றுமை
    பெயர்கள்
    இயல்பும்
    திரிபும்
    விளிப்பொருள்
    --
புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 15:52:15(இந்திய நேரம்)