Primary tabs
-
2.1 பிள்ளைத்தமிழ்
அன்பு தருவதிலே உனைநேர்
ஆகும்ஓர் தெய்வம் உண்டோஎன்று குறிப்பிடுவார் பாரதி. அன்பு செலுத்துவதற்கும் அன்பு பெறுவதற்கும் உரிய பருவம் குழந்தைப் பருவமே. புலவர்கள் தம் அன்புக்குரிய ஒருவரைக் குழந்தையாக வைத்துப் பாடிமகிழ்ந்தார்கள். இதுவே பிள்ளைத்தமிழ் ஆயிற்று. புலவர் பெருமக்கள் தம் அன்பிற்குரியவராகப் பின்வருவோரை எண்ணினார்கள்.
இறைவன்
இறைவி
இறையடியார்கள்
வள்ளல்கள்
தலைவர்கள்
ஆசிரியர்கள்இவர்களுள் ஒருவரைத் தலைவராகக் கொண்டு பிள்ளைத்தமிழ் பாடப்படும். இவர்களின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள் மூலம் அரிய பெரிய சாதனைகளைப் புலவர்கள் விளக்கிக் கூறுவர். பிள்ளையைத் தமிழால் பாடுவது என்ற பொருளில் பிள்ளைத்தமிழ் என்ற பெயர் அமைந்துள்ளது.
பிள்ளைத்தமிழ் எனும் பெயரில் நமக்குக் கிடைக்கும் முதல் நூல் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ். இது ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்நூல் இரண்டாம் குலோத்துங்கச் சோழனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. இதன் பின்னர்ப் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டன. பகழிக்கூத்தர், குமரகுருபரர், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை முதலான புலவர் பெருமக்களால் பிள்ளைத்தமிழ் வளர்ச்சி அடைந்தது. இதுவரை முந்நூறுக்கும் மேற்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டுள்ளதாகக் கு.முத்துராசன் தம் நூலில் பட்டியல் இட்டுள்ளார்.
பிள்ளைத்தமிழ் பற்றிய இலக்கணக் குறிப்பை முதலில் வழங்கும் நூல் தொல்காப்பியமே ஆகும்.
குழவி மருங்கினும் கிழவது ஆகும்(தொல். பொருள். புறம். 24)
என்ற தொல்காப்பிய நூற்பா பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்கு இலக்கணம் கூறி உள்ளது. குழந்தைப் பருவக்காலத்தில் குழந்தைகளை விரும்பி அவரது செயல்களைப் பாடுவது உண்டு என்ற பொருளில் உரையாசிரியர் இளம்பூரணர் உரை எழுதி உள்ளார்.
இன்னொரு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் பிள்ளைத்தமிழ் இலக்கியத்திற்குரிய பத்துப் பருவங்களைச் சுட்டி இருக்கிறார். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை ஆகியன பிள்ளைத்தமிழின் பத்துப் பருவங்கள் ஆகும். குழந்தையின் மூன்றாம் திங்கள் முதல் இருபத்து ஓராம் திங்கள் வரையில் உள்ள மாதங்களே பத்துப் பருவங்களாகப் பகுக்கப் பெறும். இந்தப் பத்துப் பருவங்களில் குழந்தையின் சிறப்பினைப் பாடுவதாகப் பிள்ளைத்தமிழ் அமைந்துள்ளது.
நண்பர்களே! இதுவரை பிள்ளைத்தமிழின் இலக்கணம் பற்றி ஓரளவு அறிந்தீர்கள். பிள்ளைத்தமிழ் இலக்கணம் பற்றித் தொல்காப்பிய நூற்பா குறிப்பாகச் சில செய்திகளைக் கூறி உள்ளது. பிற்காலப் பாட்டியல் நூல்களே இதுபற்றி விரிவாகக் கூறி உள்ளன. பிள்ளைத்தமிழின் பத்துப் பருவங்கள் பற்றி முன்பே கோடிட்டுக் காட்டப்பட்டது. பத்துப் பருவங்கள் வருமாறு:
1.
பிள்ளைத்தமிழ் பற்றிய இலக்கணக் குறிப்பு முதன் முதலில் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
அ. அகத்தியம்
ஆ. தொல்காப்பியம்
இ. இறையனார் களவியல்
2.
பிள்ளைத்தமிழ்ப் பருவங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
அ. ஏழு
ஆ. பதின்மூன்று
இ. பத்து
3.
தமிழில் கிடைக்கும் முதல் பிள்ளைத்தமிழ் நூல் எது?
அ. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
ஆ. குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
இ. சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
4.
கீழே தரப் பெற்றுள்ள பருவங்களில் ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்களைப் பிரித்துத் தருக.
அ. நீராடல்
ஆ. சிற்றில் சிதைத்தல்
இ. அம்மானை
ஈ. ஊசல்
உ. சிறுதேர் உருட்டல்
ஊ. சிறுபறை முழக்கல்