தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புதுக்கவிதை

  • 2.3 புதுக்கவிதை

    கி.பி. இருபதாம் நூற்றாண்டு தொடங்கிப் புதுக்கவிதை, தமிழிலக்கியத்தில் தோன்றிச் சிறக்கலானது. பாரதியார் எழுதிய வசன கவிதைகளே தமிழில் காணும் புதுக்கவிதை முறைக்கு முன்னோடியாக அமைந்தது.

    யாப்பிலக்கணத்திற்குக் கட்டுப்படாமல் கவிதை உணர்வுகளுக்குச் சுதந்திரமான எழுத்துருவம் கொடுக்கும் வகையில் உருவானதே புதுக்கவிதை. எதுகை, மோனை, சீர், தளை சிதையாமை முதலான காரணங்களால் மரபுக் கவிதையில் அடைமொழிகளாக வெற்றெனத் (பயனின்றி) தொடுத்தல் அமைவதாக உணரத் தொடங்கியமையின் மடைமாற்ற முயற்சி எனவும் இதனைக் கருதலாம். கவிதை எழுத இனிக் காரிகை (யாப்பருங்கலக் காரிகை) கற்க வேண்டியதில்லை என்ற தெம்புடன் கவியெழுத வந்த புதுக்கவிதையாளர்களும் இங்கு உண்டு. புதுக்கவிதை, உரைவீச்சாகக் கருதத்தக்கது. அது மரபுக்கவிதை, கவிதை வசனக் கலப்பு, வசனம் என எந்த வாகனத்திலும் பயணிக்க வல்லதாக அமைந்தது.

    புதுக்கவிதை எனும் போர்வாள்
    இலக்கண உறையிலிருந்து
    கவனமாகவே
    கழற்றப்பட்டிருக்கிறது

    (திருத்தி எழுதிய தீர்ப்புகள்)

    என்பது கவிஞர் வைரமுத்துவின் புதுக்கவிதை. நறுக்குத் தெறித்தாற்போல் அமைவதே புதுக்கவிதை.

    புதுக்கவிதையைப் படித்ததும் புரியும். இயல்பான கவிதைகள், படிமம், குறியீடு, தொன்மம் போன்ற வகையில் அமைந்த உத்திமுறைக் கவிதைகள், எளிதில் புரிந்துகொள்ள முடியாதனவும் பல்வேறு சிந்தனைகளை உண்டாக்குவனவும் ஆகிய இருண்மைக் கவிதைகள் என வகைப்படுத்திக் காணலாம்.

    2.3.1 இயல்புநிலைக் கவிதை

    அகராதி தேடும் வேலையின்றிப் படித்த அளவில் புரியும் பாங்குடையவை இவை. சில சான்றுகளைக் காண்போம்.

    1. காதலும் நட்பும் குறித்த கவிஞர் அறிவுமதியின் கவிதை :

    கண்களை வாங்கிக்கொள்ள
    மறுக்கிறவள்
    காதலியாகிறாள்
    கண்களை வாங்கிக்கொண்டு
    உன்னைப்போல்
    கண்கள் தருகிறவள்தான்
    தோழியாகிறாள்

    (நட்புக்காலம்)

    2. முதிர்ச்சியின் பக்குவம் குறித்த இரா.தமிழரசியின் கவிதை:

    காய்கள்கூட
    கசப்புத் தன்மையை
    முதிர்ச்சிக்குப் பின்
    இனிப்பாக்கிக் கொள்கின்றன
    மனிதர்களில் சிலர்
    மிளகாய்போல் காரத்தன்மை மாறாமல்
    காலம் முழுவதும்
    வார்த்தை வீச்சில் வல்லவர்களாய்

    (ஒளிச்சிறை)

    3. காதலியை நலம்பாராட்டும் காதலனின் கூற்றாகப் பா.விஜய்யின் கவிதை:

    உன்மீது மோதி
    வாசம் பார்த்த தென்றல்
    தெருப்பூக்களைப் பார்த்தால்
    திரும்பிப் போகிறது

    (18-வயசுல)

    4. அன்பை அடையாளப்படுத்தும் தமிழன்பனின் கவிதை:

    தொப்பையாய்
    நனைந்துவிட்ட மகள்
    அப்பா
    தலையை நல்லாத் துவட்டுங்க
    என்றாள்
    கிழியாத அன்பும் கிழிந்த துண்டுமாய்

    (நடை மறந்த நதியும் திசைமாறிய ஓடையும்)

    5. பணிக்குச் செல்லும் பெண்கள் பற்றிய பொன்மணி வைரமுத்துவின் கவிதை:

    வீட்டுத் தளைகள்
    மாட்டியிருந்த கைகளில்
    இப்போது
    சம்பளச் சங்கிலிகள்

    6. தன்னம்பிக்கையூட்டும் மதியழகன் சுப்பையாவின் கவிதை:

    வாய்ப்புகளை
    நழுவவிட்டபின்
    அழுகிறது மனம்
    அடுத்துவரும்
    வாய்ப்புகளை
    அறியாமலேயே

    (மல்லிகைக் காடு)

    7. ஐம்பூதங்கள் குறித்த தங்கம் மூர்த்தியின் கவிதை:

    குடந்தையில்
    நெருப்பால் இழந்தோம்
    சுனாமியில்
    நீரால் இழந்தோம்
    போபாலில்
    வாயுவால் இழந்தோம்
    ஆந்திராவில்
    வான்மழையால் இழந்தோம்
    குஜராத்தில்
    நிலநடுக்கத்தால் இழந்தோம்
    ஐந்தையும்
    பூதங்கள் என்றவன்
    தீர்க்கதரிசிதான்

    8. மதநல்லிணக்கம் குறித்தமைந்த அப்துல் ரகுமான் கவிதை:

    எப்படிக் கூடுவது
    என்பதிலே பேதங்கள்
    எப்படி வாழ்வது
    என்பதிலே குத்துவெட்டு
    பயணத்தில் சம்மதம்
    பாதையிலே தகராறு

    9. அரவாணிகள் குறித்த ஆஷாபாரதியின் கவிதை:

    என்ன பெயர்
    சொல்லிவேண்டுமானாலும்
    எங்களைக் கூப்பிடுங்கள்
    மனிதநேயம் ம(ை)றந்த
    மனிதர்களே
    என்னவோ போல் மட்டும்
    எங்களைப் பார்க்காதீர்கள்

    10. இன்னா செய்யாமை குறித்த கவிதையொன்று:

    விழுங்கிய மீன்
    தொண்டையில் குத்துகையில்
    உணர்கிறேன்
    தூண்டிலின் ரணம்

    (வலியிழந்தவள்)

    மேற்கண்ட கவிதைகள் அனைத்தும் எளியன; படித்ததும் புரிவன ஆழ்ந்த கருத்தடங்கியன; கற்போரை நெறிப்படுத்த வல்லன; பல்வேறு கவிஞர்களால் பாடப்பட்டன; பல பொருண்மையில் அமைந்தன.

    சமுதாய நிகழ்வில் பாதிப்படைந்த ஒவ்வொருவரும் தாம் அறிந்த சொற்றொடரால் தம் உணர்வைச் சமுதாயத்திற்குக் கவிதைகளாகப் படைத்து வழங்கலாம் என்னும் துணிச்சலை இந்த எளிய கவிதை நடைகள் நமக்கு உணர்த்துகின்றன.

    இந்தக் கருத்து நிலைகளே ஒப்பீட்டுத் திறனாய்வின் கருதுகோள்கள் ஆகும்.

    2.3.2 உத்திமுறைக் கவிதை

    மரபுக் கவிதைக்கு அணியிலக்கணம் போல, கருத்தை உணர்த்துவதற்குப் புதுக்கவிதையிலும் சில உத்திமுறைகள் கையாளப்படுகின்றன.

    படிமக் குறியீடு, தொன்மக் குறியீடு, அங்கதம் என்பன புதுக்கவிதைகளில் காணலாகும் உத்திமுறைகளாகும்.

    • படிமம்

    அறிவாலும் உணர்ச்சியாலும் ஆன ஒரு மன பாவனையை ஒரு நொடிப் பொழுதில் தெரியக் காட்டுவதுதான் படிமம் என்பார் வெ.இராம.சத்தியமூர்த்தி. ஐம்புல உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் வகையில் இது அமையும்.

    ஆகாயப் பேரேட்டில் பூமி
    புதுக்கணக்குப் போட்டது

    என்பது மேத்தாவின் கருத்துப் படிமம். மேலும் அவர்,

    பூமி உருண்டையைப்
    பூசணித் துண்டுகளாக்குவதே
    மண்புழு மனிதர்களின்
    மனப்போக்கு

    எனக் காட்சிப் படிமத்தையும் அமைத்துக் காட்டியுள்ளார்.

    • தொன்மம்

    புராணக் கதைகளைப் புதுநோக்கிலும், முரண்பட்ட விமரிசன நிலையிலும் கையாண்டு கருத்துகளை உணர்த்துவது தொன்மம் ஆகும்.

    துஷ்யந்தன் தன் காதலின் சின்னமாகச் சகுந்தலைக்கு மோதிரம் பரிசளிக்கிறான். அந்த மோதிரம் தொலைந்த நிலையில் அவள் பல துன்பங்களை அனுபவிக்கின்றாள். அத்தொன்மத்தை உன்னுடைய பழைய கடிதங்கள் என்னும் கவிதையில் மேத்தா கவிதையாக்குகின்றார்.

    நானும்
    சகுந்தலைதான்
    கிடைத்த மோதிரத்தைத்
    தொலைத்தவள் அல்லள்
    மோதிரமே
    கிடைக்காதவள்

    (ஊர்வலம்)

    எனக் காதலியின் பரிதாப நிலையைச் சகுந்தலையினும் மோசமான நிலைக்காட்பட்டதாகக் காட்டியுள்ளார் கவிஞர்.

    • அங்கதம்

    அங்கதம் என்பது முட்டாள் தனத்தையும் மூடநம்பிக்கையையும் தீச்செயல்களையும் கேலி பேசுவதாக அமைவதாகும்.

    கல்வி இங்கே
    இதயத்தில் சுமக்கும்
    இனிமையாய் இல்லாமல்
    முதுகில் சுமக்கும்
    மூட்டையாகிவிட்டது

    (ஒரு வானம் இரு சிறகு)

    என்பது மேத்தாவின் அங்கதக் கவிதையாகும்.

    இவ்வுத்தி முறைகள் குறித்து மேலும் விரிவாக நான்காம் பாடம் விவரிக்கும்.

    2.3.3 இருண்மைநிலைக் கவிதை

    புரியாத தன்மையைக் கொண்டு விளங்குவது இருண்மைநிலைக் கவிதையாகும். பேசுவோன், பேசப்படுபொருள் ஆகியன சார்ந்த மயக்கங்கள் கவிதையில் இருண்மையை ஏற்படுத்துவதுண்டு. அவ்வகையில் அமைந்த பிரமிளின் கவிதை,

    எதிரே
    தலைமயிர் விரித்து
    நிலவொளி தரித்து
    கொலுவீற்றிருந்தாள்
    உன் நிழல்

    என்பதாகும்.

    என்.டி.ராஜ்குமாரின்,

    எறும்புகள் வரிசையாக
    பள்ளிக்குச் செல்கிறார்கள்
    வரும்பொழுது கழுதையாக வருகிறது

    என்பதும் அவ்வகையினதே யாகும் (திணை, பால் கடந்தது?).

    இருண்மைக் கவிதைகளின் நோக்கம், வாசகரிடத்தே கருத்துத் திணிப்பை ஏற்படுத்தலாகாது; அவர்களே சுதந்திரமாகச் சிந்தித்துப் பொருள் உணர வேண்டும் என்பதேயாகும் என்பர்.

    இனித் துளிப்பாக் குறித்துக் காணலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 29-09-2017 19:43:05(இந்திய நேரம்)