தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மீனாட்சியம்மையின் பெருமைகள்

  • 2.4 மீனாட்சியம்மையின் பெருமைகள்

    மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்றவுடன் எல்லோர் நெஞ்சிலும் செவியிலும் தேன் பாயும் பாடலாக அமைவது "தொடுக்கும் கடவுள் பழம்பாடல்" என்ற பாடலாகும். இப்பாடல் மீனாட்சி அம்மையின் மாண்புகளை விளக்கும் மகுடமாக விளங்குகின்றது. அப்பாடலின் நயங்கள் பற்றி அறிவோம்.

    2.4.1 தமிழின் சுவை

    தெய்வத்தன்மை உடையன பழைய பாடல்கள். அப்பாடல்களின் பொருளாய் விளங்குபவள் மீனாட்சி. மணம் கமழும் துறைகள் அமைந்தது தமிழ். அத்தமிழின் இனிய சுவை போன்றவள் மீனாட்சி. அகந்தை எனும் கிழங்கைத் தம் உள்ளத்தில் இருந்து தோண்டி எறிபவர்கள் அடியார்கள். அந்த அடியார்களின் மனக்கோயிலில் ஏற்றப்படும் விளக்குப் போன்றவள் மீனாட்சி. இக்கருத்தைத்

    தொடுக்கும் கடவுட் பழம்பாடல்
         தொடையின் பயனே நறைபழுத்த
    துறைத்தீந் தமிழின் ஒழுகுநறுஞ்
         சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
    எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு
         ஏற்றும் விளக்கே.

    (மீனா.பிள். 61)

    (தொடுத்தல் = கட்டுதல் / உருவாக்குதல், தொடை = மாலை, நறை = மணம், பழுத்த = கனிந்த, தீம் = இனிய, அகந்தை = செருக்கு, தொழும்பர் = அடியார்)

    என்ற பாடல் விவரிக்கும். மேலும் இப்பாடலில் மீனாட்சியம்மையின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.

    2.4.2 உயிர் ஓவியம்

    இமய மலையில் விளையாடும் பெண் யானையைப் போன்றவள் மீனாட்சி. உலகத்தைக் கடந்த ஒப்பற்றவன் இறைவன். அவன் திரு உள்ளத்தில் எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியம் போன்றவள் மீனாட்சி. வண்டுகள் தேனைக் குடித்துக் கூந்தலில் துயில்கின்றன. அந்தக் கூந்தலாகிய காட்டைத் தாங்கி நிற்கும் வஞ்சிக் கொடி போன்றவள் மீனாட்சி. மலயத்துவசன் பெற்றெடுத்த பெருவாழ்வுக்கு நிகரானவள் மீனாட்சி. இதனைப் பின்வரும் பாடல் அடிகள் விவரிக்கும்:

    இமயப் பொருப்பில் விளையாடும்
         இளமென் பிடியே எறிதரங்கம்
    உடுக்கும் புவனம் கடந்து நின்ற
         ஒருவன் திருவுள்ளத்தில் அழகு
    ஒழுக எழுதிப் பார்த்து இருக்கும்
         உயிர் ஓவியமே மதுகரம்வாய்
    மடுக்கும் குழற் காடேந்தும்இள
         வஞ்சிக் கொடியே வருகவே
    மலயத் துவசன் பெற்ற பெரு
         வாழ்வே வருக வருகவே

    (மீனா.பிள். 69)

    (பொருப்பு = மலை, பிடி = பெண்யானை, எறிதரங்கம் = கடல், புவனம் = உலகம், மதுகரம் = மதுவை வாயாகிய கரத்தால் உண்பவை, / வண்டுகள், குழல் = கூந்தல், மலயத்துவசன் = பாண்டியன்)

    இப்பாடலை மீனாட்சியம்மையே கேட்டு மகிழ்ந்ததாகக் கூறுவர். இந்நூல் அரங்கேற்றப்பட்டபோது குமரகுருபரர் இசையுடன் பாடி உள்ளார். இப்பாடலைக் கேட்ட மீனாட்சியம்மை குழந்தை உருவில் வந்து திருமலை நாயக்கர் மார்பில் உள்ள மணிமாலையைக் கழற்றிப் புலவர்க்குப் பரிசாக வழங்கியதாக அவர் வரலாறு கூறுகிறது.

    2.4.3 சிற்றில் சிதைந்தது

    பொதுவாக, ஆண்பால் பிள்ளைத்தமிழில் சிற்றில் சிதைத்தல் இடம்பெறும். ஆனால், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் செங்கீரைப் பருவத்தில், மீனாட்சியின் பெருமையைக் கூறுமிடத்து, சிற்றில் சிதைத்தல் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. உலகத்தையே சிறிய இல்லம் ஆக உருவாக்கி விளையாடும் பிள்ளையாகப் புலவர் மீனாட்சியம்மையைக் காண்கிறார்.

    • சிற்றில் அமைத்தல்

    உயர்ந்த சக்கரவாள மலைச்சுவருக்கு ஈடாக எட்டு மலைகளைச் சுவர்களாக நிறுத்துகிறாள். விண்ணின் உச்சியை மூடி ஞாயிறு திங்கள் என்னும் விளக்குகளைப் பொருத்துகிறாள். உலகங்களாகிய பாத்திரங்களில் ஊழிக்கால வெள்ளத்தைக் கொண்டு கூழாகிய இனிய உணவைச் சமைக்கிறாள். இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும்:

    சுற்றுநெடு நேமிச்சுவர்க்கு இசையஎட்டுச்
         சுவர்க்கால் நிறுத்தி மேருத்
    தூண்ஒன்று நடுநட்டு வெளிமுகடு மூடிஇரு
         சுடர் விளக்கு இட்டுமுற்ற
    எற்றுபுனலில் கழுவு புவனப் பழங்கலம்
         எடுத்து அடுக்கிப் புதுக்கூழ்
    இன்அமுதமும் சமைத்து அன்னைநீ பன்முறை
         இழைத்திட...

    (மீனா.பிள். 15)


    (நெடுநேமி = சக்கரவாளமலை, மேரு = மலை, முகடு = உச்சி, இருசுடர் = சூரியன், சந்திரன், எற்றுபுனல் = ஊழிக்கால வெள்ளம், புவனம் = உலகம், இழைத்த = அமைத்த)

    • உலக உருவாக்கம்

    இவ்வாறாக உலகப் படைப்பையே மீனாட்சியின் சிற்றில் உருவாக்கமாகப் புலவர் கற்பனை செய்து பார்க்கிறார். அன்னை சிற்றில் புனையப் புனைய அதனைப் பித்தனாகிய கூத்தன் மீண்டும் மீண்டும் சிதைக்கிறான். அன்னை செய்யும் சிற்றிலை அழித்து அழித்து மதம் பிடித்த யானை போன்று பெரிய பித்தனாகிய கூத்தபிரான் (சிவன்) ஆடுகின்றான். அவன் அவ்வாறு செய்யவும் அதனை வெறுத்து ஒதுக்காமல் நாள்தோறும் அண்டங்களைக் கட்டிச் சிற்றில் விளையாடும் பச்சிளம் பிள்ளையே என்று புலவர் பாராட்டுகின்றார். அப்பாடல் தொடர்கிறது:

    இன்னமுதமும் சமைத்து அன்னைநீ பன்முறை
         இழைத்திட அழித்து அழித்துஓர்
    முற்றவெளியில் திரியும் மத்தப் பெரும்பித்தன்
         முன்நின்று தொந்தம் இடவும்
    முனியாது வைகலும் எடுத்து அடுக்கிப் பெரிய
         மூதுஅண்ட கூடம் மூடும்
    சிற்றில் விளையாடும் ஒருபச்சிளம் பெண்பிள்ளை
         செங்கீரை ஆடி அருளே

    (மீனா.பிள். 15)


    (அமுதம் = உணவு, இழைத்திட = செய்திட, மத்தப் பெரும்பித்தன் = சிவன், தொந்தம் = தொடர்பு, முனியாது = சினவாது, வைகல் = நாள்தோறும், மூது = முதிய)

    இதில் உலக உருவாக்கமும் அழிவும் சுட்டப்படுகின்றன. அவை மீனாட்சி அம்மையின் சிற்றில் உருவாக்கமாகவும் சிதைத்தலாகவும் அமைந்துள்ளன. இவ்வாறு புலவர் பாடி இருப்பது சிறந்த கற்பனை நயம் வாய்ந்தது. ஆண்பாற் பிள்ளைத் தமிழில் தனிப் பருவமாகக் கொள்ளப்பெறும் சிற்றில் பருவத்தை, இப்பாடல் குறிக்கிறது; இறைவனின் ஆக்கலும் அழித்தலும் ஓயாமல் மாறி மாறி நடைபெறுவதை ஒரு தத்துவ நோக்கோடு கூறுகிறது.

    2.4.4 காப்புக் கடவுள்

    பாண்டிய நாட்டில் புலவர்கள் அறிவுடன் படைத்த தமிழ் நூல்கள் பாழாகாமல் காப்பவள் மீனாட்சி. படைக்கும் கடவுளாகிய பிரமன் படைத்த உலகம் கீழ்ப்பகுதி மேல்பகுதியாக மாறாமல் காப்பவள் மீனாட்சி. வறுமையாகிய பகைவன் தமிழ்நாட்டை ஆளாமல் காப்பவள். உலக உயிர்கள் பாவமாகிய கடலில் கலக்காமல் காப்பவள். பாண்டியரும் சோழரும் ஒப்பானவர்கள் என்று உண்மைநிலை அறியாதவர்கள் உரைக்காமல் காப்பவள் மீனாட்சி. மதுரை நகர் செழிக்குமாறு செய்பவள் மீனாட்சி. இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும்.

    முதுசொல் புலவர் தெளித்த பசுந்தமிழ்
         நூல்பாழ் போகாமே
    முளரிக் கடவுள் படைத்த வசுந்தரை
         கீழ்மேல் ஆகாமே
    அதிரப் பொருது கலிப்பகைஞன் தமிழ்
         நீர்நாடு ஆளாமே
    அகிலத்து உயிர்கள் அயர்த்தும் அறங்கடை
         நீள்நீர் தோயாமே........
    செழியர்க்கு அபயரும் ஒப்புஎன நின்றுஉண
         ராதார் ஓதாமே
    மதுரைப் பதிதழை யத்தழை யும்கொடி
         தாலோ தாலேலோ

    (மீனா.பிள். 31)

    (முது = பழைய, முளரி = தாமரை, வசுந்தரை = பூமி, கலி = வறுமை, அதிர = அதிர்ச்சியடையும்படி, அறங்கடை = பாவம், செழியர் = பாண்டியர், அபயர் = சோழர்)

    பழந்தமிழ் நூல்களைப் பாதுகாப்பவளாகவும், பாண்டிய நாட்டைக் காப்பவளாகவும், உயிர்கள் பாவத்தில் மூழ்காமல் காப்பவளாகவும் காட்சியளிப்பவள் மீனாட்சி என்பது சிறப்புடன் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

    2.4.5 பாண்டியன் பெற்ற பெருவாழ்வு

    வருகைப் பருவம் பிள்ளைத்தமிழின் ஆறாவது பருவம் ஆகும். இது குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது. குழந்தையைக் கரம் நீட்டி வரவேற்பதும், குழந்தை தளர் நடை இட்டு வருவதும் இப்பருவத்தில் சிறப்பித்துப் பாடப்பெறும். மீனாட்சியாகிய குழந்தையும் தளர்நடை இட்டு வருகின்றது. புலவர் குழந்தையை வருக என்று வேண்டுகிறார்.

    • வருக! வருகவே!

    நறுமணம் கமழும் கூந்தலை உடைய பெண் யானையே வருக! அறிவின் வெள்ளப்பெருக்கே வருக! சிவபெருமானின் மூன்று கண் ஒளிகளுக்கு அளித்த நல்ல விருந்தே வருக! மூன்று கடவுளர்க்கும் வித்தாக (விதையாக) அமைந்தவளே வருக! வித்து இன்றி விளையும் பரமானந்தத்தின் விளைவே வருக! பழைய வேதங்களின் குருத்தே வருக! அருள் கனிந்த மேன்மையே வருக! பிறவியாகிய பெரும் பிணிக்கு மருந்தே வருக! மழலை பேசும் கிளியே வருக! மலயத்துவச பாண்டிய மன்னன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே! இவ்வாறு குழந்தையை வரவேற்கும் புலவரின் பாடல் இதோ!

    பெருந்தேன் இறைக்கும் நறைக்கூந்தல்
         பிடியே வருக முழுஞானப்
    பெருக்கே வருக பிறை மௌலிப்
         பெம்மான் முக்கண் சுடர்க்கு இடுநல்
    விருந்தே வருக மும்முதற்கும்
         வித்தே வருக வித்தின்றி
    விளைக்கும் பரம ஆனந்தத்தின்
         விளைவே வருக.......
         ......... பிறவிப் பெரும்பிணிக்கு ஓர்
    மருந்தே வருக பசுங்குதலை
         மழலைக் கிளியே வருகவே
    மலயத்துவசன் பெற்ற பெரு
         வாழ்வே வருக வருகவே!

    (மீனா.பிள். 62)

    (இறைக்கும் = சிதறும், நறை = மணம், பெருக்கு = வெள்ளம், மௌலி = முடி, பெம்மான் = சிவன், மும்முதல் = மும்மூர்த்திகள்/சிவன், பிரம்மா, விஷ்ணு, வித்து = விதை, குதலை = மழலை, மலயத்துவசன் = பாண்டியமன்னன்)

    இதில், மீனாட்சி ஞானம் உடையவள், சிவன், திருமால், பிரம்மா ஆகிய மூவர்க்கும் மூலமானவள், அடியவர் பிறவி நோய்க்கு மருந்து போன்றவள் என்பன போன்ற மீனாட்சியின் பெருமைகள் கூறப்பட்டுள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 10-08-2017 17:25:08(இந்திய நேரம்)