தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அயல்நாட்டுப் பண்பாடுகளின் தாக்கம்

  • 3.3 அயல்நாட்டுப் பண்பாடுகளின் தாக்கம்

    Audio Button

    தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்த பல பண்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டுடன் கலந்தபொழுது, தமிழர் பண்பாட்டுக் கூறுகளில் சிலவற்றைக் கொண்டும், தம்முடையவற்றிலிருந்து சிலவற்றைக் கொடுத்தும் உள்ளன. வேறு எந்தப் பண்பாட்டையும் விட ஆரியர் பண்பாடும், ஐரோப்பியர் பண்பாடும் தமிழர் பண்பாட்டைப் பெரிதும் பாதிக்கச் செய்தன. பண்பாட்டுப் பாதிப்புகள் பெரும்பாலும் மொழிகளால் ஏற்படுத்தப்படுகின்றன. சமஸ்கிருதமும், ஆங்கிலமும் தமிழர் பண்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த இருமொழிகளைப் பயன்படுத்திக் கொண்ட பிராமணர், ஆங்கிலேயர் ஆகியோர் தமிழர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்கினர். பண்பால் தம்மை மிக உயர்ந்த நிலையில் நிறுத்திக் கொண்டிருந்த தமிழினம் ஆரிய இனத்தாலும் வெள்ளை இனத்தாலும் பெரிய வீழ்ச்சியை அடையவே செய்தது.

    3.3.1 ஆரியப் பண்பாடு என்ன செய்தது?

    வடமொழியைத் தேவமொழி என்றும், பிராமணரை நிலத்தேவர் (பூசுரர்) என்றும் உயர்த்தி ஏனையோரைத் தாழ்த்தி உரைத்த வருணாசிரமம் தமிழகத்தில் மெல்ல மெல்லக் காலூன்றி வளர்ந்து கிளை விரித்துப் பலரையும் தன் எல்லைக்குள் வளைத்துக் கொண்டுவிட்டது. நம் சமயம், ஆன்மீகம், தத்துவம் ஆகியன வருணாசிரம நெறி நுழைவதற்குரிய நல்ல வாயில்களாகிவிட்டன. எனவே சமயம் ஆன்மீகம், தத்துவம் ஆகியவற்றை எதிர்த்துப் போரிடுவதற்குரிய தேவையைக் காலம் தோற்றுவித்துவிட்டது, பெண்களின் இலட்சிய வாழ்வின் அடித்தளத்தையே அசைக்கக்கூடிய கருத்துகளை ஆரியச் சார்புடைய இதிகாசங்கள் தமிழகத்தில் பரப்பிவிட்டன.

    அவையாவன:

    1. பெண் ஒருத்தி கணவர் பலர்க்கு மனைவியாதல், அதனைக் கற்பறம் என்று போற்றுதல்.
    2. வேறொருவனைப் பிள்ளைப்பேற்றுக்காகச் சேர்தல்.
    3. வரதட்சணை அளித்தல்

    தவிரவும், “ஊழையும் உப்பக்கம் காண்”கின்ற வினைத்திட்பம் போற்றிய தமிழகத்தில் தவம், மந்திரம், கழுவாய் ஆகியவை பற்றிய கருத்துகளை இதிகாசங்கள் எடுத்துரைத்தன. இவ்வகையைச் சார்ந்த கருத்துகள் வருமாறு:

    1. கடுந்தவம் இயற்றி மேல்நிலை எய்திய முனிவர்களின் கோபமும் சாபமும்
    2. வாள்வலிமை, வில்வலிமை போன்றவற்றைவிடத் தவமியற்றிப் பெற்ற மந்திரத் தொடர்புடைய கணைகளின் வலிமையால் பெறும் போர் வெற்றி
    3. எப்படிப்பட்ட தவறுகளையும் கழுவாய் செய்து துடைத்துவிட முடியும் என்ற நிலை

    இக்கருத்துகள் அனைத்திற்கும் இதிகாசங்கள் தத்துவ முலாம் பூசின.

    3.3.2 ஐரோப்பியப் பண்பாடு செய்த நன்மைகள்

    சமஸ்கிருதத்தின் வழியாகப் புகுத்தப்பட்ட ஆரியப் பண்பாடு தமிழகப் பண்பாட்டில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. பல நூற்றாண்டுகளுக்கு அத்தாக்கம் நீடித்தது. அதிலிருந்து தமிழகம் விடுபடாத நிலையில் ஐரோப்பிய பண்பாட்டுத் தாக்கம் பல வலிமைமிக்க ஊடகங்கள் வழியாக நிகழ்ந்தது.

    ஐரோப்பியர் வரவால் தமிழர் பண்பாட்டில் நிகழ்ந்த மாற்றங்களை எல்லாம் எண்ணுங்கள்!

    • கல்விச் சீரமைப்பு

    திண்ணைப் பள்ளிக்கூடம், அந்தந்த ஆசிரியர் வகுத்துக் கொள்ளும் பாடத்திட்டம் என்ற வகையில் ஒரு திட்டமிடாத கல்வியாக அமைந்து இருந்தது; அதனை உயர் கல்வி நிலையில் கொண்டு சென்று, பல்கலைகக்கழகங்கள் நிறுவிய பெருமை ஐரோப்பியர்க்குரியது. படித்தபிறகு பட்டம் பெறுதல், வேலை வாய்ப்புக்குரிய படிப்புகள், அப்படிப்புகளுக்குப் பாடத்திட்டங்கள், தேர்வுகள் எனக் கல்விமுறை பல வரையறைகளைப் பெற்றது. இதோ மாநிலக் கல்லூரியை நோக்குங்கள். இக்கல்லூரி முதல்வராக இருந்த ஸ்டாதம் துரையின் வெண்பளிங்குச் சிலையைப் பாருங்கள். நூற்றாண்டைக் கடந்த இந்தக் கல்லூரி, நூற்றாண்டைக் கடந்த சென்னைப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களால், பி.ஏ., பி.எஸ்ஸி., எம்.ஏ., எம்.எஸ்ஸி என்று பட்டம் பெறும் ஒரு நாகரிக மாற்றம் நம்மிடையே ஏற்பட்டது.

    அது மட்டுமா? கல்வி பெரும்பாலும் பெண்ணுக்குத் தேவையில்லை என்ற கருத்து ஐரோப்பியர் வரவுக்குப் பின் மாறிவிட்டது. தமிழ்நாட்டின் முதல் பெண் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் ஐரோப்பிய நாகரிகத் தாக்கத்தால் மருத்துவராக உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. அடுப்பு நெருப்போடு மட்டும் நெருக்கமான உறவு கொண்டிருந்த தமிழ்ப் பெண்கள் இன்று அணுமின் நிலையத்தில் பணியாற்ற வாய்ப்பளித்தது ஐரோப்பியப் பண்பாட்டின் தாக்கமே.

    • அறிவியல் ஏற்றம்

    தமிழ்நாட்டில் பாம்புகள் மிகுதி. நல்ல பாம்பு எனும் கொடுமை மிக்க நஞ்சுடைய பாம்பு பலரால் வழிபாடே செய்யப்பட்டது. பாம்புப் புற்றுகளில் முட்டையும் பாலும் வைத்து வணங்கும் நம்பிக்கை இன்றுகூட நம் மக்களிடம் உள்ளது. இத்தகைய கொடிய பாம்புகள் கடித்தால் மருத்துவம் செய்வதை விட மந்திரித்துக் கொள்வதே தக்கது என்று தமிழர் எண்ணியிருந்தனர். கொள்ளைநோய், அம்மை போன்றவை தெய்வத்தின் சினத்தால் வந்தவை என்று கருதியிருந்தனர். இப்படிப்பட்ட நம்பிக்கைகளை அறவே நீக்கி எந்த நோய்க்கும் மருத்துவம் செய்து கொள்வது தக்கது என்ற கருத்தை ஐரோப்பிய நாகரிகம் நம்மிடையே உண்டாக்கியது. பாம்புக்கடிக்கும், வெறிநாய்க்கடிக்கும், அம்மை, கொள்ளைநோய் ஆகியவற்றுக்கெல்லாம் மருந்து கண்டுபிடித்துத் தந்தது ஐரோப்பிய அறிவியல்.

    ஆழமான கிணறு :

    கைப்பிடிச் சுவர் இல்லை. இதில்தான் நம் கிராமத்துப் பெண் இடுப்புமுறியத் தண்ணீர் இறைப்பாள். இதோ மணல் பரந்த ஆறு: இதில் தான் நம் முன்னோர் ஊற்றுத் தோண்டித் தண்ணீர் பெற்றனர். இப்போது ஊரெங்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் குடிநீர்த் தொட்டிகள் இயங்குகின்றன.

    மின்சாரம் கிராமங்களில் நிலையாக அப்பிக் கொண்டிருந்த இருளைத் துடைத்துவிட்டது. ஊரெங்கும் ஒளிமெழுகும் வழிகள் இரவைப் பகலாகக் காட்டுகின்றன. கழிப்பறை அமைப்பு இன்று தூய்மை பேணுகின்றது. இவற்றையெல்லாம் நம்மிடையே கொண்டு வந்து தந்தது ஐரோப்பிய நாகரிகமே.

    • உணவு, உடைப்பழக்கங்கள்

    ஐரோப்பியர் வரவால் நம் உடைகளில் தாம் எவ்வளவு மாற்றங்கள் பாருங்கள்! கால்சராய், மேலே Coat எனப்படும் குப்பாயம், அழகிய கழுத்துப்பட்டி (Tie), கால்களில் Boot எனப்படும் மூடிய காலணி, காலுறைகள் எனத் தோற்றத்திற்கு ஏற்றமும் மதிப்பும் கூட்டியுள்ள மாற்றங்கள் தோன்றியுள்ளன. உணவில் கூட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல குடும்பங்கள் இன்று பிறந்த நாள் கேக் வெட்டுகின்றன. கோதுமை ரொட்டி உணவு பரவலாகி உள்ளது. ரொட்டி, வெண்ணெய், பழக்கூழ் ஆகியவை பலரின் காலை உணவாகியுள்ளன.

    • பயண வசதிகள்

    ஐரோப்பியர் வரவால் பரந்த இந்த உலகம் சுருங்கி விட்டதா? வானூர்தியில் பறந்து பறந்து போய்த் தூர துருவங்களைத் தொட்டு விட்டுத் திரும்பும் வேக விளையாட்டு அல்லவா இப்போது நிகழ்கிறது! தொடர்வண்டிகள் பந்தயக் குதிரைகளைப் போல் பறக்கின்றன. பேருந்துகள் மாநிலத்தின் வெவ்வேறு முனைகளை விரைவாகத் தொட்டுத் திரும்புகின்றன.

    • வேளாண் வளர்ச்சி

    இதோ இந்த வயற்காட்டைப் பாருங்கள். செந்நெல் வயல்களும் கரும்புத் தோட்டங்களும், புன்செய்க் கொல்லைகளும் இவ்வளவு செழுமையாய் முன்பு இருந்தனவா? இல்லை. வீரிய விதைகள், தீவிர சாகுபடித் திட்டங்கள், ஊட்டமளிக்கும் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பருவந்தோறும் தக்க செய்நேர்த்திகள், புதிய பயிர் வகைகள் ஆகியவற்றால் இன்று வேளாண்மை மிகுந்த பயன் தருவதாக அமைந்துள்ளது.

    மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று
    ஆனைகட்டி போரடிக்கும் அழகான தென்மதுரை

    என்ற நிலை மாறி வேளாண் தொழில் இயந்திரத் தொழில் நுட்ப உதவியால் இன்று வேகப்படுத்தப்பட்டுள்ளது.

    கைத்தொழில் என்பதெல்லாம் இன்று இயந்திரங்களின் உதவியால் செய்யப்பெறும் தொழிலாகி விட்டது. வீட்டில்தான் எத்தனை இயந்திரங்கள்! பழைய அம்மிக்கல் திருமணத்தின் போது மிதிப்பதற்குக் கூடக் கிடைக்காமல் போய்விட்டது.

    • அச்சுப்பொறியும் அறிவு வளர்ச்சியும்

    ஐரோப்பியர் வரவால் நம்மிடம் ஏற்பட்ட ஒரு பெரிய மாறுதல் அச்சுப்பொறியால் ஏற்பட்டதாகும். ஓலைச்சுவடிகளிலிருந்து மெல்ல அழிந்து கொண்டிருந்த நூல்களை அச்சுவடிவில் கொண்டு வர அவர்களின் வருகை தானே உதவியது. நில இயல், பயிரியல், விலங்கியல், உயிரியல் என்று பலப்பல துறைகளுக்குரிய நூல்கள் எழுதப் பெற்றன. தமிழில் புத்தம் புதுக்கலைகள், பஞ்ச பூதத்தின் செயல்கள் விளக்கப்பட்டன.

    பொதுவாகவே அறிவு ஆராய்ச்சி ஆகியவற்றில் மக்களுக்கும் ஒரு நம்பிக்கையை உண்டாக்க ஐரோப்பியர் பண்பாடு உதவியது. பேய், பிசாசு, ஏவல், பில்லி சூனியம், வேதாளம், காட்டேறி, கருப்பு என்ற அறிவு சாராத நம்பிக்கைகள் மெல்ல நம்மை விட்டு அகன்றன.

    3.3.3 ஐரோப்பியப் பண்பாடு செய்த தீமைகள்

    ஐரோப்பியர் வரவு அகத்திலும் புறத்திலும் நம்மிடம் பல மாற்றங்களைச் செய்துவிட்டன. அவை எல்லாவற்றையும் நன்மைகள் என்று கூறிவிடுவதற்கில்லை. நம் பண்பாட்டில் சில நலிவுகளையும் ஐரோப்பியப் பண்பாடு ஏற்படுத்திவிட்டது.

    • ஆங்கில ஆதிக்கம்

    இன்று தமிழனின் பேச்சைக் கவனியுங்கள். நான்கைந்து சொற்களுக்கு இடையே ஆங்கிலச் சொல் புகுந்துவிடுகிறது. அவ்வளவு ஏன்? ஒரு திரைப்படப் பாடல் கேளுங்கள்! அல்லது தொலைக்காட்சித் தொடரைப் பாருங்கள்! ஆங்கிலச் சொற்கள் கலந்து வழங்கப் பெறுதலைக் காணலாம்.

    tvu

    உணவு தரு விடுதிகளைக்
    ‘கிளப்’ என வேண்டும் போலும்!
    உயர்ந்த பட்டுத்
    துணிக்கடைக்கு ‘சில்கு ஷாப்’
    எனும் பலகை தொங்குவதால்
    சிறப்புப் போலும்!

    என்று இந்த நிலையை எண்ணிப் பாரதிதாசன் வருந்துகின்றார்!

    • தமிழின் நலிவு

    ஆங்கிலம் தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகவும், அலுவல் மொழியாகவும், கல்வி மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் பன்னெடுங்காலம் இருக்கும் நிலை ஏற்பட்டதால் தமிழ் நலிந்தது. தமிழ் பலதுறைகளிலும் வளர்தல் தடைப்பட்டது. அறிவியலைக் கற்பிப்பதற்கு ஆங்கிலமே பொருத்தமான மொழி என்ற தவறான கருத்து நிலவியது.

    ஐரோப்பியர் வாணிகத்தின் காரணமாக இந்தியாவிற்கு வந்தவர். இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், தமிழகத்திலிருந்தும், அரிய கலைச்செல்வங்களையும் மதிப்புமிக்க செல்வப் பொருட்களையும் ஐரோப்பியர் கொண்டுபோய்விட்டனர்.

    • சுயமரியாதை இழப்பு

    இவை மட்டுமா? ஆங்கிலேய அதிகாரிகளைத் ‘துரைமார்கள்’ என்று அழைத்த தமிழர்கள் அவர்களுக்கு வேலைக்காரர்கள் ஆயினர். தொண்டு செய்யும் அடிமைக் கூலிகளாகிச் சுயமரியாதை இழந்தனர்.

    அரசியல் சூழ்ச்சி வலையால் தமிழர்களைப் பிரித்து அடிமைப்படுத்திய ஐரோப்பியர், பல பிரிவுகளைத் தமிழர்களிடையே வளர விட்டனர். பிரித்தாளும் சூழ்ச்சியால், செல்வர்களுக்குப் பட்டங்கள் கொடுத்தனர். கூலிக்காரர்களுக்கு அலுவலக வேலை தந்தனர். ஆங்கிலப் பண்பாடு உயர்ந்தது என்ற மாயையினை உண்டாக்கினர்.

    உரிமைக் கிளர்ச்சி, விடுதலை இயக்க முயற்சி ஆகியவற்றை ஐரோப்பியர் நலியச் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக் கணக்கானோரைச் சிறைக்கூடத்தில் தள்ளிச் சித்திரவதை செய்தனர்.

    • பரம்பரைப் பழக்கங்களின் மறைவு

    அடுத்து நாம் மிகவும் ஆழ்ந்து கருதவேண்டிய ஒன்றை இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும். தமிழ்க் கல்வி, தமிழ் மருத்துவம், தமிழ்க்கலை என்பன படிப்படியாக மறக்கப்பட்டன. தமிழ்நாட்டு மூலிகைகளின் பெயர்களும், அவற்றின் மருத்துவப் பண்புகளும் நினைவிலிருந்து நீங்கிவிட்டன.

    தமிழர் சீயக்காய், ஆவாரம்பொடி, பயற்றமாவு, புற்றுமண் போன்றவற்றைத் தேய்த்து ஓடும் நீரில் நீராடும் வழக்கமுடையவர்கள். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கத்தினர். இவையெல்லாம் ஐரோப்பியர் வரவால் குலைந்தன. சோப்பு, சவர்க்காரம், ஷாம்பு, முகத்திற்குப் பவுடர் என ஆடம்பர சாதனங்கள் பெருகின.

    தமிழ்மக்களின் வருவாயில் குறிப்பிடத்தக்க ஒரு பங்கு புறவயமான ஆடம்பரப் பொருள்களின் பொருட்டாக வாரி இறைக்கப்படும் வழக்கம் உருவாயிற்று. புற அழகைக் கவர்ச்சியாகக் காட்டும் ஒப்பனைப் பொருள்களில் இந்தியப் பெண்களுக்கு மேலை நாகரிகத்தால் ஓர் ஈடுபாடு ஏற்பட்ட நிலையில், வலிமைமிக்க தமிழர் பண்பாட்டின் கூறுகளான சில நல்ல பழக்கங்கள் நழுவத் தொடங்கின. மஞ்சள் பூச்சு, மாக்கோலப் புனைவு, வீட்டிற்கு முன் சாணம் தெளித்தல், வாழை இலை உணவு ஆகியவை தமிழர் வாழ்விலிருந்து நீங்கி வருகின்றன. பதநீர், இளநீர், நீராகாரம் ஆகியவற்றின் இடத்தைக் காப்பி, தேநீர், ஐஸ்கிரீம் ஆகியவை பிடித்துக் கொண்டன. திருமணத்தை வாழ்நாள் பிணைப்பாகவும், இரண்டுயிரின் ஒருமைப்பாடாகவும் கருதிய நிலை தளர்ந்தது. மணமுறிவு, மணவிலக்கு ஆகியன நம்மிடையே புகுந்துவிட்டன. ‘மூன்றாவது முறையாக விவாகரத்து செய்தார்’ என்று செய்தியோடு ஒரு பெண்ணைக் குறித்து எழுதும் புதுமை தமிழகத்தில் காணப் பெறுகின்றது.



    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1. ஆங்கிலேயர்க்கு நாம் அடிமைப்படக் காரணமாக இருந்தவை யாவை?

    2. தமிழர் வாழ்வில் ஆங்கிலம் நன்கு கலந்து விட்டதற்கு ஓர் எடுத்துக்காட்டுக் கூறுக.

    3. இந்தியப் பண்பாட்டின் அச்சாணிகள் எவை?

    4. தமிழர் பண்பாட்டின் சிறப்புக்களில் மூன்றைக் குறிக்க.

    5. தமிழில் வந்து புகுந்த சமஸ்கிருதச் சொற்கள் ஐந்தைக் கூறுக.

    6. தமிழில் வந்து கலந்த ஆங்கிலச் சொற்கள் நான்கைக் கூறுக.

புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2017 16:14:12(இந்திய நேரம்)