தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

குளகச் செய்யுள்

  • 2.4 குளகச் செய்யுள்

    பல பாடல்கள் ஒருவினையைக் கொண்டு முடியுமாறு அமைந்து வருவது குழுவகச் செய்யுள் வகையாகும். ஒரே பாடலில் கருத்தும், சொற்றொடர் அமைப்பும் முற்றுப் பெறாமல், எச்சமாக அமைந்து, பல பாடல்கள் ஒருங்கிணைந்த நிலையில் முற்றுப் பெறுவது இவ்வகையாகும்.

    குளகம் பலபாட்டு ஒருவினை கொள்ளும்
    (தண்டியலங்காரம்-4)

    என்பது நூற்பா.

    பல பாடல்கள் தொடர்ந்து ஒரு வினையைக் கொண்டு முற்றுப் பெறுவதோடு அல்லாமல், ஒரு பெயரினைக் கொண்டு முற்றுப் பெறுவதும் இவ்வகையில் அடங்கும். அதாவது, நூற்பாவில் இடம்பெறும் ‘வினை’ என்பது முடிக்கும் சொல்லைக் குறிக்கும். அச்சொல் பெயர்ச்சொல்லாகவும் அமையலாம் ; வினைச் சொல்லாகவும் அமையலாம் என்பது கருத்து.

    குளகச் செய்யுள் வகைகள்

    பாடல்கள் பல தொடர்ந்து நின்று, ஒரே வினைமுடிவைப் பெறுவது குளகம் எனக் கூறப்பட்டுள்ளதே தவிர எத்தனைப் பாடல்களில் முடிவு பெற வேண்டும் என வரையறை குறிக்கப் பெறவில்லை. எனினும் உரையாசிரியர்கள், வடநூல் கருத்தைக் கருத்தில் கொண்டு வகைப்படுத்தியுள்ளனர். எண்ணிக்கையின் அடிப்படையில் விசேடம், கலாபம் முதலிய பெயர் தந்திருக்கிறார்கள்.

    2.4.1 குளகச் செய்யுள் - சான்று

    குளகச் செய்யுள் வகையில் எண்ணிக்கைக்கேற்ப வெவ்வேறு பெயர்கள் உரையாசிரியர்களால் கூறப்பெற்றிருப்பினும், நூலாசிரியரின் கருத்திற்கேற்ப, ஒன்றுக்கு மேற்பட்ட செய்யுள்களில் சொற்றொடரும் பொருள்முடிவும் இடம்பெறுவது குளகம் எனக்கொண்டு, இருசெய்யுட்கள் ஒருவினை கொண்டு முடிவதையும், இரு செய்யுட்கள் ஒருபெயர் கொண்டு முடிவதையும் இங்குச் சான்றாகக் காண்போம்.

    வினைகொண்டு முடிதல்

    தருமன் உரைகேட்ட தாமரைச்செவ் வாயன்
    பெருமைச் சகதேவன் பேச - ஒருமையுறும்
    நெஞ்சினனாய்த் தான்சென்று நேராய்த் தனியிடத்தே
    விஞ்சிடவே ஏகிநிற்கும் வேளை

    ஆங்குஅவனும் காட்சிபல ஆற்றுவிக்க நன்மருகன்
    தாங்கரிய அன்பால் தனைக்கட்ட - ஓங்கிவளர்
    கண்ணபிரான் நல்லருளைக் காட்டுவித்தான் பாண்டவரைத்
    திண்ணம்எனக் காக்கும் திறத்து,

    (தாமரைச் செவ்வாயன் = கண்ணபிரான்
    நன்மருகன் = சகதேவன்)

    வனவாசம் முடிந்த நிலையில், போர்நிகழாமல் நாட்டைப் பெறவேண்டும் என்று தருமன் கருதுகிறான்.

    ‘தருமனின் கருத்தைக் கேட்டறிந்த கண்ணபிரான், தன்னிடத்தில் தனித்துப் பேச விரும்பிய சகதேவனின் எண்ணத்திற்கு உடன்பட்டுத் தனித்து நிற்கும் பொழுது’

    ‘போரில் வெற்றி தோல்வியும், மரணம் அடைதலும் இருபக்கத்தினருக்கும் பொதுவாதலால், சகதேவன் அன்பின் வயத்தால் கண்ணபிரானைக் கட்டுக்குள் ஆழ்த்தி, பாண்டவர் ஐவரும் மரணம் அடையாமல் இருக்கவும் போரில் வெற்றி அடையவும் உறுதி பெற்றுக் கொள்கிறான்.’

    இவை அவ்விரண்டு பாடல்களின் கருத்தாகும். முதற்பாடலின் தாமரைச் செவ்வாயன் என்னும் எழுவாய், அடுத்த செய்யுளில் ஆற்றுவிக்க என்னும் வினைக்குத் தொடர்புடையதாகிறது. இருபாடல்கள் சேர்ந்து ஒரு கருத்தினை விளக்கி நிற்கின்றன.

    பெயர் கொண்டு முடிதல்

    முன்புலகம் ஏழினையும் தாயதுவும், மூதுணர்வோர்
    இன்புறக்கங் காநதியை ஈன்றதுவும் - நன்பரதன்
    கண்டிருப்ப வைகியதும், கான்போ யதும்இரதம்
    உண்டிருப்பார் உட்கொண் டதும்
    வெந்த கரியதனை மீட்டுமக வாக்கியதும்
    அந்தச் சிலையினைப்பெண் ஆக்கியதும் - செந்தமிழ்தேர்
    நாவலன்பின் போந்ததுவும், நன்னீர்த் திருவரங்கக்
    காவலவன் மாவலவன் கால்

    (தாயது = தாவிஅளந்தது
    மூதுணர்வோர் = துறவிகள்
    கங்கா
    = கங்கை
    கான்
    = காடு
    இரதம்
    = (மெய்ஞ்ஞானச்) சுவை
    உள்
    = உள்ளம்
    மகவு
    = குழந்தை
    சிலை
    = கல்
    பெண்
    = அகலிகை
    நாவலன்
    = திருமழிசை ஆழ்வார்
    காவலவன்
    = காவலன்
    மாவலவன்
    = குதிரை செலுத்துபவன்
    கால்
    = திருவடி)

    ‘முன்பு ஒரு காலத்தில் மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூவடி மண் பெற்ற சூழலில் ஏழு உலகங்களையும் தாவி அளந்ததும், சான்றோர் மகிழக் கங்கை நதியைத் தோற்றுவித்ததும், பரதன் கண்டு போற்ற இராமனாகத் தோன்றிய நிலையில் தங்கியிருந்ததும், தசரதனின் கட்டளைக்கு இணங்கக் காடு சென்றதும், ஞானச் சுவையை உண்பவர்களின் உள்ளத்தில் நிலைத்திருப்பதும்’.

    ‘வெந்துவிட்ட கரியை மீண்டும் குழந்தையாக்கியதும், கல்லாய்க் கிடந்த அகலிகையை மீண்டும் பெண்ணாக ஆக்கியதும், திருமழிசை ஆழ்வாரின் பாடல் கேட்டு, அவர்தம் வேண்டுகோளுக்கு இணங்க அவரைப் பின் தொடர்ந்ததும், நல்ல காவிரி சூழ்ந்த திருவரங்கப் பெருமானாகிய குதிரை செலுத்துவதில் வல்ல திருமாலின் திருவடியாகும்’.

    இது இருபாடல்களின் திரண்ட பொருளாகும். தாவியது, ஈன்றது, வைகியது, உட்கொண்டது, மகவாக்கியது, பெண் ஆக்கியது, போந்தது என இரு பாடல்களிலும் தொடர்ந்து அமைந்த வினைமுற்றுகள் இரண்டாம் பாடலின் இறுதியில் அமைந்த கால் என்னும் பெயர்ச்சொல்லைக் கொண்டு முற்றுப் பெற்றன.

    இவ்வாறு குளகச் செய்யுட்கள் வினை கொண்டும், பெயர் கொண்டும் முடிவனவாக உள்ளன.

    குளகச் செய்யுள் நூல்கள்

    சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், பெரியபுராணம், நளவெண்பா முதலான காப்பிய நூல்கள் குளகச் செய்யுள்வகை அமைந்த நூல்களாகும்.

    விருத்தம், வெண்பா என்னும் யாப்பு அமைந்த நூல்களில் குளகச் செய்யுள்கள் மிகுந்து காணப்படும்.

    தல புராணங்களிலும் குளகச் செய்யுள் வகை அமைந்திருப்பதைக் காணலாம்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    செய்யுள் வகைகளை எழுதுக.
    2.
    முத்தகம் என்பதன் பொருள் யாது?
    3.
    பொதுவணியியலின் பெயர்க்காரணம் பற்றி எழுதுக.
    4.
    குளகச் செய்யுள் என்பது யாது?
    5.
    குளகச் செய்யுள் இடம்பெறும் நூல்கள் இரண்டினைக் கூறுக.
புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 11:32:33(இந்திய நேரம்)