Primary tabs
-
2.1 தொல்காப்பியமும், ஒலியனியலும்
ஒரு மொழியில் உள்ள ஒலிகளைப் பலவாறு பகுத்து ஆராய்வதே ஒலியியல் அல்லது ஒலியனியல் எனப்படும். இக்கால மொழி நூலார் ஒரு மொழியின் ஒலியியலை ஆராயும்போது, அந்த மொழியில் உள்ள ஒலிகளின் எண்ணிக்கை, அவற்றின் பாகுபாடு, அமைப்பு, ஒலிப்பு முறை ஆகியவை பற்றி விளக்கிக் காட்டுகின்றனர். அவர்கள் மொழியின் பேச்சு ஒலி அமைப்பையே முக்கியமாகக் கொண்டு ஆராய்கின்றனர்.
ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியர், ஓசை, ஒலி, ஒலிப்பு முயற்சிகள் தொடர்பான அறிவியல் வளராத அப்பழங்காலத்தில், ஒலிகளின் ஒலிப்பு முறையை விளக்குவதற்காகவே எழுத்ததிகாரத்தில் பிறப்பியல் எனத் தனி இயல் ஒன்றை வகுத்துள்ளார். மேலும் தமிழ் ஒலிகளின் எண்ணிக்கை, அவற்றின் பாகுபாடு, அவை சொற்களுக்கு முதலிலும், இடையிலும், இறுதியிலும் வருகின்ற முறை ஆகியவை பற்றியும் விரிவாக விளக்கிக் காட்டியுள்ளார். இங்கு அவற்றை வரன்முறையாகத் தொகுத்துக் காண்போம்.