தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.2 பட்டுக்கோட்டையாரும் பாட்டாளி மக்களும்


  • நாட்டு விடுதலைப் போராட்டக் காலக்கட்டத்தில் வாழ்ந்ததால் நாட்டு விடுதலை உணர்வும், உழைக்கும் மக்களின் உணர்வும் பட்டுக்கோட்டையாரிடம் அதிகம் காணமுடிகின்றது. பாட்டாளிகள் பற்றி அவர் பாடுவதற்கு இரண்டு காரணங்களை முன்வைக்கலாம்.

    1) உழைப்பாளர்களையும், உழவர்களையும் இச்சமூகம் போற்றாதது.
    2) இந்து மதத்தில் உழைப்பாளர்கள சிலர் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுவது.

    இவ்விரண்டையும் உணர்ந்து கொண்ட பட்டுக்கோட்டையார் உழைப்பாளிகளை முதன்மைப்படுத்தும்போது உழவர்களையும் சிறப்புறப் போற்றிப் பாடுகின்றார்.

    உழவர்களை, ‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி’, என்றும் ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்றும் வள்ளுவரும்,

    இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
    அரும்பும் வியர்வை உதிர்த்துப் புவிமேல்
    ஆயிரம் தொழில் செய்திடுவீரே
    பெரும்புகழ் நுமக்கே இசைக்கின்றேன்

    என்று பாரதியும் பாடியதை அடியொற்றிய கல்யாணசுந்தரம்,

    கண்ணை இழுக்கும் அழகொன்று கண்டேன்
    காவியம் ஓவியம் யாவையும் கண்டேன்
    மின்னிகருடைய பெண்களும் ஆண்களும்
    வேலை செய்யும் அந்தக் கோலத்துடன் கண்டேன்
    வண்ணக் கலையிங்கு வாழ்ந்திடக் கண்டேன்
    மக்கள் உழைப்பின் உயர்வினைக் கண்டேன்
    பொன்னைப் பழிக்கும் கதிர்கள் ஒன்றை ஒன்று
    பின்னிப் பின்னி அசைந்தாடிடக் கண்டேன்

    (பா.வீரமணி, பட்டுக்கோட்டையாரின் பாட்டுத்திறம் - ஒரு சமூகப் பார்வை, பக்கம்.89)

    என்று உழைப்பையே அழகுக் காட்சியாகவும் காட்டுகிறார்.

    6.2.1 விவசாயம்

    பட்டுக்கோட்டையார், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதை முன்னர் அறிந்தோம். அதனால் அவர் கழனியில் உழைப்பையும், ஆண்-பெண் அன்பு உறவையும் இணைத்துக் கவிதை பாடுவதைக் காணுங்கள்.

    காவேரி ஓரத்திலே
    கால் பதுங்கும் ஈரத்திலே
    காலையிலே நான் நடப்பேன்
    கலப்பை கொண்டுகிட்டு
    கட்டழகி நீ வருவே
    விதையைக் கொண்டுகிட்டு - நெல்லு
    விதையைக் கொண்டுகிட்டு
    வாய்க்கா வெட்டின களைப்பிலே - நான்
    வந்து குந்துவேன் வரப்பிலே - புது
    மஞ்சள் நிறத்திலே கொஞ்சும் முகத்திலே
    நெஞ்சைப் பறித்திடும் வஞ்சிக்கொடி நீ
    கஞ்சி கொண்டு வருவே - இன்பம்
    கலயத்திலே தருவே

    (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டுத்திறம், பா.வீரமணி, பக்கம்.92)

    காவேரிக்கரைக் கழனியில் உழவு வேலை செய்யும் தொழிலாளி, அவனுக்கு உணவு கொண்டு செல்லும் மனைவி ஆகியோரை ஒரு திரைப்படம் பார்ப்பது போலக் காட்சி அழகுடன் கவிதையாக்கி இருப்பதை எண்ணி வியப்படையாமல் இருக்க முடியுமா?

    நாட்டின் முன்னேற்றத்திற்கு மிக மிக இன்றியமையாத ஒரு தொழில் விவசாயம் ஆகும். வேளாண்மை (விவசாயம்) செழித்தால்தான் நாட்டில் வறுமை ஏற்படாது. அதே நேரம் விவசாயத் தொழிலாளர் நலனும் பேணப்படவேண்டும். இந்த எண்ணங்களைப் பட்டுக்கோட்டையார் தம் பாடலில் வெளிப்படுத்தியிருப்பதைக் காணலாம்.

    சும்மா கெடந்த நிலத்தைக் கொத்தி
    சோம்பலில்லாம ஏர்நடத்தி
    கம்மாக்கரையை ஒசத்திக்கட்டி
    கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டிச்
    சம்பாப் பயிரைப் பறிச்சு நட்டுத்
    தகுந்த முறையில் தண்ணீர்விட்டு
    நெல்லு வௌஞ்சிருக்கு - வரப்பும்
    உள்ளே மறைஞ்சிருக்கு - அட
    காடு வௌஞ்சென்ன மச்சான் - நமக்கு
    கையுங் காலுந்தானே மிச்சம்

    என்று உழத்தி கேட்கிறாள். வர்க்க உணர்வுடைய அந்த உழைப்பாளிக் கணவன் பதில் சொல்கிறான்.

    காடு வௌயட்டும் பொண்ணே - நமக்குக்
    காலம் இருக்குது பின்னே

    (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், பக்.243)

    இந்தப் பதில் அவநம்பிக்கையை நம்பிக்கையாக மாற்றுவது. நாடோடிமன்னன் என்ற திரைப்படத்தில் இப்பாடல் காட்சி அருமையாக அமைக்கப்பட்டது.

    உழைக்க வேண்டும்; உழைப்பின் மூலம் நாட்டின் பொருளாதார உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என வலியுறுத்திப் பாடுகிறார்.

    ஏற்றமுன்னா ஏற்றம்
    இதிலேயிருக்குது முன்னேற்றம்
    எல்லோரும் பாடுபட்டா - இது
    இன்பம் விளையும் தோட்டம்

    (பா.வீரமணி, பட்டுக்கோட்டையாரின் பாட்டுத்திறம், ஒரு சமூகப் பார்வை, பக்கம்.93)


    வல்லமையாலே வளம் பெறுவோம் - பசித்
    தொல்லை அகலத் தொழில் புரிவோம்


    உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
    கெடுக்குற நோக்கம் வளராது - மனம்
    கீழும் மேலும் புரளாது

    (பா.வீரமணி, பட்டுக்கோட்டையாரின் பாட்டுத்திறம், ஒரு சமூகப் பார்வை, பக்கம்.94)

    ஆகிய பாடல்கள் உழைப்பின் இன்றியமையாமையை உணர்த்துகின்றன.

    குறிப்பாகக் கிராமங்களை அதிகமாகக் கொண்ட இந்திய நாடு செழிக்க வேண்டுமானால் இந்நாட்டின் அடிப்படைத் தொழிலான விவசாயம் சிறக்க வேண்டும் என்று பாடுகின்றார்.



    கதிரடிக்கணும் குதிரு பொங்கணும்
    காவிரி அன்னையைக் கும்பிடணும்
    கஞ்சிப்பானை கவலைதீரக்
    கலப்பைத் தொழிலை நம்பிடணும்

    (பா.வீரமணி, பட்டுக்கோட்டையாரின் பாட்டுத்திறம், ஒரு சமூகப் பார்வை பக்கம்.95)

    இந்தப் பாடலில், மானுடரின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவுக் கவலையைத் தீர்க்கும் விவசாயத் தொழில் போற்றப்பட வேண்டும்; அதே நேரம் கதிரடித்த பின் களத்துமேட்டில் பொங்கலிட்டு நீர் கொடுத்து வயலைச் செழிக்கச் செய்த காவிரி அன்னையை வணங்க வேண்டுமெனக் குறிப்பிடுகின்றார். இவ்வாறாக உழவர்களின் பெருமையை அதிகம் கவிதையாக்கியவர் பட்டுக்கோட்டையாரே.

    6.2.2 தொழிலும் பாட்டும்

    பட்டுக்கோட்டையார் தம் பாடல்களில் உழவர், கட்டிடத் தொழிலாளர், சுரங்கத் தொழிலாளர், கல் உடைக்கும் தொழிலாளர், மீன் பிடிப்போர், முத்தெடுப்போர், தச்சர், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் போன்றோரைப் பாடியதுடன் அவர்கள் விழிப்படையவும் பாடல்கள் மூலம் உணர்ச்சி ஊட்டுகிறார்.

    செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்
    திறமைதான் நமது செல்வம்
    கையும் காலும் தான் உதவி - கொண்ட
    கடமைதான் நமக்குப் பதவி

    (படம்: ஆளுக்கொரு வீடு, 1960)

    இந்த வரிகளில், கையும் காலையும் பயன்படுத்திக் கடமை உணர்வோடு செய்கின்ற தொழிலைத் தெய்வமாகப் போற்றி உழைத்தால் அதுவே வாழ்வுக்கான சிறந்த செல்வம் என்ற கருத்தை அழுத்தமாகச் சொல்கிறார்.

    ஓதுவார் தொழுவாரெல்லாம்
    உழுவார் தலைக்கடையிலே
    உலகம் செழிப்பதெல்லாம்
    ஏர் நடக்கும் நடையிலே

    (வே.பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டையார் பாடல்கள் - ஒரு திறனாய்வு, பக்கம்.181)

    என்ற வரிகளில், உடல் உழைப்பில் ஈடுபடாமல் உயர்ந்தவர்களென்று சொல்லிக் கொள்கின்ற ஓதும் தொழில் செய்வோரைக் காட்டிலும் சிறந்தவர், உலகம் செழிக்க உழவுத்தொழிலைச் செய்கிறவர்கள்தான் என்று உழவரையும், உழவையும் பெருமைப்படுத்துகிறார்.


    மூடநம்பிக்கை என்பது பகுத்தறியும் திறனை மழுங்கடிப்பது. உதாரணமாக, படித்த ஒருவர் தேர்வுக்குச் செல்லும் போது பூனை குறுக்கே சென்றால் சகுனம் (நிமித்தம்) சரியில்லை என்று எண்ணுவதும், எடுத்த காரியம் வெற்றியடையாது என்று எண்ணுவதும் மூடநம்பிக்கை ஆகும். இதைக் குழந்தைகளுக்கு அறிவுரை கூறும்போது சாடுகிறார்.

    சின்னப்பயலே சின்னப்பயலே
    சேதி கேளடா - நான்
    சொல்லப்போற வார்த்தையை நல்லா
    எண்ணிப் பாரடா- நீ
    எண்ணிப்பாரடா.


    ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
    அதுதாண்டா வளர்ச்சி
    ஆசையோடு ஈன்றவளுக்கு
    அதுவே நீ தரும் மகிழ்ச்சி


    வேப்பமர உச்சியில் நின்னு
    பேயொண்ணு ஆடுதுன்னு
    விளையாடப் போகும் போது
    சொல்லி வைப்பாங்க - உன்
    வீரத்தைக் கொழுந்திலேயே
    கிள்ளி வைப்பாங்க
    வேலையற்ற வீணர்களின்
    மூளையற்ற வார்த்தைகளை
    வேடிக்கையாகக் கூட
    நம்பி விடாதே - நீ
    வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
    வெம்பி விடாதே - நீ
    வெம்பி விடாதே

    (பட்டுக்கோட்டையார் கல்யாணசுந்தரம் பாடல்கள் பக்.89-90, படம்: அரசிளங்குமரி, 1957)

    இந்தப் பாடலில், ஆளும் வளரணும் அறிவும் வளரணும் என்ற குரல் ஒலிக்கிறது. விளையாட்டாகக் கூட வீணர்களின் பேச்சைக் கேட்டு, மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டுவிடக் கூடாது என எச்சரிக்கிறார். சின்ன வயதிலே பகுத்தறிவோடு வளர்ந்தால் தன்மானத்தோடு வாழமுடியும் என்று தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.

    நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
    காலம் தரும் பயிற்சி - உன்
    நரம்போடுதான் பின்னிவளரணும்
    தன்மான உணர்ச்சி

    (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், பக்கம்.89)

    என்ற வரிகள் மேற்சொன்ன கருத்தை உறுதிப்படுத்துகின்றன.

     

    பாட்டாளி மக்கள் சமூகநிலையில் பின்தங்கியவர்களாக இருந்து வருகிறார்கள். அவர்கள் உழைப்பு சுரண்டப்படுகிறது. ஆனால் அவர்கள் மதிக்கப்படுவதில்லை. சாதிய ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்தச் சமூகத்தை உற்று நோக்குகிறார் பட்டுக்கோட்டையார்.

    வேலய்யா - வடிவேலய்யா - உன்னை
    வேண்டி வந்தேன் - ஒருவேலையாய்
    கோலத் தினைப்புனத்தில் ஆலோலம் பாடிய
    கோதை வள்ளி காதலா,
    ..................................
    மாறாதுனை வந்து வணங்கும் மனிதர் - சொந்த
    வாழ்வில் மட்டும் சாதி மயக்கம் வந்ததேனையா?

    (வே.பாலசுப்பிரமணியன்,பட்டுக்கோட்டையார் பாடல்கள் - ஒரு திறனாய்வு, பக்கம்.104)

    என்று முருகனிடம் கேட்கிறார். ஏற்றத்தாழ்வு இல்லாத, சாதி வேறுபாடு இல்லாத சமுதாயம் வேண்டும் என்பது பட்டுக்கோட்டையாரின் கனவாக இருந்திருக்கிறது.

    வேலை செஞ்சா உயர்வோமென்ற
    விபரம் மண்டையில் ஏறணும்

    (பா.வீரமணி, பட்டுக்கோட்டையாரின் பாட்டுத்திறம் - ஒரு சமூகப் பார்வை, பக்கம்,94)


    ஜனத்தொகை மிகுந்தாலும்
    பசித்துயர் மலிந்தாலும்
    பணத்தொகை மிகுந்தோர் - மேலும்
    பணம் சேர்க்க முயல்வதாலும்
    உழைத்தால்தான் பற்றாக்குறையை
    ஒழிக்கமுடியும் - மக்கள்
    ஓய்ந்திருந்தால் நாட்டின் நிலைமை
    மோசமாக முடியும்.

    (பா.வீரமணி, பட்டுக்கோட்டையாரின் பாட்டுத்திறம் - ஒரு சமூகப் பார்வை, பக்கம்,98)

    ஆகிய பாடல்களின் மூலம், ஏழ்மை நிலையை மாற்ற உழைப்பு ஒன்றே பேருதவியாக இருக்கும் என உறுதிபடக் கூறுகிறார்.

     

    உழைக்கும் மக்களின் அவலநிலையைப் பட்டுக்கோட்டையார் குறிப்பிட்டுள்ளதைப் போல வேறு எவரும் குறிப்பிடவில்லை.

    “தொழிற்புரட்சி ஏற்பட்டதற்குப் பின்பு, உலகெங்கும் தொழிற்சாலைகள் உருவாகியதன் காரணமாக ஆங்காங்கே தொழிலாளர் எண்ணிக்கை பெருகியது. இதன் விளைவாகத் தொழிலாளி x முதலாளி என்னும் பிரிவால் வர்க்க முரண்பாடு ஏற்பட்டு வாழ்க்கை மிகமிகச் சிக்கலுக்கு உள்ளானது. இச்சிக்கலின் விளைவாகப் பல துன்பங்கள் தொழிலாளர்களை நெருக்கடியில் ஆழ்த்தின.”

    (பா.வீரமணி, பட்டுக்கோட்டையாரின் பாட்டுத்திறம், ஒரு சமூகப்பார்வை பக்கம்.113)

    என்று பா.வீரமணி கூறும் கருத்தின் பின்னணியோடு பட்டுக்கோட்டையாரின் உழைப்பாளர் மற்றும் தொழிலாளர் பற்றிய பாடல்களை எண்ணிப்பார்க்க வேண்டும்.

    தேனாறு பாயுது - வயலில்
    செங்கதிரும் சாயுது - ஆனாலும்
    மக்கள் வயிறு காயுது - அதிசயந்தான் இது
    வகையாக இந்த நாட்டில் - என்று
    மாற்றமுண்டாகுமோ?

    (பா.வீரமணி, பட்டுக்கோட்டையாரின் பாட்டுத்திறம், ஒரு சமூகப் பார்வை, பக்கம்.114)

    தொழிலாளிகளின் உழைப்பினைச் சுரண்டி எல்லா வளங்களையும் தங்கள் தனியுடைமையாகக் கவர்ந்து கொள்ளும் முதலாளிகளால்தான் மக்கள் வயிறு காய்கிறது எனப் பட்டுக்கோட்டையார் வருந்திப் பாடுகிறார்.

    தன்மதிப்பீடு : வினாக்கள் - I

    1)
    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த இடம் யாது?
    2)
    இளமையில் அவர் பாடிய ‘கெண்டைக்குஞ்சே' பாட்டில் உள்ளடங்கியுள்ள உணர்வு யாது?
    3)
    ‘கையும் காலும் தானே மிச்சம்?' - யாருடைய கேள்வி இது? இதற்குக் கிடைத்த பதில் என்ன?
    4)
    சின்னப் பயலுக்குக் கல்யாணசுந்தரம் பாடும் பாட்டில் உள்ள அறிவுரைகள் என்ன?
புதுப்பிக்கபட்ட நாள் : 30-08-2017 13:43:28(இந்திய நேரம்)