Primary tabs
3.4 தொகுப்புரை
தமிழ் இலக்கியங்களில் இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்வது மணிமேகலை. இக்காப்பியத்தின் முதல் காதையாகிய விழாவறை காதை என்னும் இப்பாடப் பகுதியில் பூம்புகார் நகரில் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வரும் இந்திர விழாவின் சிறப்புப் பேசப்படுகிறது.
இப்பகுதி மூலம் இந்திரவிழா நடத்தப்பட்டதையும் நடத்தப்பட்ட முறையினையும் நாம் உணர முடிகிறது; விழா நாட்களில் நகரை அழகுபடுத்திய விதம் பற்றிய கருத்துகளை அறிய முடிகிறது.
இந்திர விழா நடப்பதைத் தெரிவிக்கும் வள்ளுவன் முதலிலும், முடிவிலும் ஊர், மழை, அரசன் முதலானோரை வாழ்த்துவது மரபு என்னும் செய்தி உணர்த்தப்படுகிறது.
விழா நாட்களில் மக்கள் பிறருடன் பகையும், கோபமும் கொள்ளக் கூடாது என்னும் பண்பு உணர்த்தப்படுகிறது. நாட்டில் பசி, பிணி, பகை முதலியன நீங்கி மழையும் வளமும் பெருக வேண்டும் என்று வள்ளுவன் இறுதியாக வாழ்த்தினான் என்பதும் கூறப்படுகிறது.
6.சாத்தனார், இந்திர விழா நடத்தப்படும் பொழுது மக்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என எவற்றைக் குறிப்பிடுகிறார்?[விடை]