தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2-2:1-பாரத நாடு

  • 2.1 பாரத நாடு

    பாரத நாடு பழம்பெருமை வாய்ந்த நாடு. சிறந்த பாரம்பரியத்தையும், உயர்ந்த பண்பாட்டையும் உடைய நாடு. இங்குத் தோன்றிய சிந்துவெளி நாகரிகம், உலக நாகரிகங்களுள் தொன்மையானது. நில வளமும் நீர்வளமும் கலைவளமும் மிகுந்த நாடு. இதன் சிறப்பினைப் பாரதியார் பல பாடல்களின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

    2.1.1 ‘பாருக்குள்ளே நல்ல நாடு’

    உலகில் உள்ள நாடுகளுள், பாரத நாடு ஒரு நல்ல நாடு. அறிவிலும், வீரத்திலும், மானத்திலும், கற்பிலும், இரக்கத்திலும், ஆன்மீகத்திலும் சிறந்த ஒரு நாடு. இவற்றைக் கருதித்தான் பாரதியார்,

    பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
    பாரத நாடு

    (பாரத நாடு - பல்லவி)

    என்று புகழ்கிறார். மேலும் இந்த நாட்டின் பெருமைக்கு என்ன காரணம் என்பதனையும் வரிசையாக எடுத்துக் கூறுகிறார். உலகிலுள்ள மிக உயர்ந்த மலையாகிய இமயமலையை உடைய நாடு. வற்றாத கங்கை நதியை உடைய நாடு. வேதங்களை உடைய நாடு. கௌதம புத்தர் தோன்றியதும் இந்நாடு. இத்தகைய சிறப்புகளைப் பாரதியார் தம் பாடல்களில் பாடிப் பெருமை அடைகிறார்.

    மன்னும் இமயமலை எங்கள் மலையே
         மாநிலம் மீதிது போல்பிறிது இலையே!
    இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் ஆறே
         இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?


    பூரண ஞானம் பொலிந்த நன்னாடு
         புத்தர் பிரான்அருள் பொங்கிய நாடு
    பாரத நாடு பழம் பெரும் நாடே
         பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே.

    (எங்கள் நாடு-1,2)

    இவ்வாறு, பாரத நாட்டின் பெருமையைப் பற்றிப் பாடி மகிழ்கிறார் பாரதியார்.

    2.1.2 தாயின் மணிக்கொடி

    ஒரு நாடு இன்னொரு நாட்டை கைப்பற்றியதற்கு அடையாளமாக, வெற்றிபெற்ற நாட்டின் கொடியைக் கைப்பற்றப்பட்ட நாட்டின் கோட்டையில் பறக்கவிடுவார்கள். கொடி ஒரு நாட்டின் சின்னம். ஆட்சியின் அடையாளம். அரசனின் அடையாளம். ஒரு நாட்டின் மானம் அந்த நாட்டின் கொடியில் இணைந்திருக்கிறது. கொடிக்குக் கொடுக்கும் மரியாதை நாட்டுக்குக் கொடுக்கும் மரியாதையாகக் கருதப்படும். ஒரு நாட்டின் கொடியை அவமதித்தால், அது அந்த நாட்டை அவமானப்படுத்தியதாகக் கொள்ளப்படும். தம் நாட்டின் கொடியைக் காப்பாற்றுவதற்காக, தம் உயிரையே மாய்த்துக் கொண்ட வீரர்கள் பலர் இருந்திருக்கின்றனர். கொடிகாத்த திருப்பூர் குமரன் என்ற தேசபக்தரே இதற்குத் தகுந்த உதாரணம். எனவே, ஒரு நாட்டின் ஆட்சியை, அரசனை, மக்களை மதிக்க விரும்புவோர், அந்நாட்டின் கொடியை முதலில் மதிக்க வேண்டும். இன்றைக்கும் கொடிக்கு வணக்கம் செலுத்துவது மரபாக உள்ளது.

    ஒரு நாட்டின் கொடிக்கு எத்தகைய சிறப்பு உண்டு என்பதை அறிந்த பாரதியார், இந்திய தேசியக் கொடியின் பெருமையைப் பலவாறு புகழ்ந்து பாடுகிறார்.

    பாரதத்தின் தேசியக் கொடியின் புகழைப் பாட முன் வந்தார் பாரதியார். இந்தியா சுதந்திரம் அடையுமுன்பே அதற்கொரு கொடியைக் கற்பனை செய்து மனக் கண்ணில் பறக்கவிட்டு, அதை வணங்க அனைவரையும் அழைக்கிறார். இது சுதந்திரம் அடைந்தே தீருவோம் என்ற அவருடைய நல்லார்வ நலத்தைப் புலப்படுத்துகிறது (Optimism).
     

    தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத்
    தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

    (தாயின் மணிக்கொடி : பல்லவி)

    இந்தியத் தாயின் கொடி ஒளிபொருந்திய ஒன்று என்பதனை வெளிப்படுத்த, ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ என்று குறிப்பிடுகிறார். மணி என்றால் ஒளி என்றும் ஒரு பொருள் உண்டு. அடிமை இருளில் அகப்பட்டிருக்கும் பாரதத்திற்குச் சுதந்திர ஒளி வீச வேண்டும். அதையே இந்தக் கொடி புலப்படுத்துகிறது என்கிறார் பாரதி.

    சுதந்திரப் போராட்டத்தின் தாரக மந்திரமாக (ஒன்றை அடைவதற்கு மிக மிக ஆதாரமானதாகவும் உள்ளத்தில் என்றும் நீங்காமல் நிற்கும்படியாகவும் ஏற்றுக் கொள்ளப்படுவது) ஒலிக்கப்பட்ட ஒரு குரல் ‘வந்தே மாதரம்’ என்பது.  ‘வந்தே மாதரம்’ என்பது தாய் மண்ணைப் போற்று என்று பொருள்படும். ‘வந்தே மாதரம்’ என்ற தாரக மந்திரத்தையே தலைப்பாக வைத்து வங்கக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி கவிதை இயற்றினார். அக்கவிதையின் ஈர்ப்பில் கவரப்பட்ட பாரதியார் அதனை அழகுத் தமிழில் கவிதையாக்கித் தந்துள்ளார். அந்தத் தாரக மந்திரம் இந்தக் கொடியின் பொறியில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது பாருங்கள் என்கிறார் பாரதி.


     

    ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
         உச்சியின் மேல் ‘வந்தே மாதரம்’ என்றே
    பாங்கின் எழுதித் திகழும் - செய்ய
         பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!

    (தாயின் மணிக்கொடி பாரீர்- 1)

    (பாங்கின் = அழகின், செய்ய = செப்பமான, சிறந்த)

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:53:06(இந்திய நேரம்)