தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

4-4:0-பாட முன்னுரை

  • 4.0 பாட முன்னுரை

    உலகில் இருப்பவற்றையும், இயற்கை நியதிகளையும் கவனித்தும் சோதித்தும், நிரூபித்து வகைப்படுத்தியும் காரண காரியத்தோடு பார்க்க வேண்டும் என்று நினைப்பது அறிவியல் நோக்கு.

    ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அதன் அணுகுமுறை மிகவும் முக்கியமானது. பழையன கழிதலும் புதியன புகுதலும் தவிர்க்க முடியாதவை. இன்றைய உலகொடு இந்திய சமுதாயம் இணைந்து முன்னேற வேண்டுமென்றால் புதியன புகுத்தப்பட வேண்டும். பாரதி வாழ்ந்த காலத்தில் இந்தியாவில் வேளாண்மையே முக்கியமான தொழிலாக இருந்தது. அதே சமயம், மேலை நாடுகள் தொழில் யுகத்தில் இந்தியாவை விட ‘ஒரு யுகம்’ முன்னின்றன. இந்திய நாட்டு மொழி, கலை, பண்பாடு அனைத்தும் அவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருந்தன. பழையன பாராட்டுவோரும் புதியன போற்றுவோரும் காணப்பட்டனர். இவற்றுள் எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது? தெளிவற்ற நிலையில் இருந்த தமிழ் மக்களுக்கு,

     

    . . . .நன்மையும் அறிவும்
    எத்திசைத் தெனினும், யாவரே காட்டினும்
    மற்றவை தழுவி வாழ்வீ ராயின்
    அச்சமொன்றில்லை . . . . . . .

    (தமிழச் சாதி, அடி: 119-122)

    (தழுவி = ஏற்றுக் கொண்டு)

    என்று பாரதியார் வழிகாட்டி அறிவுரை கூறுகிறார்

    பழையன எல்லாம் சிறந்தவை என்று கூற முடியாது. அவையே எல்லாமாகி விடுவதில்லை. பழையன பயனற்றுப் போகும் போது அவற்றைத் தயங்காது நீக்கி விட வேண்டும். அதைப்போல், புது உலகில் மலரும் நல்லனவற்றை ஏற்றுக் கொள்ள மனக் கதவுகள் திறந்திருக்க வேண்டும். மனத்தில் சரியென்று பட்ட வழியைத் தயங்காது ஏற்பது அறிவியல் உலகின் பண்பாடு. அதற்கு வழிகாட்டுவது அறிவியல் பார்வை. பாரதியிடம் அப்பார்வை காணப்பட்டது.

    ‘பாரதியின் பாடல்களின்கற்பனை வளம் இருக்கும் அளவிற்கு அல்லது அதற்கு மேலும் கருத்து வளம் காணப்படுகிறது. அவரிடம் தமிழையும் நிலையான தத்துவத்தையும் காண்கிறோம். பாரதியின் இந்தத் தெளிவிற்குத் துணை நின்றது அவரது அறிவியல் பார்வை’

    என்பார் அறிஞர் வா.செ. குழந்தைசாமி,

    அறிவியல் துறையின் பிரிவுகளான புவியியல், வானவியல், உயிரியல், பொருளறிவியல், பொறியியல், வேளாண்மை, உடற்கல்வி ஆகியன பற்றியும், அறிவியல் பாடங்கள் கற்பிக்கும் அணுகு முறை பற்றியும் பாரதி கூறியதை அவர் பாடல்களிலும் கட்டுரைகளிலும் பார்க்க முடிகிறது.குறிப்பாகத் தேசியக் கல்வி என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரையில் இவற்றை விளக்கிச் செல்கிறார். அவை பற்றிய விவரங்களை இப்பாடத்தில் பார்க்கலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:38:12(இந்திய நேரம்)