தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சொற்பொருள் மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள்

  • 5.5 சொற்பொருள் மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள்

    சொற்பொருள் மாற்றத்தின் காரணமாகப் பலவிதமான விளைவுகள் ஏற்படுகின்றன. அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

    1. பொதுப்பொரு ள் பேறு (Expansion or widening)

    முன்னர் ஒருவகைப் பொருளுக்கே உரியதாக வழங்கிய பெயர், பிறகு அதனோடு ஒத்த பலவற்றிற்கும் பொதுப்பெயராக வழங்குதலே பொதுப்பொருள்பேறு ஆகும்.

    எ.கா

    அ) மரக்கால் என்பது முன்பு மரத்தால் இயன்ற முகத்தலளவைக் கருவியையே உணர்த்தி வந்தது. இப்போது இரும்பு, பித்தளை முதலியவற்றாலாகிய கருவிகளையும் குறிக்கின்றது.

    ஆ) குட்டி என்பது மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, முயல், நரி, குரங்கு ஆகிய சிலவற்றின் இளமைப் பெயராக வழங்கி வந்தது. இன்று விலங்குகள் பலவற்றிற்கும் பொதுவான இளமைப் பெயராக அது வழங்கி வருகின்றது.

    இ) மரம் என்ற சொல் முன்பு அகக்காழ் (வைரம்) உடையவற்றிற்கே பெயராக வழங்கியது. இன்று தென்னை, பனை முதலிய புறக்காழ் உடையவற்றையும் குறித்துப் பொதுப்பெயராக வழங்குகின்றது.

    2. சிறப்புப் பொருள்பேறு (Restriction or Narrowing)

    முன்பு பலவற்றிற்கும் பொதுவாக இருந்த ஒருசொல், இப்போது அவற்றுள் ஒன்றையே உணர்த்துகின்றது.

    எ.கா

    அ) பொன் என்பது முன்பு தங்கம், செம்பு, வெள்ளி, இரும்பு முதலான உலோகங்கள் பலவற்றிற்கும் பொதுவான பெயர், இப்போது அது ஒருவகை உலோகத்தையே உணர்த்துகின்றது.

    ஆ) நெய் என்பதும் அவ்வாறே முன்பு பாலின் நெய், எள்ளின் நெய் முதலிய பலவற்றிற்கும் பொதுவாக இருந்தது. இப்போது அது பாலின் நெய் ஒன்றையே குறிக்கின்றது.

    இ) பழையது என்னும் சொல் பழமையுற்ற பலவற்றையும் குறிப்பது. இன்று தனியே நின்று, பழஞ்சோற்றைக் குறிக்கின்றது.

    3. உயர்பொருள் பேறு (Elevation)

    முன்னர் இழிந்த பொருளைக் குறித்து வந்த சொல், தற்போது உயர்ந்த பொருளில் வழங்கி வருகின்றது.

    எ.கா

    அ) களிப்பு, மகிழ்ச்சி

    இச்சொற்கள் முன்பு கள்ளுண்டு மயங்குதலைக் குறித்தன. ஆனால், இப்போது மனம் உவந்திருத்தல் என்னும் உயர்ந்த பொருளையே தருகின்றன.

    ஆ) கழகம் என்பதும் அவ்வாறே ஆயிற்று. சூதாடும் இடத்தை உணர்த்திய அச்சொல், இன்று கலைஞர், அறிஞர் முதலானவரின் கூட்டங்களை உணர்த்துகின்றது.

    4. இழிபொருள் பேறு (Degradation or degeneration)

    முன்னர் உயர்ந்த பொருளில் வழங்கிவந்த சொல், தற்போது இழிந்த பொருளைக் குறிக்கத் தொடங்கிவிட்டன.

    எ.கா நாற்றம்

    நாற்றம் என்ற சொல், முன்பு பொதுவாக மணம் என்னும் பொருளில் வழங்கியிருக்க, இன்று கெட்ட மணத்தையே குறித்திடுதல் காண்க. சேரி, குப்பை முதலியனவும் அவ்வாறே பொருள் திரிந்தன.

புதுப்பிக்கபட்ட நாள் : 08-11-2017 17:24:20(இந்திய நேரம்)