தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மதுரை பொன்னுசாமி பிள்ளை

  •     

    4.2 மதுரை பொன்னுசாமி
        நாதசுர உலகில் மும்மூர்த்திகள் என்று மன்னார்குடி சின்னப்பக்கிரி, மதுரை பொன்னுச்சாமி , திருவாவடுதுறை இராசரத்தினம் விளங்கினர். இவர்களில் ஒருவரான மதுரை பொன்னுசாமியின் மூதாதையர் மதுரையை அடுத்துள்ள திருமங்கலத்தில் வாழ்ந்து வந்தனர். பிறகு இவர்கள் மதுரையில் குடியேறினர்.     முத்துக்கருப்பப் பிள்ளை, அலமேலு அம்மையாரின் மகனாக 1887 ஆம் ஆண்டில் பொன்னுசாமி பிறந்தார் . இவரது தந்தையார் முத்துக்கருப்பப் பிள்ளையின் நாகசுர இசையில் மகிழ்ந்த எட்வர்டு மன்னர் நூறு வெள்ளி நாணயங்களைப் பரிசாக அளித்தார். தமது தந்தையாரிடம் நாதசுரப் பயிற்சியைப் பொன்னுசாமி பெற்றார். பிறகு மதுரை சௌந்தர பாண்டியன் நாதசுரக்காரரிடமும், கும்பகோணம் நாராயண நாயனக்காரரிடமும் பயிற்சி பெற்றார். எட்டயபுரம் இராமச்சந்திர பாகவதரிடம் பாட்டும் வீணையும் பயின்றார். 1895ஆம் ஆண்டு முதல் கச்சேரி செய்யத் தொடங்கினார். மைசூர் அரண்மனையில் அவைக்களக் கலைஞராகவும் விளங்கினார். 1904ஆம் ஆண்டில், தாம் வசித்த தெருவில் சங்கீத ரத்ன விநாயகர் கோயில் ஒன்றைக் கட்டினார். இந்நிலையில் தமிழ்ப் புலமையும், இசை வளமும் பெற்ற இவர் சிலப்பதிகாரத்தையும், அதன் உரையையும் நன்கு பயின்றார். இதன் விளைவாகப் பூர்வீக சங்கீத உண்மை என்ற இசைத் தமிழ் ஆய்வு நூலொன்றை வெளியிட்டார்.

    4.2.1 பூர்வீக சங்கீத உண்மை

        தாம் எழுதிய இசைத் தமிழ் ஆய்வு நூலிற்கு பூர்வீக சங்கீத     உண்மை     என்று பெயரிட்டார். சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் நிலவிய இசை பற்றிய உண்மைகள் பல மறைக்கப்பட்டன ; மாற்றப்பட்டன. இவற்றை மீண்டும் கொண்டு வருவதே இந்நூலின் நோக்கம் என்றும், இதனால் இதற்குப் பூர்வீக சங்கீத உண்மை என்று பெயரிடப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    • நூலமைப்பு

        பூர்வீக சங்கீத உண்மை என்ற நூல் ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது.

    (1) நூன் மரபு (2) கர்த்தா ராகத்தின் நிர்ணயம் (3) மூர்ச்சை பிரசுதாரம் (4) கர்த்தா இராகங்களும் அனுபவத்திலிருக்கிற ஜன்ய இராகங்களும் (5) இசை நுணுக்கம் என்னும் சுதிபேத ராக சூட்சுமம்

        முதலாவது இயல் பன்னிரு சுரங்கள் பற்றியும், பன்னிரு சுரங்களும் வான் மண்டலத்தில் நிலவும் பன்னிரு இராசிகளில் நிற்கும் முறையையும் விளக்குகின்றது.

        இரண்டாவது இயல் பழந்தமிழ் மக்கள் 32 தாய் இராகங்களில் பாடி வந்துள்ள நிலையை எடுத்துரைக்கின்றது.

        மூன்றாவது இயல் பண், பண்ணியல், திறம், திறத்திறம் அமையும் நிலைகளை விளக்குகிறது.

        நான்காவது இயல் பரதர், சாரங்கதேவர், சோமநாதர், புண்டரீக விட்டலர், வெங்கடாத்ரி ராஜா, வேங்கடமகி ஆகியவர்களின்     இசை     இலக்கண அமைப்புகளைக் குறிப்பிட்டு,     பொன்னுச்சாமியின்     தாய்     இராகங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இவை பின்வருமாறு,

    எண்
    ஆசிரியர் பெயர்
    நூல் பெயர்
    தாய் இராகங்கள்
    1.
    பரதர்
    நாட்டிய சாத்திரம்
    18
    2.
    சாரங்கதேவர்
    சங்கீத ரத்னாகரம்
    18
    3.
    சோமநாதர்
    இராக விபோதம்
    23
    4.
    புண்டரீக விட்டலர்
    சத்ராகச் சந்திரோதயம்
    19
    5.
    வெங்கடாத்ரி ராஜா
    சுரகலாநிதி
    20
    6.
    வேங்கட மகி
    சதுர்தண்டிப் பிரகாசிகை
    72
    7.
    பொன்னுச் சாமி
    பூர்வீக சங்கீத உண்மை
    36

    இதில்    வேங்கடமகி    கூறிய 72 தாய் இராகங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், 32 தாய் இராகங்களே உண்மையானவை என்றும் விளக்கியுள்ளார்.

    • அகமதாபாத் மாநாடு

        அகமதாபாத்தில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டுக்கு மைசூர் மன்னரின் உதவியோடு சென்று அம்மாநாட்டில் கலந்து கொண்டார்.இம்மாநாட்டில் இவர் கூறிய தாய் இராகம் 32 என்கிற கொள்கை விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இக்குழுவில் பம்பாய் பண்டிட், விஷ்ணு திகம்பர், வங்கநாட்டுப் பிரமத் நாத் பானர்ஜி, சபாநாயகரான பிரபாத் தேவஜி ஆகியோர் கலந்து கொண்டு விவாதித்து ஏற்றனர். பிறகு இக்கருத்துகளை நூலாக்கி வெளியிட்டார். நூலின் முகப்புப் பகுதியில் தம் காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த இசை மேதைகளின் கருத்துகளைப் பெற்று வெளியிட்டார்.

    • அறிஞர்கள் கருத்து

        தாய் இராகம் 32 என்ற இவரது கருத்தினைக் காரைக்குடி வீணை சுப்பராமைய்யர், வீணை சாம்பசிவய்யர், மதுரை கிருட்டிணய்யங்கார், அரிகேச நல்லூர் முத்தையா பாகவதர்,     காவிரிப்பட்டினம்     கே.வரதாச்சாரியார், திருநெல்வேலியில்     சாமளய்யர்,     பெருங்குளம் வி.சினிவாச அய்யங்கார், கூறைநாடு நடேச பிள்ளை, இலுப்பூர் பொன்னுசாமி , திருப்பாம்புரம் நடராச சுந்தரம் போன்றோர் ஏற்று, சான்றிதழும் கொடுத்துள்ளனர்.

        ஆபிரகாம்     பண்டிதர் மிகச் சிறந்த இசைக் கலைஞராகவும், இசை ஆய்வாளராகவும் விளங்கியுள்ளார். தலை சிறந்த இசை மேதைகளாக நாதசுரக் கலைஞர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். இவர்கள் இசை ஆய்வாளர்களாகவும் இருந்துள்ளனர். ஆனால் இவர்கள் தாம் கண்ட இசை ஆய்வுகளை நூலாக்கும் பணியில் ஈடுபடாத நிலையில் முறையாக ஆய்வியல் நெறிப்படி ஆய்ந்து இசைத் தமிழ் ஆய்வு நூல் தந்தவராக மதுரை பொன்னுசாமி விளங்கினார்.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    சிலப்பதிகாரத்தை     உரையுடன் வெளியிட்ட ஆசிரியர் யார்?
    2.
    தஞ்சை மு.ஆபிரகாம் பண்டிதர் வெளியிட்ட நூல்களைக் கூறுக.
    3.
    கருணாமிர்த சாகரம் என்ற நூல் எத்தனை பாகங்களைக் கொண்டுள்ளது?
    4.
    ஆபிரகாம் பண்டிதர் முக்கியமாகக் கூற விழைந்தது எது?
    5.
    பண்டிதரின் குடும்பத்தார் மேற்கொண்ட ஆய்வுகள் யாவை?
    6.
    மதுரை பொன்னுசாமி படைத்த நூலின் பெயர் என்ன?
    7.
    பூர்வீக சங்கீத உண்மை உணர்த்தும் கருத்து யாது?
    8.
    அகில இந்திய அளவில் நடைபெற்ற இசை மாநாடு எங்கு நடைபெற்றது?
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 23:52:33(இந்திய நேரம்)