தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஒலிகளின் வருகைமுறை

  • 2.5 ஒலிகளின் வருகை முறை

    தொல்காப்பியர், தம்முடைய காலத்தில் உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வழங்கிய சொற்களை எல்லாம் நன்கு ஆராய்ந்தார். அச்சொற்களில் எந்தெந்த எழுத்துகள் முதலில் வருகின்றன. எந்தெந்த எழுத்துகள் இறுதியில் வருகின்றன என்பனவற்றை வரையறுத்துக் கூறியுள்ளார். சொற்களுக்கு இடையில் எழுத்துகள், குறிப்பாக மெய்யெழுத்துகள் எவ்வாறு ஒன்றோடு ஒன்று மயங்கி (சேர்ந்து) வருகின்றன என்பது பற்றியும் விரிவான விதிகளைக் கூறியுள்ளார். இவ்வாறு சொல்லுக்கு முதலிலும், இறுதியிலும், இடையிலும் வரும் எழுத்துகள் பற்றி அவர் எழுத்ததிகாரத்தில் வரையறுத்துக் கூறிய விதிகள், அவர் காலத் தமிழின் ஒலியமைப்பைத் தெளிவாகக் காட்டுகின்றன.

    2.5.1 மொழி முதல் எழுத்துகள்

    1)
    பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும்.
    2)
    மெய்யெழுத்துகள் தனித்து மொழிக்கு முதலில் வாரா; உயிர்களோடு சேர்ந்து உயிர் மெய்களாக மட்டுமே மொழிக்கு முதலில் வரும்.
    3)
    க, த, ந, ப, ம எனும் ஐந்து மெய் எழுத்துகளும் எல்லா உயிர்களோடும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும்.
    4)
    சகர மெய் அ, ஐ, ஒள - என்னும் மூன்று உயிர்கள் அல்லாத பிற ஒன்பது உயிர்களோடு மட்டுமே கூடி மொழி முதலில் வரும்.
    5)
    வகர மெய் உ, ஊ, ஒ, ஓ - என்னும் நான்கு உயிர் நீங்கிய பிற எட்டு உயிர்களோடு கூடி மட்டுமே மொழி முதலாகும்.
    6)
    ஞகர மெய் ஆ, எ, ஒ - என்னும் மூன்று உயிர்களோடு கூடி மட்டுமே மொழி முதலாகும்.

    (எ.டு) ஞாலம் (உலகம்) ; ஞெகிழி (கொள்ளிக்கட்டை) ; ஞொள்கிற்று (சுருங்கிற்று)

    7)
    யகர மெய் ஆகார உயிரோடு கூடி மட்டுமே மொழி முதலாகும்.

    (எ.டு) யாடு (ஆடு) ; யாண்டு (ஆண்டு)

    8)
    குற்றியலுகரம் நுந்தை என்ற ஒரு சொல்லில் மட்டும் மொழி முதலாகும்.

    மேற்கூறிய கருத்துகளை நோக்கின் தொல்காப்பியர் காலத்தில் 94 எழுத்துகள் மட்டுமே மொழிக்கு முதலில் வந்துள்ளன என்பது அறியப்படும். இதைக் கீழ்வரும் பட்டியல் காட்டும்.

    பன்னீர் உயிர் மொழிமுதல்
    12
    க த ந ப ம x 12 உயிர்
    60
    சகர மெய் x அ ஐ ஒள நீங்கிய 9 உயிர்
    9
    வகர மெய் x உ ஊ ஒ ஓ நீ்ங்கிய 8 உயிர்
    8
    ஞகர மெய் x ஆ எ ஒ என்னும் 3 உயிர்
    3
    யகர மெய் x ஆ என்னும் உயிர்
    1
    மொழி முதல் குற்றியலுகரம்
    1
    மொத்தம்
    94

    2.5.2 மொழி இறுதி எழுத்துகள்

    தொல்காப்பியர் மொழி இறுதியில் வரும் உயிர் எழுத்துகளையும், மெய்யெழுத்துகளையும் எடுத்துக் காட்டியுள்ளார்.

  • மொழி இறுதி உயிர்கள்

    1)

    ஒளகாரம் நீங்கிய பதினோர் உயிர்களும் தனித்தோ மெய்யோடு சேர்ந்தோ மொழிக்கு இறுதியில் வரும். குறில்கள் தனித்து இறுதியில் வருவது அளபெடையில் ஆகும்.

    (எ.டு) பலா

    எகரம் மெய்யோடு சேர்ந்து ஈற்றில் வராது. அளபெடையில் தனித்து மட்டுமே ஈறாகும்.

    (எ.டு) ஏ

    2)

    ஒளகாரம் ககர, வகர மெய்களோடு சேர்ந்து மட்டும் மொழி இறுதியில் வரும்.

    (எ.டு) கௌ, வௌ

    3)

    ஒகர உயிர் நகர மெய் ஒன்றோடு மட்டும் சேர்ந்து இறுதியில் வரும்.

    (எ.டு) நொ (துன்பப்படு)

    4)

    உகர உயிர் சகர மெய்யோடு கூடி இரு சொற்களில் மட்டும் இறுதியாகும்.

    (எ.டு) உசு (உளுந்து) ; முசு (குரங்கு)

    5)

    உகர உயிர் பகர மெய்யோடு சேர்ந்து ஒரு சொல்லில் மட்டும் ஈறாகும். அச்சொல் தன்வினை, பிறவினை என்னும் இரண்டு பொருளிலும் வரும்.

    (எ.டு) தபு

    இதனை படுத்து(தாழ்த்தி)க் கூற, நீ சா எனத் தன்வினையாகும்; எடுத்து (உயர்த்தி)க் கூற, நீ ஒன்றினைச் சாவப் பண்ணு எனப் பிறவினையாகும்.

    6)
    குற்றியலுகரம் மொழி இறுதியில் வல்லின மெய்களின் மேல் வந்து இறுதியாகும்.
  • மொழி இறுதி மெய்கள்
  • 1)
    மெல்லின ஒலிகளில் ஙகர மெய் ஒழிந்த ஐந்தும், இடையின ஒலிகள் ஆறும் ஆகிய பதினொரு மெய்களும் மொழிக்கு இறுதியில் வரும்.
    2)

    நகர மெய் இரு சொற்களில் மட்டுமே இறுதியாகும்.

    (எ.டு) பொருந் (பொருந்துதல்) ; வெரிந் (முதுகு)

    3)

    ஞகர மெய் ஒரு சொல்லில் மட்டுமே இறுதியாகும்.

    (எ.டு) உரிஞ் (உராய்தல்)

    4)

    வகர மெய் நான்கு சொற்களில் மட்டுமே இறுதியாகும்.

    (எ.டு) அவ், இவ், உவ் (இவை மூன்றும் சுட்டுப் பெயர்கள்) தெவ் (பகை)

    2.5.3 மொழி இடை மெய்ம்மயக்கம்

    மொழி இடையில் ஒரு மெய் தன்னோடும் பிற மெய்யோடும் சேர்ந்து வருவதை மெய்ம்மயக்கம் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். க ச த ப எனும் நான்கு மெய்களும் தம்மொடு தாம் மட்டுமே மயங்கி வரும் ; பிற மெய்களோடு மயங்கி வாரா. ர, ழ எனும் இரு மெய்களும் பிற மெய்களோடு மட்டுமே மயங்கி வரும் ; தம்மோடு தாம் மயங்கி வாரா. ஏனைய பன்னிரண்டு மெய்களும் தம்மொடு தாமும், தம்மொடு பிறவுமாக மயங்கி வரும். ஆகவே தம்மொடு தாம் மயங்குவன ர ழ நீங்கிய பதினாறு மெய்களும் ஆகும். இம்மயக்கத்தைத் தொல்காப்பியர் உடனிலை எனக் குறிப்பிடுகிறார். தம்மொடு பிற வந்து மயங்குவன க ச த ப நீங்கிய பதினான்கு மெய்களும் ஆகும். இம்மயக்கத்தை மெய்ம்மயக்கு எனக் குறிப்பிடுகிறார்.

  • உடனிலை
  • ஒரு மெய்யின் முன்னர் அதே மெய் மயங்கி வருதல் உடனிலை என்பதை மேலே கண்டோம். இதை நன்னூலார் உடனிலை மெய்ம்மயக்கம் என்று குறிப்பிடுவார்.

    (எ.டு)
    பக்கம்
    - பக்க்அம்
    முந்நீர்
    - முந்ந்ஈர்
    பாட்டு
    - பாட்ட்
    தெவ்வர்
    - தெவ்வ்அர்

  • மெய்ம்மயக்கு
  • ஒரு மெய்யின் முன்னர் அம்மெய் அல்லாத பிற மெய்கள் மயங்கி வருவது மெய்ம்மயக்கு ஆகும். இதனை நன்னூலார் வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனக் குறிப்பிடுகிறார்.

    (எ.டு)

    மார்பு
    - மார்ப
    வீழ்து
    - வீழ்த
    பந்து
    - பந்த
    அம்பு
    - அம்ப்
    காட்சி
    - காட்ச்

    மேலே கூறப்பட்டவை இரண்டு மெய்களின் மயக்கம் பற்றியாகும். மொழி இடையில் மூன்று மெய்கள் அடுத்தடுத்துச் சேர்ந்து வருவதையும் தொல்காப்பியர் எடுத்துக் காட்டுகிறார்.

  • மூன்று மெய்களின் மயக்கம்
  • ய, ர, ழ ஆகிய மூன்று மெய்களின் முன்னர், க, ச, த, ப ஆகிய நான்கு மெய்கள் இரட்டித்து வரும்.

    வாய்ப்பு
    - (ய்ப்ப்)
    தேர்ச்சி
    - (ர்ச்ச்)
    வாழ்க்கை
    - (ழ்க்க்)
    வாழ்த்து
    - (ழ்த்த்)

    ங, ஞ, ந, ம ஆகிய நான்கு மெய்கள் இரட்டித்தும், தமக்கு இனமான வல்லின மெய்களாகிய க, ச, த, ப ஆகிய நான்கோடு முறையே சேர்ந்தும் வரும்.

    மெய்ம்மை
    (ய்ம்ம்)
    வீழ்ந்தது
    (ழ்ந்த்)

    இதுகாறும் தொல்காப்பியர் தமிழ் எழுத்துகளின் மொழி முதல், இடை, இறுதி வருகை முறை பற்றிக் கூறியவற்றைப் பார்த்தோம். இவ்விதிகள், தமிழ் மொழியின் அமைப்பை அவர் காலத்திற்குப் பின்பும் பன்னெடுங் காலமாகச் சிதைந்து விடாது காத்து வந்துள்ளன. தமிழில் பிறமொழிச் சொற்கள், குறிப்பாக வடமொழிச் சொற்கள் வந்து கலக்கும்போது அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள இவ்விதிகள் இடம் தரவில்லை. சான்றாக, க, ச, த, ப ஆகிய மெய்களை அடுத்து அம்மெய்களே வரவேண்டும்; பிற மெய்கள் வருதல் கூடாது என்பது தொல்காப்பியர் வரையறுத்துக் கூறிய விதி. ஆனால் தொல்காப்பியர் காலத்திற்குப் பின்பு சங்க காலம் தொட்டுத் தோன்றிய பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் வாக்யம், அக்ரமம், சுக்லம், வச்ரம், வாத்யம் போன்ற வடமொழிச் சொற்கள் வந்து கலந்தன. இச்சொற்களின் இடையில் க்ய், க்ர், க்ல், ச்ர், த்ய் என்ற மெய்ம்மயக்கங்கள் காணப்படுகின்றன. இவை தொல்காப்பியரின் விதிக்குப் புறம்பானவை. எனவே இச்சொற்கள் அவ்விலக்கியங்களில் தொல்காப்பியர் கூறிய தமிழ் ஒலியமைப்பிற்கு ஏற்பக் கீழ்க் கண்டவாறு மாற்றி ஏற்றிக் கொள்ளப்பட்டன.

    அக்ரமம்
    - அக்கிரமம்
    இவற்றில் தமிழில் வரக்கூடாத மெய்க்கூட்டுகளின் இடையே உயிரெழுத்து ஒன்றைநுழைத்துத் தமிழின் ஒலியமைப்பு காக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
    சுக்லம்
    - சுக்கிலம் (மருந்து)
    வச்ரம்
    - வச்சிரம் (இந்திரனது படை)
    வாத்யம்
    - வாத்தியம் (இசைக்கருவி)

    இதுபோலத் தமிழ் மொழியின் ஒலியமைப்பைக் காலந்தோறும் தனித் தன்மையுடன் பேணிக் காப்பதற்கு ஏற்ற விதிமுறைகளைத் தொல்காப்பியர் வகுத்திருப்பது தனிச் சிறப்பாக உள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-08-2017 11:25:25(இந்திய நேரம்)