தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A021231-இடைச் சொல் பொருள்கள்

  • 3.1 இடைச்சொல் பொருள்கள்

    இடைச்சொல் தனியே நின்று பொருள் உணர்த்தாது என்பதை
    முன்பே அறிவீர்கள். பெயரோடு அல்லது வினையோடு
    சேர்ந்து நின்று, சில இடைச்சொற்கள் சில பொருள்களை
    உணர்த்தும். இவற்றையே தத்தம் பொருளை உணர்த்துவன
    என நன்னூலார் குறிப்பிடுகின்றார். (நூற்பா 421) பொருள்
    உணர்த்தும் சில இடைச் சொற்களே அசைநிலையாகவும் இசை
    நிறைக்கவும் வருவது உண்டு.

    தெரிநிலை, தெளிவு, ஐயம், முற்று, எண், சிறப்பு, எதிர்மறை,
    எச்சம், வினா, விருப்பம், ஒழிந்தசொல், பிரிநிலை, கழிவு,
    ஆக்கம் ஆகியவை அவ்இடைச்சொற்களுக்குரிய பொருள்கள்
    ஆகும். இனி எடுத்துக்காட்டுகள் கொண்டு அவ்விடைச்
    சொற்கள் உணர்த்தும் பொருள்களைப் புரிந்து கொள்ளலாம்.

    3.1.1 ஏகார இடைச்சொல்

    ஏகார இடைச்சொல் பிரிநிலை, வினா, எண், ஈற்றசை,
    தேற்றம், எனும் பொருள்களை உணர்த்தி நிற்கும். இச்சொல்
    அசைநிலையாகவும் இசைநிறைக்கவும் வருவதுண்டு.

    எடுத்துக்காட்டு

    1)
    பிரிநிலை
    இவனே வெற்றி பெற்றான் - இதில் ஏ
    என்பது பலருள் ஒருவனைப் பிரித்துச்
    சுட்டுகிறது. ஆகவே பிரிநிலை.
    2)
    வினா
    நீயே சொன்னாய்? இதில் நீயே என்பது
    நீயோ என்னும் வினாப் பொருள்
    உணர்த்துகிறது.
    3)
    எண்
    அறமே பொருளே இன்பமே வீடே எனப்
    பொருள் நான்கு - இதில் அறமும்
    பொருளும் இன்பமும் வீடும் என எண்ணிச்
    சொல்வதால் ஏ எண்ணுப் பொருள்
    உணர்த்துகிறது.
    4)
    தேற்றம்
    செய்யவே செய்தான். இதில் ஏ தேற்றப்
    (உறுதிப்) படுத்துகின்றமையால் தேற்றம்
    (நிச்சயம்)
    5)
    இசை நிறை
    ஏயே இவெளாருத்தி பேடி! இதில் வரும்
    ஏ, ஏ என்பன வேறு பொருள் இல்லாமல்
    இசையை மட்டும் நிறைத்து நிற்கின்றன.
    6)
    ஈற்றசை
    ‘எழுத்து அது முதல் சார்பென விரு
    வகைத்தே(நன்னூல், நூற்பா-58) - இதில்
    ஏ ஈற்று அசையாக நிற்கிறது. அதாவது
    வேறுபொருள் இல்லாமல் வெறும்
    அசையாக நிற்கிறது.

    3.1.2 ஓகார இடைச்சொல்

    ‘ஓ’ என்னும் இடைச்சொல் ஒழியிசை, வினா, சிறப்பு,
    எதிர்மறை தெரிநிலை, கழிவு, பிரிநிலை என்னும்
    பொருள்களில் வரும். அசைநிலையாகவும் வரும்.

    எடுத்துக்காட்டு

    1)
    ஒழியிசை
    படிக்கவோ வந்தாய் - இது படிப்பதற்கு
    வரவில்லை, விளையாட வந்தாய் என்ற
    ஒழிந்த    (மறைந்திருக்கிற) பொருளைத்
    தந்தது. ஆகவே ஒழியிசை.
    2)
    வினா
    நீயோ கண்ணன்? இதில் ஓ வினாப்
    பொருளில் வந்தது.
    3)
    சிறப்பு
    ஓ ஓ கொடியது - இதில் ஓ இழிவு
    சிறப்புப் பற்றி வந்தது. (மிக இழிவு)

    ஓ ஓ பெரியர் - இதில் ஓ உயர்வு சிறப்புப்
    பற்றி வந்தது. (மிக உயர்வு)
    4)
    எதிர்மறை
    அவனோ கேட்பான் - இதில் அவன்
    கேட்க மாட்டான் என்று பொருள்படுதலால்
    ஓ எதிர்மறை.
    5)
    தெரிநிலை
    அலியை நோக்கி. இது ஆணோ?
    அதுவுமன்று; பெண்ணோ? அதுவுமன்று.
    இக்கூற்றில்     அலி     என்பது
    தெரியநிற்றலால்
    ஓ தெரிநிலை
    6)
    கழிவு
    ஓ ஓ கெட்டேன் - இதில் கடந்த
    நிகழ்ச்சிக்கு வருந்துவதால் ஓ கழிவுப்
    பொருளில் வந்தது
    7)
    பிரிநிலை
    இவனோ கொண்டான் - பலருள்
    ஒருவனைப் பிரித்துக் காட்டுவதால் ஓ
    பிரிநிலை.
    8)
    அசை நிலை
    பார்மினோ! (பாருங்கள்) இதில் ஓ
    வேறொரு பொருளுமின்றி அசையாகவே
    நிற்கிறது.

    3.1.3 என, என்று - இடைச்சொற்கள

    என, என்று ஆகிய இந்த இரண்டு இடைச்சொற்களும் வினை,
    பெயர், குறிப்பு, இசை, எண், பண்பு ஆகியவற்றை உணர்த்தும்
    சொற்களோடு இயைந்து (சேர்ந்து) வரும்.

    எடுத்துக்காட்டு

    1)
    வினை
    :
    மகன் பிறந்தான் எனத் தந்தை
    மகிழ்ந்தான்.
    மகன் பிறந்தான் என்று தந்தை
    மகிழ்ந்தான். வினையொடு இயைந்து வந்தது.
    2)
    பெயர்
    :
    அழுக்காறு என ஒருபாவி - அழுக்காறு
    என்று ஒருபாவி - இங்கு அழுக்காறு
    என்னும் பெயரோடு (பெயர்ச்சொல்லோடு)
    இயைந்து வந்தன.
    3)
    குறிப்பு
    :
    ‘பொள்ளென' ஆங்கே    புறம்வேரார்
    பொள்ளென்று
    ஆங்கே புறம்வேரார் -
    ‘பொள்'
        என்ற விரைவுக்குறிப்பு
    மொழியோடு இயைந்து வந்தன.
    4)
    இசை
    :
    ஒல்லென ஒலித்தது. ஒல்லென்று ஒலித்தது.
    ‘ஒல்’
    என்ற இசைக்குறிப்புச் சொல்லோடு
    வந்தன.
    5)
    எண்
    :
    ‘நிலமென நீரென தீயென வளியென
    வானெனப் பூதங்கள்
    ஐந்து’. நிலமென்று
    நீரென்று     தீயென்று வளியென்று
    வானென்று
    பூதங்கள் ஐந்து - எண்ணொடு
    இயைந்தன.
    6)
    பண்பு
    :
    வெள்ளென விடிந்தது. வெள்ளென்று
    விடிந்தது - பண்பைக் குறிக்கும் சொல்லோடு
    இயைந்தன.

    3.1.4 உம்மை இடைச்சொல்

    உம் என்னும் இடைச்சொல் எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம்,
    முற்று, அளவை, தெரிநிலை, ஆக்கம் என்னும் எட்டுப்
    பொருளில் வரும்.

    எடுத்துக்காட்டு

    1)
    எதிர்மறை
    :
    நாள் தவறினும் நாத்தவறான் - இதில்
    நாள் தவறாது என்று பொருள்
    படுதலால் உம்மை எதிர்மறை.
    2)
    சிறப்பு
    :
    அறிஞருக்கும் எட்டாப்பொருள் - இதில்
    பல நூல்களையும் கற்ற அறிஞருக்கும்
    என்று அறிஞரை உயர்த்துவதால்
    உயர்வு சிறப்பு
    நாயும் தின்னாச் சோறு. இதில்
    கக்கியதைத் தின்னும் நாயும் என்று
    நாயை இழிவு படுத்துவதால் இழிவு
    சிறப்பு.
    3)
    ஐயம்
    :
    பத்தாயினும் எட்டாயினும் கிடைக்கும்.
    இதில் ஒன்றைத் துணிந்து கூறாமையால்
    ஐயத்தை உணர்த்தியது.
    4)
    எச்சம்
    :
    இராமனும் வருந்தினான் - இதில்
    இராமன் வருந்துமுன் இலக்குமணனும்
    வருந்தினான்     என்று     பொருள்
    கொண்டால் - இது இறந்தது தழீஇய
    எச்சவும்மை.
    :
    இராமன் வருந்திய பின் இலக்குமணனும்
    வருந்தினான் என்று பொருள் படின் -
    இது எதிரது தழீஇய எச்சவும்மை.
    5)
    முற்று
    :
    எல்லாரும் வந்தார் - இது முற்றுப்
    பொருளைத் தருதலால் இது முற்றும்மை.
    6)
    எண்
    :
    நிலமும் நீரும் தீயும் வளியும்
    வெளியுமெனப் பூதம் ஐந்து - இதில்
    பொருள்களை     எண்ணுதலால்
    எண்ணும்மை.
    7)
    தெரிநிலை
    :
    அலியை நோக்கி, ‘ஆணும் அன்று
    பெண்ணும் அன்று’, என்று சொன்னால்
    அலி என்பது தெரிய நிற்றலால் -
    தெரிநிலை.
    8)
    ஆக்கம்
    :
    தஞ்சாவூர் நகரும் ஆயிற்று - இதில்
    ஊராயிருந்த தஞ்சாவூர் இப்போது
    நகரம் ஆயிற்று என்று ஆக்கப்பொருள்
    தருதலால் - ஆக்கம். (வளர்ச்சி)
    மேலே நாம் கண்ட முற்றும்மை சில
    இடங்களில் எச்சப்பொருளைத் தருவதும்
    உண்டு. எல்லாரும் வந்திலர் - இதில்
    சிலர் வந்தனர் என்ற எஞ்சிய பொருள்
    - எச்சப் பொருள் அமைந்துள்ளது.

    3.1.5 சில எண்ணிடைச் சொற்கள்

    நாம் இதுவரை அறிந்துள்ள எண் இடைச்சொற்கள் ஏ, ஓ,
    என, உம், என்று ஆகியனவாகும். இவற்றுடன் எனா, என்றா,
    ஓடு, ஒடு ஆகியவையும் எண் இடைச்சொற்களாக வரும்.
    இவை பற்றிய சில சிறப்பு இலக்கணங்களைக் காண்போம்.

    (அ) சொற்களிடையே எண் இடைச்சொல் மறைந்து வருவது
    செவ்வெண்
    எனப்படும்.

    எடுத்துக்காட்டு:

    கண்ணனும் முருகனும் வந்தனர் என்பதைக் கண்ணன்
    முருகன் இருவரும் வந்தனர் என உம்மையை நீக்கிச்
    சொல்வது செவ்வெண். இவ்வாறு செவ்வெண் வரும்போது
    இருவரும்
    எனும் தொகைச் சொல் இடம் பெறும்.


    அதேபோல் ஏ, என்றா, எனா என்னும் எண்ணிடைச்
    சொற்கள் எண்ணி வரும்போதும் தொகைச்சொல் வரும்.

    எடுத்துக்காட்டு:

    சாத்தனே கொற்றனே இருவரும் வந்தனர்
    சாத்தன்என்றா கொற்றன்என்றா இருவரும் வந்தனர்
    சாத்தன் எனா கொற்றன்எனா இருவரும் வந்தனர்


    (ஆ) உம், என்று, என, ஓடு, எனும் இந்நான்கு எண்
    இடைச்சொற்களும் எண்ணிச் சொல்லும்போது தொகை
    பெற்றும் வரலாம். பெறாமலும் வரலாம்.

    எடுத்துக்காட்டு:

    சாத்தனும் கொற்றனும் இருவரும் வந்தனர்
    சாத்தனும் கொற்றனும் வந்தனர்
    சாத்தனோடு கொற்றனோடு இருவர் உளர்
    சாத்தனோடு கொற்றனோடு உளர்


    சாத்தனும் கொற்றனும் ஆகிய இருவர் உள்ளனர்
    என்பது பொருள்


    என்று, என, ஒடு என்னும் இம்மூன்று இடைச்சொற்களும்
    எண்ணப்படும் பொருள்தோறும் நிற்கும். சில சமயங்களில்
    ஓரிடத்தில் நிலைத்து நின்று, எண்ணப்படும் பொருள்தோறும்
    சென்றும் பொருந்தும்.

    எடுத்துக்காட்டு:

    என்று

    ‘வினைபகை என்று இரண்டின் எச்சம்’ (குறள் : 674)


    இதில் என்று என்னும் இடைச்சொல் தான்நின்ற
    விடத்திலிருந்து பிரிந்து (விலகி) வினை என்று, பகை என்று,
    என எண்ணப்படும் பொருள்கள்தோறும்     சென்று
    பொருந்தியது.

    என என்பதும் ‘என்று’ போலவே செயல்படும்.

    ‘பகைபாவம் அச்சம் பழியென நான்கும்’ (குறள் : 146)


    இங்கே, என - என்பது ஓரிடத்தில் நின்று பகையென,
    பாவமென, அச்சமென, பழியென, என்று எண்ணப்படும்
    பொருள்தோறும் சென்று பொருந்தியது.

    ஒடு

    ‘பொருள் கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்’

    (குறள் : 675)


    இங்கே ஒடு - என்பது தான் இருந்த இடத்திலிருந்து (பிரிந்து)
    சென்று பொருெளாடு,     கருவியொடு, காலத்தொடு,
    வினையொடு, இடனொடு என எண்ணப்படும் பொருள்தோறும்
    சென்று பொருந்தியது.

    (ஈ) எண்ணிடைச் சொற்கள் வினைச்சொல்லோடு வந்தாலும்
    பெயர்ச்சொல்லோடு வருவதுபோலவே வரும்.

    எடுத்துக்காட்டு:

    கற்றும் கேட்டும் அறிவு பெற்றார் (உம்மை)
    உண்ணவென உடுக்கவென வந்தான் (என)
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 13:59:38(இந்திய நேரம்)