தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Manimeagalai


17 உலக அறவி புக்க காதை

 
 

[ மணிமேகலை காயசண்டிகை என்னும்

 

விச்சாதரி வயிற்று யானைத்தீஅவித்து

 

அம்பலம்புக்க பாட்டு ]

 

 

பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற

பிச்சைப் பாத்திரப் பெருஞ்சோற்று அமலை

அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன்

திறத்து வழிப்படூஉம் செய்கை போல

5

வாங்குகை வருந்த மன்உயிர்க்கு அளித்துத

தான்தொலைவு இல்லாத் தகைமை நோக்கி,

யானைத் தீநோய் அகவயிற்று அடக்கிய

காயசண் டிகைஎனும் காரிகை வணங்கி

நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி

10

அடல்அரு முந்நீர் அடைத்த ஞான்று

குரங்குகொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்

அணங்குஉடை அளக்கர் வயிறு புக்காங்கு

இட்டது ஆற்றாக் கட்டழல் கடும்பசிப்

பட்டேன் என்தன் பழவினைப் பயத்தால்

15

அன்னை கேள்நீ ஆர்உயிர் மருத்துவி

துன்னிய என்நோய் துடைப்பாய் என்றலும்,

எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம்

பிடித்ததுஅவள் கையில் பேணினள் பெய்தலும்

வயிறுகாய் பெரும்பசி நீங்கி மற்றவள்

20

துயரம் நீங்கித் தொழுதனள் உரைக்கும்:

மாசுஇல் வால்ஒளி வடதிசைச் சேடிக்

காசுஇல்காஞ் சனபுரக் கடிநகர் உள்ளேன்

விஞ்சையன் தன்னொடுஎன் வெவ்வினை உருப்பத்

தென்திசைப் பொதியில் காணிய வந்தேன்

25

கடுவரல் அருவிக் கடும்புனல் கொழித்த

இடுமணல் கானியாற்று இயைந்துஒருங்கு இருந்தேன்

புரிநூல் மார்பில் திரிபுரி வார்சடை

மரஉரி உடையன் விருச்சிகன் என்போன்

பெருங்குலைப் பெண்ணைக் கருங்கனி அனையதுஓர்

30

இருங்கனி நாவல் பழம்ஒன்று ஏந்தித்

தேக்குஇலை வைத்துச் சேண்நாறு பரப்பில்

பூக்கமழ் பொய்கை ஆடச் சென்றோன்

தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன்

காலால் அந்தக் கருங்கனி சிதைத்தேன்

35

உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன்

கண்டனன் என்னைக் கருங்கனிச் சிதைவுடன்

சீர்திகழ் நாவலில் திப்பிய

ஈர்ஆறு ஆண்டில் ஒருகனி தருவது

அக்கனி உண்டோர் ஆறுஈர் ஆண்டு

40

மக்கள் யாக்கையின் வரும்பசி நீங்குவர்

பன்னீ ராண்டில் ஒருநாள் அல்லது

உண்ணா நோன்பினேன் உண்கனி சிதைத்தாய்

அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து

தந்தித் தீயால் தனித்துயர் உழந்து

45

முந்நால் ஆண்டில் முதிர்கனி நான்ஈங்கு

உண்ணும் நாள்உன் உறுபசி களைகென

அந்நாள் ஆங்குஅவன் இட்ட சாபம்

இந்நாள் போலும் இளங்கொடி கெடுத்தனை

வாடுபசி உழந்து மாமுனி போயபின்

50

பாடுஇமிழ் அருவிப் பயமலை ஒழிந்துஎன்

அலவலைச் செய்திக்கு அஞ்சினன் அகன்ற

இலகுஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி

ஆர்அணங்கு ஆகிய அருந்தவன் தன்னால்

காரணம் இன்றியும் கடுநோய் உழந்தனை

55

வான்ஊடு எழுகென மந்திரம் மறந்தேன்

ஊன்உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி

வயிறுகாய் பெரும்பசி வருத்தும்என்றேற்குத்

தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன

ஆங்குஅவன் கொணரவும் ஆற்றே னாக

60

நீங்கல் ஆற்றான் நெடுந்துயர் எய்தி

ஆங்குஅவன் ஆங்குஎனக்கு அருளொடும் உரைப்போன்

சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்

கம்பம் இல்லாக் கழிபெருஞ் செல்வர்

ஆற்றா மாக்கட்கு ஆற்றும்துணை ஆகி

65

நோற்றோர் உறைவதுஓர் நோன்நகர் உண்டால்

பலநாள் ஆயினும் நிலனொடு போகி

அப்பதிப் புகுகென்று அவன்அருள் செய்ய

இப்பதிப் புகுந்துஈங்கு யான்உறை கின்றேன்

இந்திர கோடணை விழவுஅணி வருநாள்

70

வந்து தோன்றிஇம் மாநகர் மருங்கே

என்உறு பெரும்பசி கண்டனன் இரங்கிப்

பின்வரும் யாண்டுஅவன் எண்ணினன் கழியும்

தணிவுஇல் வெம்பசி தவிர்த்தனை வணங்கினேன்

மணிமே கலைஎன் வான்பதிப் படர்கேன்

75

துக்கம் துடைக்கும் துகள்அறு மாதவர்

சக்கர வாளக் கோட்டம்உண்டு ஆங்குஅதில்

பலர்புகத் திறந்த பகுவாய் வாயில்

உலக அறவி ஒன்றுஉண்டு அதனிடை

ஊர்ஊர் ஆங்கண் உறுபசி உழந்தோர்

80

ஆரும் இன்மையின் அரும்பிணி உற்றோர்

இடுவோர்த் தேர்ந்துஆங்கு இருப்போர் பலரால்

வடுவாழ் கூந்தல் அதன்பால் போகென்று

ஆங்குஅவள் போகிய பின்னர் -ஆயிழை

ஓங்கிய வீதியின் ஒருபுடை ஒதுங்கி

85

வலமுறை மும்முறை வந்தனை செய்துஅவ்

உலக அறவியின் ஒருதனி ஏறிப்

பதியோர் தம்மொடு பலர்தொழுது ஏத்தும்

முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கிக்

கந்துஉடை நெடுநிலைக் காரணம் காட்டிய

90

தம்துணைப் பாவையைத் தான்தொழுது ஏத்தி

வெயில்சுட வெம்பிய வேய்கரி கானத்துக்

கருவி மாமழை தோன்றியது என்னப

பசிதின வருந்திய பைதல் மாக்கட்கு

அமுத சுரபியோடு ஆயிழை தோன்றி

95

ஆபுத் திரன்கை அமுத சுரபிஇஃது

யாவரும் வருக ஏற்போர் தாம்என,

ஊண்ஒலி அரவத்து ஒலிஎழுந் தன்றே

யாணர்ப் பேர்ஊர் அம்பலம் மருங்குஎன்.

 

 

உலக அறவி புக்க காதை முற்றிற்று.

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 05:30:22(இந்திய நேரம்)