Primary tabs
-
6.0 பாட முன்னுரை
தமிழில் இன்றைய திறனாய்வுலகில், திறனாய்வு முறைகளும் பலவாகக் காணப்படுகின்றன. திறனாய்வாளர்களும் பல நெறியினராகக் காணப்படுகின்றனர். இவர்கள் பல முனைகள் அல்லது பல பின்புலங்களிலிருந்து வந்தவர்கள். படைப்பாளர்கள் மத்தியிலிருந்தும் கல்வியாளர்கள் மத்தியிலிருந்தும் வந்தவர்கள் பெரும்பகுதியினர். மற்றும் இந்த இரண்டுமல்லாத தரப்புக்களிலிருந்தும் பல திறனாய்வாளர்கள் வந்துள்ளனர். பொதுவாக, தொடக்கத்தில் செல்வக்கேசவராயர், வ.வே.சு. ஐயர் ஆகியோர் காலத்துத் திறனாய்வு, பொதுவான விளக்கத்தையும் புலப்படுத்தல் என்பதையும் சார்ந்திருந்தது . பின்னர், டி.கே.சி., க.நா.சு., ஆகியோர் காலத்துத் திறனாய்வு கூர்மை பெற்று வளர்ந்தது; அழகையும் தரத்தையும் அக்கறையோடு கவனித்த அத்திறனாய்வு, ஒரு தீர்மானிப்புத் தன்மையோடு தன்னைக் காட்டிக்கொண்டது. அதன்பின், 1980-களுக்குப் பின்னர் வந்த திறனாய்வாளர்களிடம் திறனாய்வுக்கென அமைந்த நவீனச் சிந்தனை வழிப்பட்ட கொள்கையும் அக்கொள்கையின் சார்பும் மையமாக அமைந்தன. எனவே, இம்முறையில் பார்த்தால், இவ்வாறு மூன்று வளர்ச்சி நிலைகளை இன்றைய திறனாய்விலே காணக்கூடும்.