Primary tabs
-
2.3 இலக்கியச் சிறப்புகள்
நண்பர்களே! பிள்ளைத்தமிழ் நூல்கள் முந்நூறுக்கு மேல் தமிழில் தோன்றி உள்ளன. என்றாலும் இலக்கியச் சிறப்பால் மூன்று நூல்களை மட்டுமே திறனாய்வாளர்கள் பெருமைப்படுத்திப் பேசுவர்.
1) மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
2) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
3) முத்துக்குமார சுவாமிப் பிள்ளைத்தமிழ்இந்த மூன்றில் முதலாவதாகப் பேசப்படுவது மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழே. கற்பனை வளம், உவமை அமைப்புகள், சந்த நயம் முதலிய பல்வேறு இலக்கியச் சிறப்புகளால் இந்நூல் பெருமை பெற்றுள்ளது.
நண்பர்களே! இனி மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் இலக்கியச் சிறப்புகள் பற்றி அறிய இருக்கிறோம்.
இப்பிள்ளைத்தமிழ் நூலின் முகப்பில் விநாயகர் வணக்கம் அமைந்துள்ளது. இதனை அடுத்துக் காப்புப் பருவத்தில் திருமால், சிவன், சித்தி விநாயகர், முருகன், பிரமதேவர், தேவேந்திரன், திருமகள், கலைமகள், துர்க்கை, சப்த மாதர்கள், முப்பத்து மூவர் ஆகியோரிடம் பாட்டுடைத் தலைவியைக் காக்குமாறு புலவர் வேண்டுகிறார். இதனை அடுத்துச் செங்கீரை, தாலம், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல் ஆகிய பருவங்கள் அமைந்துள்ளன. ஒன்பது பருவங்களில் 90 பாடல்களும் காப்புப் பருவத்தில் 11 பாடல்களும் விநாயகர் வாழ்த்து 1 பாடலும் ஆக 102 பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
இந்நூலில் கூறப் பெற்றுள்ள செய்திகளைப் பின்வருமாறு பட்டியல் இட முடியும்.