தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புதுக்கவிதை உத்திகள்

  • 4.3 புதுக்கவிதை உத்திகள்

    உணர்த்தும் முறையை ‘உத்தி’ என்று குறிப்பிடுவார்கள். கருத்தைப் புலப்படுத்த மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது ஓர் உத்திமுறை. மொழியில் இலக்கியத்தைத் தேர்ந்து கொண்டதும் உத்திமுறையே. இலக்கியத்துள் கவிதையைத் தேர்வு செய்ததும் உத்திமுறையே. அக்கவிதையுள்ளும் புதுக்கவிதையை எடுத்துக் கொண்டமையும் ஓர் உத்திமுறையேயாகும். அதனுள்ளும் கருத்துகளைப் படிப்போர் நெஞ்சில் விரைவாகவும் ஆழமாகவும் பதியுமாறு எடுத்துரைக்கும் பல்வேறு உத்திமுறைகள் அமைகின்றன. மரபுக்கவிதைக்கான உத்தி முறைகளைத் தண்டியலங்காரம் போன்ற அணியிலக்கண நூல்களின் வழி அறிந்து கொள்கிறோம். புதுக்கவிதைக்கு அவ்வாறான தனி நூல்கள் இல்லாவிடினும் பல்வேறு திறனாய்வு நூல்களின் வழி நம்மால் ஒருசில உத்திமுறைகளை உணர்ந்து படிக்கவும், படைக்கவும் முடிகின்றது.

    உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம், முரண், சிலேடை, இருண்மை ஆகிய உத்திமுறைகள் புதுக்கவிதைகளில் பயன்படுத்தப் பெறுவதை இங்குக் காண்போம்.

    4.3.1 உவமை

    வினை (செயல்), பயன், வடிவம், நிறம் என்னும் அடிப்படைகளில் தெரிந்த பொருளைக் கொண்டு தெரியாத பொருளைக் குறித்து உணர்த்துவது உவமை ஆகும். உணர்த்தும் முறைகளில் முதலிடம் பெறுவது உவமையே ஆகும்.

    ஒட்டுப் போடாத
    ஆகாயம் போல - இந்த
    உலகமும் ஒன்றேதான்                       (தமிழன்பன்)

    என்பதில் பின்னமற்ற (பிளவுபடாத) தன்மை பொதுத்தன்மையாகிறது.

    வாலிபன். . .
    பிணம் விழுவதை
    எதிர்பார்க்கும் கழுகாக
    மணமேடையில்
    உன்னை எதிர்பார்க்கிறான் . . .
    அவன்மீது மட்டுமே
    ஆத்திரப்படாதே                     (தமிழன்பன்)

    என்னும் கவிதையில் வரதட்சணை வாங்கும் மணமகனுக்குப் பிணம் தின்னும் கழுகு செயலடிப்படையில் உவமையாகின்றது.

    கோவலன் வருகைநோக்கிய கண்ணகியின் நிலை குறித்து,

    வாங்க முடியாத
    பொருள்கள் பற்றி நாம்
    வர்த்தக ஒலிபரப்பில்
    கேட்டுக் கொள்வதுபோல்
    வருவான் கோவலன் என்று
    தோழி சொன்னதையெல்லாம்
    கேட்டுக் கொண்டிருந்தாள் . . . கண்ணகி         (தமிழன்பன்)

    என இடம் பெறும் கவிதையில் வினையுவமை அமைகின்றது.

    4.3.2 உருவகம்

    உவமையும் பொருளும் வேறுவேறல்ல; ஒன்றே எனக் கருதுமாறு செறிவுற அமைவது உருவகமாகும். புல் குறித்து அமைந்த கவிதையொன்று பின்வருமாறு:

    பச்சை நிறத்தின் விளம்பரமே!
    குசேலரின் உணவுக் களஞ்சியமே!
    குதித்தோடும் கடல்நீரைக் காதலிக்காமலே
    உப்புருசி பெற்றுவிட்ட
    ஓவியப் புல்லே

    (நா.காமராசன்)

    4.3.3 படிமம்

    உவமை, உருவகம் என்பன மேன்மேலும் இறுகிய நிலையில்தான் படிமம் தோன்றுகிறது. முற்றுருவகப் பாங்கில் அமைந்து தெளிவானதோர் அகக் காட்சியை வழங்கும் ஆற்றலுடையதே படிமம் ஆகின்றது.

    கை ஓய இருளை விடியும்வரை
    கடைந்த இரவு
    ஒரு துளி வெண்ணெயாய் உயரத்தில்
    அதை வைத்துவிட்டு நகர்ந்தது

    (தமிழன்பன்)

    என்பதில் விடிவெள்ளி குறித்த படிமம் காணப்படுகின்றது.

    நட்சத்திரங்களைக் குறித்தமைந்த படிமமாக,

    இரவும் பகலும்
    எதிரெதிர் மோதிட
    உடைந்த பகலின்
    துண்டுகள்

    (தமிழன்பன்)

    என்பது அமைகின்றது.

    4.3.4 குறியீடு

    சொல் என்பதே குறிப்பிட்ட பொருளை உணர்த்தும் குறியீடாகும். சில சொற்கள் மற்றொன்றிற்காக நிற்பதும், மற்றொன்றின் பிரதிநிதியாகச் செயல்படுவதும், மற்றொன்றைச் சுட்டிக் காட்டுவதும் ஆகிய நிலைகளில் அமைவதுண்டு. தன்னோடு நெருக்கமான தொடர்புடைய பொருளைக் குறித்த உணர்வினைக் குறியீடு தோற்றுவிக்கின்றது.

    குறியீட்டை இயற்கைக் குறியீடு, தொன்மக் குறியீடு, வரலாற்றுக் குறியீடு, இலக்கியக் குறியீடு என வகைப்படுத்தலாம்.

    • இயற்கைக் குறியீடு

    வறுமையில் வாடும் மக்களைக் குறித்து அமைந்த,

    இலையுதிர்காலம் இல்லாமலேயே
    உதிருகின்ற உயர்திணை மரங்கள்

    (தமிழன்பன்)

    என்னும் கவிதை இதற்குச் சான்றாகும். மரங்களாவது பருவ காலச் சூழலுக்கேற்பத்தான் இலைஉதிர்க்கும். ஆனால் பட்டினிச்சாவில் பலியாவோருக்குப் பருவம் ஏது?

    • தொன்மக் குறியீடு

    தொன்மம் என்பது பழமையைக் குறிக்கும். புராண இதிகாச நிகழ்வுகளை ஏற்றும், மாற்றியும் புதுக்கியும் கவிஞன் தன் கருத்தைப் புலப்படுத்தும் முறை இது.

    சமத்துவம் குறித்த சிந்தனையை மாபலிச்சக்கரவர்த்தியிடம் மூவடி மண்கேட்டு அளந்த வாமன அவதாரக் கருத்தை அமைத்து உரைக்கின்றார் கவிஞர்.

    ஓர் அடியை
    முதலாளித்துவ
    முடிமேல் வைத்து
    ஓர் அடியை
    நிலப்பிரபுத்துவ
    நெஞ்சில் ஊன்றி
    ஓர் அடியை
    அதிகார வர்க்கத்தின்
    முகத்தில் இட்டு
    மூவடியால்
    முறைமை செய்ய
    எழுகிறது                              (தமிழன்பன்)

    வாமனன் முதலடியால் மண்ணையும், இரண்டாம் அடியால் விண்ணையும், அளந்து மூன்றாம் அடியை மாபலி தலைமேல் வைத்தான் என்பது புராணம்.

    4.3.5 அங்கதம்

    அங்கதம் என்பது ஒருவகைக் கேலியாகும். இது தீங்கையும் அறிவின்மையையும் கண்டனம் செய்வதாக அமையும்; சமகால நடப்பில், நிகழ்வுகளில் எதிரிடைப் பதிவுகளாக இருக்கக்கூடியதாகும். குற்றங்களைக் கடிந்துரைக்காமல் நகைச்சுவையுடன் சுட்டித் திருத்தவல்ல திறனுடையது இது.

    தனி மனித அங்கதம், சமுதாய அங்கதம், அரசியல் அங்கதம் என இதனை வகைப்படுத்தலாம்.

    • தனிமனித அங்கதம்

    மனிதன், கிடைத்த பொருளை அனுபவிக்கத் தெரியாதவனாக உள்ளான். தாமரையருகில் வாழும் தவளையாகத் தேனுண்ணத் தெரியாமல் வாழ்கிறான். அறிவியல் வசதிகள் வாய்க்கப் பெற்றும், அதனைச் சிறப்புறப் பயன்கொள்ளத் தெரியாமல் பாழாக்குகின்றான்.

    கதவுகளையெல்லாம்
    திறந்து வைத்திருக்கிறார்கள்
    கண்களை மட்டும்
    மூடிவிட்டு

    (மேத்தா)

    என்னும் வரிகளில் இவ்வுண்மை உணர்த்தப்படுகிறது. இம்முட்டாள்தனத்தை மெல்ல மெல்லத் திருத்திக் கொள்ள மாட்டார்களா இக்கவிதையைக் கண்ட பின்பு?

    • சமுதாய அங்கதம்

    தனிநபர் உடைமைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையை,

    திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
    தலையை எங்கே வைப்பதாம் என்று
    எவனோ ஒருவன் சொன்னான்
    களவு போகாமல் கையருகே வை!

    (ஞானக்கூத்தன்)

    என்னும் கவிதை நாசூக்காக உணர்த்துகிறது.

    சமுதாயத்தில் நீதியை நிலைநிறுத்த வேண்டிய நீதிமன்றத்தினர், அவற்றில் வழுவுகின்ற நிலையைக் கருத்தில் கொண்டு,

    வழக்கறிஞர்களுக்குள்
    கடுமையான
    வாதம்-
    இறந்து போய்விட்ட
    நீதியின் பிணத்தை
    எரிப்பதா. . .
    புதைப்பதா . . .
    என்று!                                     (மேத்தா)

    என்னும் கவிதை உணர்த்துகின்றது.

    • அரசியல் அங்கதம்

    அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மக்களை மூளைச் சலவை செய்யப் பலவிதமாக முழக்கமிடுவார்கள்.

    ஏழைகளே
    எங்கள் கட்சி
    உங்களுக்காகவே!
    நீங்கள்
    ஏமாற்றி விடாதீர்கள்
    இப்படியே இருங்கள்!

    (தமிழன்பன்)

    என்னும் கவிதை மக்களை முட்டாளாக்கவே முனையும் அரசியல்வாதிகளின் சாணக்கியத்தனத்தைப் பறைசாற்றுகின்றது.

    தேர்தல் காலங்களில் ‘வாக்குச் சீட்டுப் பெட்டிகள்’ வழிப்பறி செய்யப்படுவது கண்டு வருந்தும் கவிஞர் பின்வருமாறு அங்கதம் பாடுகிறார்.

    மற்றவர்
    குனியும்போது
    ஆகாயத்தையும். . .
    நிமிரும்போது
    நிலத்தையும். . .
    சுருட்டிக்கொள்ள
    வல்லமை படைத்த
    அரசியல்வாதிகள். . .
    இந்த
    வாக்குச் சீட்டுக்களை
    வழிப்பறி செய்வது . . .
    கடினமானதல்ல. . .

    இவ்வகைகளில் அங்கதக் கவிதைகள் விரியும்.

    4.3.6 முரண்

    ஒன்றுக்கு ஒன்று எதிரானவைகளைக் கொண்டு அமைப்பது முரண் என்னும் உத்தியாகும். மரபுக் கவிதைகளில் முரண்தொடை எனக் கூறப்படும். மாறுபட்ட இரு பொருள்களை அடுத்தடுத்து இணைத்துப் பார்ப்பதில் சுவை கூடும்; நினைவிலும் நிற்கும்.

    சொல் முரண், பொருள் முரண், நிகழ்ச்சி முரண் என இதனை வகைப்படுத்தலாம்.

    • சொல் முரண்

    சொல் அளவில் முரண்படத் தொடுப்பது இது,

    நாங்கள்
    சேற்றில்
    கால் வைக்காவிட்டால்
    நீங்கள்
    சோற்றில்
    கைவைக்கமுடியாது !

    என்பதில் கால், கை என்பன முரண்பட அமைந்தன.

    இறப்பதற்கே
    பிறந்ததாய் எண்ணிப் பழகியதால்
    நமது
    மூச்சில்கூட நாம் வாழ்வதில்லை
    மரணம் வாழ்கிறது
    !
                                              (தமிழன்பன்)

    என்னும் கவிதையில் இறப்பு x பிறப்பு, மரணம் x வாழ்க்கை என முரண் சொற்கள் அமைந்துள்ளன.

    • பொருள் முரண்

    பொருளில் முரண் அமையத் தொடுப்பது இது.

    மதங்களின் வேர்கள் தந்தது
    ஆப்பிள் விதைகள்தான்
    ஆனால் அதன்
    கிளைகளில்தான் கனிகிறது
    நஞ்சுப் பழங்கள்

                                                (பா. விஜய்)

    என்னும் கவிதையில் நன்மையும் தீமையுமாகிய பொருள் முரணைக் காண முடிகின்றது.

    கரியைப்
    பூமி
    வைரமாக மாற்றுகிறது - எமது
    கல்வி நிலையங்களோ
    வைரங்களைக்
    கரிகளாக்கித் தருகின்றன
                                 
                  (தமிழன்பன்)

    என வரும் கவிதையில் தரமற்றதைத் தரமுள்ளதாக்குவதும், தரமுள்ளதைத் தரமற்றதாக்குவதாகும் ஆகிய பொருள் முரண் காணப்படுகின்றது.

    • நிகழ்ச்சி முரண்

    இரு முரண்பட்ட நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து அமைத்துக்காட்டுவது இது.

    கிடைத்தபோது
    உண்கிறான்
    ஏழை
    நினைத்தபோது
    உண்கிறான்
    பணக்காரன்
                                         (மு.வை.அரவிந்தன்)

    என்பதில் சாத்தியமாதலும் சாத்தியம் ஆகாமையுமாகிய முரண்களைக் காணமுடிகின்றது.

    வாழ்க்கை இதுதான்
    செத்துக்கொண்டிருக்கும் தாயருகில்
    சிரித்துக் கொண்டிருக்கும் குழந்தை
                                                (அறிவுமதி)

    4.3.7 சிலேடை

    சிலேடை என்பது ஒரு சொல் இருபொருள்பட வருவதாகும். பொதுவாக, புதுக்கவிதை சொல்லலங்காரத்தை விரும்புவதில்லை. எனவே, ஒரு சில கவிதைகளில்தான் சிலேடை உத்தியைக் காணமுடிகின்றது.

    காமத்துப்பால்
    கடைப்பால் என்றாலே
    கலப்புப்பால் தான் !
                                  (அப்துல் ரகுமான்)

    என்னும் கவிதையில், கடை என்பது, விற்பனை நிலையம், கடைசி என்னும் பொருள்களையும், கலப்பு என்பது பாலும் நீரும் கலப்பு, ஆண் பெண் கலப்பு என்னும் பொருள்களையும் தந்து சிலேடையாகத் திகழ்வதைக் காணலாம்.

    4.3.8 இருண்மை

    சொல்லுக்கும் அஃது உணர்த்தும் பொருளுக்கும் இடையிலான தொடர்பு பலவற்றில் புரியும்; சிலவற்றில் புரியாது. அதற்குக் காரணமும் நமக்குத் தெரியாது. புதுக்கவிதையாளர் சிலர் இதனையே ஓர் உத்தியாக எடுத்துக் கொண்டனர். கவிதை உள்ளது, அதற்குப் பொருளும் உள்ளது, படிப்பவர்தம் அறிவுக்கும் உணர்வுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப அது வெவ்வேறு பொருளைத் தரும் என்பது அவர்களின் கருத்து. இன்னும் சொல்லப்போனால், குறிப்பிட்ட ஒரே ஒரு பொருளை மட்டும் தருவது கவிதையாகாது என்பது அத்தகையோர் வாதம் எனலாம்.

    இருண்மை உத்தி மேனாட்டு இலக்கியத் தாக்கத்தால் ஏற்பட்டதாகும்.

    எடுத்துக்காட்டு :

    தேசிய இறைச்சிகளான நம்
    பரிமாற்றம்
    ஆரம்பிக்காமல் முடிந்துவிட்டது.
                                               (தேவதச்சன்)

    நான் ஒரு உடும்பு
    ஒரு கொக்கு
    ஒரு ஒன்றுமேயில்லை
                                                  (நகுலன்)

    எதிரே
    தலைமயிர் விரித்து
    நிலவொளி தரித்து
    கொலுவீற்றிருந்தாள்
    உன் நிழல்
                                                  (பிரமிள்)

    இவை போன்ற கவிதைகள், பார்ப்பவர் எண்ணத்திற்கேற்ப, மேகங்கள் பல்வேறு பொருள்களாய்ப் புரிந்து கொள்ளப்படுவது போலப் படிப்பவர் கருத்திற்கேற்பப் புரிந்து கொள்ளப்படுபவையாகும்.

    இவ்வாறு, பல்வேறு உத்திமுறைகள், புதுக்கவிதைக்குப் பெருமை சேர்ப்பனவாக அமைந்துள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-10-2017 13:20:10(இந்திய நேரம்)